வெள்ளி, 30 நவம்பர், 2012

தென்னாட்டுச் செல்வங்கள் - 1

கணபதியும் மகிஷாசுர மர்த்தனியும் 

ஐம்பதுகளில் ஆனந்த விகடனில் ‘தேவனும்’, ‘சில்பியும்’ இணைந்து அளித்த ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ தொடருக்கு அடிமையான பல்லாயிரக் கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்.

தேவனையும், சில்பியையும் நன்கு அறிந்த ஓவியர் ‘கோபுலு’வின் சொற்களிலேயே, இத்தொடர் எப்படித் தொடங்கியது என்று பார்க்கலாம்.

“ .... 1946-ஆம் ஆண்டு , டயாபடீஸ் முற்றிப்போனதன் காரணமாகப் படுத்த படுக்கையாகி, அமரராகிவிட்டார் மாலி. அதன்பின், எங்களை வழி நடத்தியவர் எழுத்தாளர் தேவன். சில்பியின் தெய்வீக ஓவியங்களுக்கு அவர் பரமரசிகர். தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்களில் இருக்கும் விக்கிரங்களின் நேர்த்தியை, சிற்பங்களின் அழகை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, 1948-இல் ஆனந்த விகடனில் ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ என்னும் தலைப்பில் ஒரு தொடரைத் தொடங்கத் திட்டமிட்டார் ‘தேவன்’. தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து, பிரபல கோயில்களில் உள்ள சிற்பங்களை வரைவதற்கு சில்பியைத் தயார்படுத்தினார். சில்பியும் மிக ஆர்வத்தோடு, அந்தப் பணியை ஏற்றுக் கொண்டார். உடனே காஞ்சிபுரம் சென்று, காஞ்சிப் பெரியவரிடம் ஆசி பெற்றுக் கொண்டார். “

இந்தத் தொடர் இன்னும் நூலாக வரவில்லை என்பதைக் குறிப்பிடவேண்டும்.*

எப்படித் தொடர்கதைகள் மூல ஓவியங்களுடன் அச்சில் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேனோ, அது போலவே ‘சில்பியின்’ அமர ஓவியங்களும் ‘தேவ’னின் எழுத்துகளுடன் வருவது தான் சிறப்பு என்பது என் கருத்து.

என்னிடம் உள்ள சில ‘ செல்வங்களை’ அவ்வப்போது இங்கிடுவேன்.  படித்துவிட்டு நீங்களே சொல்லுங்கள்!

கச்சேரியை முதலில் ‘வாதாபி கணபதி’யுடன் தொடங்கலாமா?




[நன்றி; விகடன்]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

பி.கு.

 எத்தனை பேருக்குக் ‘கல்கி’யின் ‘சிவகாமியின் சபதம்’ நினைவிற்கு வருகிறது? :-))

==================

இந்தக் கட்டுரையைப் படித்த கவிஞர் சிவசூரியின் கவிதைகள்:

இடையொரு புறமே சாய்த்தே
     எழிலுற நிற்கும் வண்ணம்
படைபல ஏந்திக் காளி
     பாரினைக் காக்க வந்து
தடையற இசையைக் கேட்டுத்
    தண்டமிழ்த் திருவா ரூரில்
கடைவிழி கருணை சிந்தக்
    கண்ணெதிர் சிலையாய் நின்றாள்!


மகிடனைக் கொன்ற தேவி
    மங்கலச் சிலையைக் கண்டு
முகிலெனக் கருணை பெய்யும்
    மோகனப் படமாய்த் தீட்டி
நகமொடு சதையும் கொண்டு
    நம்மெதிர் நிற்கச் செய்தார்
அகவிழி கொண்டு நோக்கும்
    அற்புதச் "சில்பி" யாரே!


புல்லெலாம் புலவர் போலே
    புதுப்புதுப் பாடல் செய்யும்
வில்லெலாம் புருவம் ஆகும்
    விழியெலாம் காதல் ஏந்தும்
கல்லெலாம் இசையைச் சொல்லும்
    கழலெலாம் ஜதியைச் சொல்லும்
இல்லெலாம் இறைவன் நாமம்
    இசைத்திடும் திருவா ரூரே!


சிவனாரின் பாதம் பட்டச்
   சீர்மிகு திருவா ரூரில்
பவநோயும் அற்றுப் போகும்
   பாரினில் இவ்வூர் தன்னில்
எவரேனும் பிறந்தால் போதும்
   இன்பங்கள் எல்லாம் துய்த்துத்
தவயோகம் செய்தார் போலும்
   தண்ணடி அடைவார் திண்ணம்!


முகமெலாம் மலர்ந்து நிறக
   முக்தியும் அளிக்கும் ஊரைச்
சகமெலாம் அறியும் வண்ணம்
   தண்டமிழ் மொழியும் சேர்த்து
மிகமிகச் சுவையாய் அன்று
   விகடனில் வந்த தெல்லாம்
இகபர சுகத்தை ஈய
   இட்டவர் வாழி வாழி!


கரமலர் இருந்த தத்தை
   கழலடி நோக்க வேண்டி
தரையினில் அமரக் கண்டு
   தாமரைக் கரத்தை நீட்டி
வரையிலா அன்பைக் காட்டி
   வாவெனச் சொல்லல் போலும்
வரமதை நமக்கெல் லாமே
   வழங்கிடும் எழிலைப் பாரீர்!


கழலடி அழகா இல்லை
   கரமலர் அழகா இல்லை
விழிமலர் அழகா இல்லை
   விரியருள் அழகா இல்லை
மொழிதமிழ் அழகா மக்கள்
   முகமதி அழகா இல்லை
பொழியிசை அழகா என்றே
   புள்ளது வியந்த வாறோ!


சிலையது அழகா இல்லை
   சித்திரம் அழகா நிற்கும்
நிலையது அழகா இல்லை
   நீள்விழி அழகா இல்லை
கலையது அழகா இல்லை
   கவிதையின் அழகா என்றே
நிலமிதில் உள்ளோர் போலே
   நின்றதோ கிளியும் அங்கே!


அக்கமும் கரத்தில் கண்டேன்
    அழகிய கிளியும் கண்டேன்

சக்கரம் சங்கம் கண்டேன்
    தனுவுடன் வாளும் கண்டேன்
முக்கணன் சூலம் போலும்
    மூவிலை மின்னக் கண்டேன்
திக்கெலாம் காப்ப தற்காய்த்
    திகழ்கரம் எட்டும் கண்டேன்.


கரத்திலே படைகள் கொண்டும்
    கண்ணிலே கருணை கொண்டும்
வரத்தினை அளிக்க நிற்கும்
    வலக்கர அழகைக் கண்டேன்
சரம்பல மார்பில் பூண்ட
    தாயெனக் கண்ட தாலே
வரையிலா இன்பம் கொண்டேன்
    வணங்கினேன் அம்மா நானே

பஞ்சமுக ஆனைமுகன்

ஆயிரம் இதழ்கள் கொண்ட
   அழகிய தாமரை தோன்ற,
சீயமும் அதன்மேல் தோன்ற,
   சிறப்புடை மூத்தோன் ஆனைச்
சேயவன் அதன்மேல் இங்கே
   செந்தமிழ்த் திருவா ரூரில்
தாயவள் தன்னைக் காணத்
   தலைபல கொண்டு தோன்றும்.


சிங்கத்தின் மேலே ஆனை
   திகழ்ந்திடும் அழகைக் கண்டே
அங்கத்தில் புளகம் தோன்ற
    அருந்தமிழ் துணையாய்த் தோன்ற
சங்கத்தில் கவியும் தோன்ற
   சந்தமும் உடனே தோன்ற
எங்கெங்கும் இன்பம் தோன்ற
   ஐந்தலை ஐயன் தோன்றும்
.

தண்மதி வானில் தோன்ற
   தாமரை தரையில் தோன்றும்
மண்பதி திருவா ரூரில்
   மனத்தினில் மகிழ்வு தோன்றக்
கண்ணெதிர் காளை தோன்றும்
   கறையுடைக் கண்டன் தோன்றும்
விண்ணவர் கோடி கோடி
   வியப்புடன் தோன்றும் தோன்றும்.


புவியுளோர் கூட்டம் தோன்றும்
   புகழெலாம் செப்பத் தோன்றும்
கவியெலாம் கதறத் தோன்றும்
   கரிமுகம் ஐந்தும் தோன்றும்
விமலனின் மகனைக் காண
   விழியெலாம் விரியத் தோன்றும்
கமலமா குளமும் தோன்றும்
   கவின்மிகு திருவா ரூரே.


எழுசுரம் காற்றில் தோன்றும்
   இசையுடன் பாடல் தோன்றும்
முழுமதி வானில் தோன்றும்
   முத்தமிழ் புவியில் தோன்றும்
பொழில்பல சூழும் கோயில்
   பொலிவுடன் புதுமை தோன்ற
எழிலுடைப் பிள்ளை யாரின்
   இன்னுரு தோன்றும் தானே.



 . . . சிவ சூரியநாராயணன்.

ஆசுகவி சிவசூரிக்கு என் பாராட்டுகள், நன்றி!

தொடர்புள்ள பதிவுகள்:

தென்னாட்டுச் செல்வங்கள் : பிற கட்டுரைகள்

பின் குறிப்பு: 
* இத் தொடர் 2013-இல்  விகடன் நூல்களாக வெளிவந்தன. 
’விகடனின்’ நூல்கள் : ஒரு விமர்சனம் 

திங்கள், 26 நவம்பர், 2012

'சாவி - 7 : ‘அநுமார்' சாமியார்

’அநுமார்' சாமியார்
 சாவி

                                       



ஆலம் விழுதுபோல் சடை சடையாகத் தொங்கும் பரட்டைத் தலைமயிர். கையிலே ஒரு பை; இடுப்பிலே காவி வேட்டி. தாடியும் புருவமும் போக நெற்றியிலே உள்ள இடைவெளி முழுதையும் பட்டை நாமம் மூடி மறைத்துக் கொண்டிருக்கும். இப்படிப்பட்ட ஓர் ஆசாமியை எங்கோ பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அவர்தான் அநுமார் சாமியார்!

அவருக்கு என்ன வயசோ, எந்த ஊரோ, என்ன பேரோ, எங்கே பிறந்து எங்கு வளர்ந்தவரோ?--யாருக்குமே எந்த விவரமுமே தெரியாது.

[ அசல்: கோபுலு, நகல்: சு.ரவி ] 

                                  

அவர் தெருவில் நடந்து சென்றால், ''டேய், அநுமார் சாமியாருடா!'' என்று பத்துப் பிள்ளைகளாவது அவர் பின்னோடு நடந்து செல்வார்கள்.

அநுமார் சாமியார் பாட்டு பாடிக்கொண்டே நடப்பார். ஆனால், பிச்சை எடுக்கமாட்டார். பார்ப்பதற்குப் பைத்தியக்காரரைப்போல் காணப்படுவார். ஆனால், அவர் பைத்தியக்காரர் அல்ல.

ஊர் ஊராகப் போய், சுவர் சுவராக அநுமார் படம் எழுதுவதுதான் அவருடைய வேலை, லட்சியம் எல்லாம். அவருடைய பையில் என்னென்னவோ இருக்கும். காவிக் கற்கள், உற்சவ நோட்டீசுகள், ஒரு பித்தளைச் செம்பு, கிழிசல் கம்பளி, வேர்க்கடலை, நாமக்கட்டி --இவைதான் அவருடைய ஆஸ்தி. பகலெல்லாம் சுற்றிவிட்டு இரவில் ஏதாவது ஒரு மரத்தின் கீழோ, சத்திரத்துத் திண்ணையிலோ போய்ப் படுத்துக்கொள்வார். அதுவும் இஷ்டமிருந்தால்தான். இல்லையென்றால் அதுவும் இல்லைதான். இந்த உலகத்தோடு ஒட்டியும் ஒட்டாமலும் 'தாமரை இலைத் தண்ணீர்போல்' வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு துறவி அவர்.


[ ஓவியம்: நடனம் ]


பொழுது விடியும் முன்பே ஆற்றிலோ, குளத்திலோ இறங்கித் தலை முழுகிவிட்டு அந்த நாலுமுழக் காவித் துண்டையும் துவைத்து உலர்த்திக் கட்டிக்கொண்டு பரந்த நெற்றி முழுதும் பட்டை நாமத்தைக் குழைத்துப் போட்டுக் கொள்வார்.

பிறகு, ஊருக்குள் சென்று ஏதாவது ஒரு கிளப்புக்குள் நுழைந்து, ''ஆண்டவனே, இந்தக் கட்டைக்கு என்ன கொடுக்கிறீங்க?'' என்று கேட்பார். இரண்டு இட்டிலியும் ஒரு கப் டீயும்தான் அவருடைய காலை ஆகாரம் என்பது கிளப்புக்காரர்களுக்குத் தெரியும்.

ஆகாரம் முடிந்ததும் அதற்குண்டான காசைக் கொடுத்துவிட்டு, கடைத்தெருப் பக்கம் கிளம்பிவிடுவார் சாமியார். போகும்போதே காலிச் சுவர் கண்ணில் தென்படுகிறதா என்று பார்த்துக்கொண்டுதான் போவார்.

பள்ளிக்கூடச் சுவர், கோயில் மதில் சுவர், முனிசிபாலிடிச் சுவர் இப்படி எத்தனை சுவர்கள் இல்லை? ஏதாவது ஒன்று அவருக்கு அகப்பட்டுவிடும். அவ்வளவுதான், பையிலுள்ள காவிக் கட்டிகளை எடுத்துத் தண்ணீரில் குழைத்துக் குச்சி மட்டையைக் கொண்டு சுவரில் அநுமார் சித்திரம் எழுத ஆரம்பித்துவிடுவார். அநுமார் சித்திரம் என்றால் அதில் எத்தனை எத்தனையோ வகை!

சஞ்சீவி பர்வதத்துடன் பறக்கும் அநுமார்!

விசுவ ரூப தரிசன அநுமார்.

சீதைக்குச் சூடாமணி அளிக்கும் அநுமார்.

இராவணனுக்கு எதிரில் வாலைக் கோட்டையாகக் கட்டி அதன்மீது உட்கார்ந்திருக்கும் அநுமார்.

இராம பட்டாபிஷேகத்தில் பயபக்தியுடன் மண்டியிட்டு உட்கார்ந்திருக்கும் அநுமார்.

சில சுவர்களில் காவிக் கட்டிகளால் சித்திரிப்பார். சில சுவர்களில் சிவப்பு வர்ணத்தைக் கொண்டே எழுதுவார்.

பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளும், தெருவில் திரியும் சோம்பேறிச் சிறுவர்களும் அவர் எழுதும் அநுமார்  சித்திரத்தைக் கண்கொட்டாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பார்கள்.

இப்படி, பகல் முழுதும் எழுதுவார். சில சமயங்களில் இரவில்கூட எழுதிக்கொண்டிருப்பார்.

இன்றைக்குத் திருப்பதி, நாளைக்கு நாமக்கல், அதற்கு மறுநாள் பழநி என்று மந்திரிகளைப்போல் வருஷம் முழுவதும் சுற்றுப்பயணந்தான் அநுமார் சாமிக்கு.

நடக்க முடியாவிட்டால்தான் பஸ்ஸில் ஏறுவார். பணம் கொடுத்து டிக்கெட்டு வாங்கிக்கொண்ட பிறகே பஸ்ஸுக்குள் ஏறுவார்.

''சாமியாரே, உங்களுக்கு எதுக்கு டிக்கட்?'' என்று கண்டக்டர் சொன்னபோதிலும் கேட்கமாட்டார்.

''அப்பனே! இந்தக் கட்டை யாருக்குப் பணம் சேர்த்து வைக்க வேணும்?''

''சாமியார் எதுவரைக்கும் போகணும்?'' என்றுதான் பக்தியோடு கேட்பார்கள். அவருக்கு எந்த இடத்திலும் உபசாரந்தான். கோடைக்காலம் வந்தால்தான் அவர் ஓரிடத்தில் தங்குவார்.

       நாலு சாலைகள் கூடும் சந்திப்பிலோ, சந்தைகள் கூடுமிடத்திலோ, உற்சவம் நடைபெறும் இடங்களிலோ, அநுமார் சாமியார் 'தண்ணீர்ப் பந்தல்' போட்டுவிடுவார். பந்தலுக்கு முன்னால் 'அநுமார் தர்ம கைங்கரியம்' என்று எழுதியிருக்கும்.

ஒரு சிறு தென்னங்கீற்றுப் பந்தல், அதற்குள்ளே நீர்மோர், பானகம் இரண்டையும் பானைகளில் நிரப்பி வைத்துக் கொண்டு, ஏழை எளியோருக்கு வழங்குவார்.

தர்ம கைங்கரியத்துக்கு வேண்டிய பொருளுக்கும் பணத்துக்கும் அவர் யாரையும் தேடிச் செல்லமாட்டார். அவ்வளவும் அவரைத் தேடியே வரும்.

பைக்குள் செப்பு அநுமார் கவசங்கள் நிறைய வைத்திருப்பார். சிறு குழந்தைகளைக் கண்டால் அந்தக் கவசத்தில் ஒன்றை எடுத்து அரைஞாணில் கட்டிவிடுவார்.

அந்த நேரங்களில் குழந்தைகள் அவரைப் பூச்சாண்டி என நினைத்து அலறும்.

''அப்பனே, ஆண்டவா, அழாதே'' என்று அன்போடு கூறுவார் சாமியார்.

கோயில்களில் கிடைக்கும் பிரசாதந்தான் அவருக்கு ஆகாரம்.

ஊருக்கு ஓர் அநுமார் கோயில் கட்டிவிடவேண்டுமென்பது அவர் ஆசை.

சாமியார், அநுமார் சித்திரம் போட்டுக்கொண்டிருக்கும் போது சாலை வழியே போகும் படித்த அறிவாளிகளில் சிலர், ''இது ஒரு மாதிரிப் பைத்தியம். எந்தச் சுவரைக் கண்டாலும் அநுமார் படம் எழுதிக்கொண்டிருக்கும்'' என்பார்கள். அவர்களிலேயே வேறு சிலர், ''கண்ட கண்ட ஆபாச வார்த்தைகளை எழுதிச் சுவர்களைப் பாழாக்கும் பைத்தியங்களைக் காட்டிலும் இந்தப் பைத்தியம் எவ்வளவோமேல்'' என்று அதற்குப் பதில் கூறுவார்கள்.

 [நன்றி : ‘சாவி’யின் ‘கேரக்டர்’ நூல்  ]

பி.கு.

ஆசுகவி சிவசூரியின் மறுமொழி:

அநுமார் சாமியார்

சாவியின் எழுத்தினை எடுத்ததும் -ஒரு
   சாமி யாரினைப் படித்ததும்
ஆவியை என்னவோ செய்ததும் - ஒரு
   ஆனந்தம் என்னுளே பெய்ததும் -நான்
கூவி அலறிட வேண்டினும் -அதைக்
   கொட்டிடக் கவிமகள் தூண்டினும் - ஒரு
ஓவியம் போலதைத் தீட்டினும் - பிறர்
   உணர்த்திட வழியது காட்டுமோ.


நாடெங்கும் நடந்ததைச் பேசுவார் - அவர்
   நாமத்தைப் பெரிதாய்ப் பூசுவார்
வீடெங்கும் அவர்க்கென நாட்டுவார் -அந்த
   வைகறைக் குளியலைக் காட்டுவார்
காடெனத் தொங்கிடும் சடையுடன் -அவர்
   காவி நிறமொளிர் உடையுடன்
கோடுகள் கிறுக்கிடும் போதிலே - அங்கு
   குடிகொள்ளும் இறைசுவர் மீதிலே.

ஆண்டியைப் போலொரு தோற்றமும் - நல்ல
   அரசனைப் போலொரு ஏற்றமும்
நீண்டு வளர்ந்ததோர் தாடியும் -பாதி
   மேனியை மறைத்தது மூடியும்
கூண்டைத் துறந்ததோர் பறவையென -ஒரு
   கோல முகத்துடைப் பிறவியென
யாண்டும் இருந்திடும் சாமியிவர் - இவர்
   யாரென அறியார் பூமியிலே.

கோடையில் விழியெதிர் பார்த்திட - அந்தக்
   குடிபடை உடல்மிக வேர்த்திட
ஓடையாய் தாகம் தீர்த்திட - இவர்
   உவப்புடன் நீர்மோர் வார்த்திட
ஆடையில் அரைத்துணி போர்த்திட -ஒரு
   ஆண்டவன் எனப்புவி ஆர்த்திட
வாடை மிகுமலர் தோற்றிடத் - திகழ்
   வடிவினை எப்படிப் போற்றிட!


சிவ சூரியநாராயணன்.


தொடர்புள்ள பதிவுகள்: 

சாவியின் படைப்புகள்


வெள்ளி, 23 நவம்பர், 2012

லா.ச.ராமாமிருதம் -2: சிந்தா நதி - 2

19 . மணிக்கொடி சதஸ் - 2
லா.ச.ரா



தொடர்புள்ள முந்தைய கட்டுரை:

மணிக்கொடி சதஸ் -1

முதலில், இந்தத் தொடருக்கு ஓவியங்கள் வரைந்த உமாபதி அவர்களைப் பற்றிச் சில வார்த்தைகள். ’கல்கி’ , ‘பூந்தளிர்’ போன்ற பல இதழ்களிலும் நிறைய வரைந்திருக்கும் இவரைப் பற்றி அதிகம் விவரங்கள் எனக்குக் கிட்டவில்லை. கடைசியில், 20-ஆண்டுகளுக்கு முன் , “கல்கி’யில் வந்த ஒரு குறிப்புக் கிட்டியது:

 படிப்பில் முதல் மாணவனாகத் திகழ்ந்தபோதே   ஓவியத்திலும் ஆர்வம் கொண்டிருந்தார் இளைஞர் உமாபதி. சந்தர்ப்ப சூழ்நிலைகள் இவரைக் குடும்ப வியாபாரத்தைப் பொறுப்பேற்க நெருக்கின. வியாபாரக் கணக்குப் புத்தகத்தின் ஓரமெல்லாம் படம் போட்டுத்   துணை வணிக அதிகாரியின் கோபத்துக்கு உள்ளானார் உமாபதி. “நீ உருப்பட மாட்டாய்” என்று அவரால் ‘ஆசி’ கூறப் பெற்றவர், முதன் முதலில் ராஜாஜியைக் கார்ட்டூனாக வரைய , ஹிந்துஸ்தான் இதழின் அட்டைப்படத்தில் அது பிரசுரமாயிற்று. ‘கல்கி’ நடத்திய அமரர் சந்திரா நினைவுப் போட்டியில் பங்கேற்றுப் பரிசும் பெற்றார். பல்லாயிரக் கணக்கில் படங்களும், கேலிச் சித்திரங்களும் வரைந்துள்ள இவரை ஒரு ‘குவிக் ஆர்டிஸ்ட்’ என்கிறது ‘கல்கி’க் குறிப்பு.

‘சிந்தா நதி’த் தொடரில் லா.ச.ரா ‘மணிக்கொடி சதஸை’ப் பற்றி எழுதிய இரண்டாவது கட்டுரை இதோ.

=====




19. மணிக்கொடி சதஸ்
மெரினாவில் மணிக்கொடி எழுத்தாளர்களின் மாலைச் சந்திப்பு பற்றி இன்னும் கொஞ்சம் சொல்ல ஆசைப்படுகிறேன்.

ஸ்ரீ சிதம்பர சுப்பிரமணியன், சில சமயங்களில், பட்டானியோ, சுண்டலோ, வேர்க்கடலையோ வாங்கிக் கொடுப்பார். "அதோ கொஞ்சம் எட்டினாற்போல உட்கார்ந்திருக்காளே, அந்த மூணு பேருக்கும்கூட," என்று சுண்டல்காரனுக்கு எங்களைச் சுட்டிக் காட்டுவார். ஆளுக்கு ஒரு அணா, வெங்காயம், மாங்காய், தேங்காய், கடுகு தாராளமாகத் தாளித்து, நல்லெண்ணெய்ப் பசையுடன்- பஹு ருசி. அறிவுக்கு உணவோடு நாக்குக்கும் சற்று ஈயப்படும்.

இந்த மாலைக் கூட்டத்தைப் பற்றிய புலன், எந்த திராஷைக் கொடி மூலமோ, பெரிய இடங்களுக்குப் போய்விட்டது. வேடிக்கை பார்க்க வருவோர், வேவு பார்க்க வருவோர், என்னதான் வாண வேடிக்கை இங்கு எனும் அவாவில் வருவோருமாகக் கூட்டம் பெருக ஆரம்பித்தது. லேசாக நாங்கள் அரை டிக்கெட்டுகள் கவலைப்பட ஆரம்பித்து விட்டோம். அந்த, குறிப்பிட்ட ஏழெட்டுப் பேர் மட்டும் அடங்கிய குழுவில் நிலவிய அந்நியோன்யம், பேசப்படும் விஷயங்களின் ஆசாரம்,

தடங்கலற்ற கருத்துப் பரிமாறல்- சிறுகச் சிறுகப் பாதிக்கப்பட ஆரம்பித்து விட்டனவோ?

யாகத்தைக் கலைக்க அசுரர்கள் வருவதுபோல, பாதகமான அம்சங்களும் கலந்துகொள்ள முயன்றன. அரசியல், கக்ஷி, குதர்க்கம், அநாவசியமான பேச்சுக்களைப் புகுத்தி பாதைகளையே திருப்ப முயன்ற களைகள். ஆனால் அவைகளுக்கு இங்கு பேசப்பட்ட விஷயங்களின் தடங்கள் புரியாமல், எட்ட முடியாமல், சுவாரஸ்யம் குன்றித் தாமே உதிர்ந்து போயின.

கொஞ்ச காலத்துக்குச் சில ப்ரமுகப்ரஸன்னங்கள் பங்கு கொண்டன. (பெயர்களை உதிர்க்கப் போகிறேன்) டாக்டர் வி. ராகவன், ஸ்ரீ கே. சேஷாத்ரி, ஸ்ரீ கே. சந்திரசேகரன், 'றாலி', ஸ்ரீ எஸ். வி. வி. 'ஹிந்து' ஸ்ரீ ரகுநாத அய்யர் (விக்னேச்வரா) அவரவர் வெளியிடும் கருத்துக்களைக் காட்டிலும் அவர்கள் வெளியிடும் தோரணை- நாங்கள்- இளவல்களின் கவனத்தை ஈர்த்தது.

இரவு, தலையணைமேல் தலை, மாலை நடந்ததைத் திரும்ப எண்ணிப் பார்க்க முயல்கையில், ஏதோ ஒரு குறைபாடு, நெஞ்சீரல், குழந்தைக்கு முழுத் தோசையை ஓரத்தில் விண்டு கொடுத்தால் அந்த அதிருப்தி- இம்சித்தது கலப்படம். இந்தக் கூட்டம் தன் பழைய Size க்குத் திரும்புமா?

எங்களுடைய மெளனப் பிரார்த்தனை கேட்க வேண்டிய செவியில் விழுந்து விட்டாற் போலும். இந்த அதிகப்படி பங்காளர்கள், பார்வையாளர்கள், சேர்ந்த மாதிரியே, விலகியும் போயினர். அப்பாடி!

'ஹிந்து' ரகுநாத அய்யர் மட்டும் கொஞ்ச நாட்களுக்கு வந்து கொண்டிருந்தார். அவருடைய முன்னிலை, ஈடுபாடு மணிகொடி குழுவுடன் கலவை இழந்த மாதிரி எனக்குப் படவில்லை; ஆனால் அந்தச் சிறிய உடலுக்குள் என்ன புலமை! என்ன ஆகாசம்! மணிக்கணக்கில், கீழே இறங்காமலே, சிறகை அடிக்காமலே, அங்கேயே நீந்துவார்.

குறுமுனி.

மணிக்கொடி ஸதஸ், வேறு முகம் எடுக்க ஆரம்பித்தது.

ஸ்ரீசிதம்பர சுப்ரமணியன்(3), நாங்கள் சற்று எட்ட ஒதுக்கிப் பார்க்கும் கூட்டம் உள்பட, வீட்டுக்கு இந்த எழுத்தின் உபாஸகர்களை அழைத்து, பாயஸம் பச்சடியுடன் விசேஷ சாப்பாடு போட்டார்.

அடுத்து க.நா.சு. அதேபோல் விருந்து வைத்தார்.

துமிலன் விட்டில் நடைபெற்ற எஸ். கே. சி. பார்ட்டியில் (ஸ்வீட், காரம், காபி) ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

அவர் கேட்டுக் கொண்டபடி, வந்திருந்தவர் ஒவ்வொருவரும் எழுந்து நின்று தங்கள் பெயரைச் சொல்லிக் கூட்டத்துக்கு அறிமுகப்படுத்திக் கொண்டோம். என் முறை வந்ததும், "என் பெயர் லா.ச.ராமாமிருதம்!" என்று கூறிவிட்டு, என் பக்கலில் உட்கார்ந்திருந்த துமிலன் ஸாரைச் சற்றுப் பெருமிதத்துடன் பார்த்தேன். நான் எதிர்பார்த்த அடையாளம் அவர் கண்களில் கூடுவது காண அதைவிடக் குஷியாக இருந்தது. அப்போது அவர் புதுச் சிறுகதைகள் மட்டும் கூடிய கதைக்கோவை மாதம் ஒன்று வெளியிட்டுக் கொண்டிருந்தார்.

"ஓஹோ, இந்த மாஸம் வெளிவந்த 'சுமங்கல்யன்' (2)என்கிற கதையை எழுதியவர் நீங்கள்தானா? ரொம்ப நன்றாக இருந்தது. எந்த மொழியிலிருந்து தர்ஜமா அல்லது மொழி பெயர்ப்பு தெரியவில்லை."

பலூன் முகத்தில் வெடிக்கும்விதம் எப்படி?

இது சாக்கில் இதேபோல், மற்றொரு சம்பவத்தையும் சொல்லி விடுகிறேன்.

மேற்கூறிய சம்பவத்துக்குப் பின்னர்தான், 'ஹிந்துஸ்தான்' வாரப் பத்திரிகைக்கு ஒரு கதை அனுப்பியிருந்தேன். பத்து, பன்னிரண்டு நாட்கள் கழித்து அதன் விதியை அறியச் சென்றேன்.

"உங்களை ஆசிரியர் பார்க்க விரும்புகிறார்."

உள் அறையில் ஆசிரியர் உட்கார்ந்திருந்தார்.

"உட்காருங்கள். ஹூம், Yes, Mr.ராமாமிருதம், உங்கள் கதை 'துறவு'(2) மொழி பெயர்ப்பா, தழுவலா? Be frank with me you are a young man. உங்கள் கதை original ஆக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இவ்வளவு நன்றாக, புதுமையான டெக்னிக்கோடு அமைந்திருக்கும் ஒரு விஷயத்தை வெளியிடுவதற்கு எனக்கு இஷ்டம், சந்தோஷம். ஆனால் ஒரிஜினலை அக்னாலட்ஜ் பண்ணி விட்டால், நல்லது. பின்னால் சிக்கலுக்கு வழியில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா?"

இது எப்படி! ஆகவே ஒன்று. உள் பொறியை அவிக்க மழைத்துளி வேண்டுமென்பது கூட இல்லை. விரல் நுனித்தெறிப்பே போதும். நண்பனே, உன் கொழுந்தைக் காப்பாற்ற வேண்டுமானால் பொங்கியெழும் ரோசத்தை சுரனை கெட்ட அழும்பாக மாற்றிக்கொண்டு, உன் முதுகு எலும்பைப் பலப்படுத்திக் கொள்.

பின்னர், ஒரு சமயம், மைலாப்பூரில் ஒரு வீட்டில் அப்பா என்ன கூட்டம்! இது என்ன சினிமா காக்ஷியா, கலியாணமா? இல்லை, மணிக்கொடி எழுத்தாளர்களைச் சந்திக்க வந்தவர்கள். இவர்களில் முக்காலே மூணு வீசம் பேருக்கு மேல், இவர்களுக்கும் எழுத்துக்கும் வாசகர் என்கிற முறையிலேனும் சம்பந்தம் இருக்குமோ, சந்தேகம், வகையான தீனி. என்னென்ன பட்டுப் புடவைகள். விதவிதமான கொண்டைகள், நகை வரிசைகள்.

ஒரு அம்மாவின் 'மேக் அப்' அலங்காரம் அடேயப்பா!- புதுமைப்பித்தன்: "யார் இவங்க, மாஸ்டர் விட்டலுக்கு (1) ஸ்திரீ பார்ட்டா?" என்றதும், நாங்கள் குப்பென்று சிரித்துவிட்டு, சிரித்த காரணத்தை வெளியிட முடியாமல், திருதிருவென விழித்தது ஞாபகம் வருகிறது.

இப்போ ஒன்று தெளிவாயிருக்கும். எங்களுக்குத் தீனி பிடித்தது. தீனிக்கு முன்னாலேயோ, பின்னாலேயோ இலக்கியம் எனும் பெயரில் நடந்த கூட்டம் பிடிக்கவில்லை. இந்தக் குற்ற உணர்வில், நாளடைவில், அந்தத் தீனியும் பிடிக்கவில்லை.

விருந்துகளும் ஒய்ந்து போயின. எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டே!

திரும்பவும் குறிப்பிட்ட அந்த ஏழு எட்டு பேர் கடற்கரையில் சந்திக்கும் வாய்ப்புகளும் குறைந்து போயின. இரண்டாவது உலக மஹாயுத்தம், சுதந்திரப் போராட்டம், அவரவர் ப்ரச்னைகள்; ஸதஸ் கலைந்து விட்டது.

ஆயினும் என் போன்றவன் நெஞ்சில் அது நட்ட விதை வீண் போகவில்லை. துளிர்க்க ஆரம்பித்துவிட்டது.

யோசித்துப் பார்க்கிறேன். அந்தக் கடற்கரைச் சந்திப்பு கலைந்தது பேரிழப்போ? அதன் காரியம் முடிந்தது, லபியும் முடிந்தது என்றுகூட எண்ணிக் கொள்ளலாம்.

சந்திரோதயத்தில் என் கதை 'அபூர்வ ராகம்' (2) அப்போதுதான் வெளியாகியிருந்தது. பிற்பகல். எர்ரபாலு செட்டித் தெரு வழியே போய்க் கொண்டிருக்கிறேன். புதுமைப்பித்தனும் ந. பிச்சமூர்த்தியும் ஏதோ அவர்களிடையே, சுவாரஸ்யமாக, முக்கியமாகப் பேசிக்கொண்டு எதிர்நோக்கி வருகிறார்கள். முட்டிக்கொள்கிறாற்போல் நெருங்கிய பின்தான் அவர்கள் கவனம் என் மேல் பட்ட்து.

புதுமைப்பித்தன், வெடிப்பான அவர் சிரிப்பைச் சிரித்துவிட்டு, என்னை அணைத்துக் கொண்டார்.

"ஊம், நீங்களும் நம்மவரோடு சேர்ந்தாச்சு."

பிச்சமூர்த்தி பார்த்துக்கொண்டு நிற்கிறார். மீசைக்கும், தாடிக்கும் இடையே ஒளிந்து கொண்ட புன்னகை அவருடைய மூக்குத் துண்டு, விழியோரச் சுருக்கங்களில் வெளிப்படுகிறது. அவர் பார்வையே ஆசீர்வாதம். அவ்வளவுதான். போய்க் கொண்டேயிருக்கிறார்கள். போய் விட்டார்கள்.

வண்டி வாஹனப் போக்குவரத்துக்கு இலக்காக நடுத்தெருவில் நான் நிற்பதுகூடத் தெரியாமல், நடுத்தெருவில் நிற்கிறேன். பாதம் பூமியில் இல்லை.

சங்கப் பலகையால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டேன்.
* * * ------------------


பின் குறிப்பு : 1)  மாஸ்டர் விட்டல் = முதல் இந்தியப் பேசும் படமான ஆலம் ஆரா ( 1931) -இன் கதாநாயகன்.

2) ’சுமங்கல்யன்’ ‘அபூர்வ ராகம்’ கதைகள் லா.ச.ரா -வின் ‘பச்சைக் கனவு’ தொகுப்பில் உள்ளன. ‘துறவு’ ?

3)  சிதம்பர சுப்பிரமணியனைப் பற்றி ஒரு தனிக் கட்டுரையை எழுதியுள்ளார் லா.ச.ரா. அப்படியே செல்லப்பா, பிச்சமூர்த்தியையும் பற்றி. இவை ’உண்மையின் தரிசனம்’ என்ற லா.ச.ரா தொகுப்பில் உள்ளன.

[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

லா.ச.ராமாமிருதம் படைப்புகள்

வியாழன், 22 நவம்பர், 2012

லா.ச.ராமாமிருதம் -1: சிந்தா நதி - 1

17. மணிக்கொடி சதஸ் - 1
லா.ச.ரா


என்னை மிகவும் கவர்ந்த பல எழுத்தாளர்களில் லா.ச.ராமாமிருதம் ஒருவர். அவருடைய சுயசரித்திர நினைவுகள் ‘சிந்தா நதி’ என்ற பெயரில் தினமணி கதிரில் 1985-இல் ஒரு தொடராக வந்து என்னை உலுக்கியது. அதை 86-இல் நூலாக வானதி பதிப்பகம் வெளியிட்டது. அந்த நூல்  1989-இல் சாஹித்ய அகாதமியின் பரிசு பெற்றது.

’சல சல’ என்று தலைப்பிட்ட நூல்முன்னுரையில் லா.ச.ரா எப்படி இந்தத் தொடர் எழுந்தது என்று விளக்குகிறார். 1984-இன் கடைசியில் ‘தினமணி கதிரின்’ ஆசிரியர் ( கி.கஸ்தூரிரங்கன் ?), வாராவாரம் இரண்டு பக்கங்கள் அவருக்கு ஒதுக்குவதாய்ச் சொல்கிறார். எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என்கிறார். ஒரு சிறுகதைக்கே சுமார் மூன்று மாதங்கள் எடுத்துக் கொள்ளும் லா.ச.ரா எப்படி வாரா வாரம் ‘கதிரின்’ பசிக்குத் தீனி போட முடியும் என்று வியக்கிறார். கடைசியில், வாசகர்களின் அமோகமான ஆதரவே ‘சிந்தா நதி’ வற்றாமல் ஒரு வருடம் ஓடியதற்குக் காரணம் என்கிறார்.

அதிலிருந்து சில அத்தியாயங்களை ( உமாபதியின் அழகான ஓவியத்துடன்) இங்கிடுகிறேன். மூல ஓவியங்களுடன் இத்தொடர் அச்சில் வந்ததாகத் தெரியவில்லை.   ( நூலில் சில மாற்றங்கள் இருக்கலாம்; உதாரணமாக, ‘கதிரில்’ வரும்போது தலைப்புகள் இருக்கவில்லை. இவற்றைக் கவனிக்கும் பொறுப்பை லா.ச.ரா.வின் ஒரு தீவிர ரசிகரிடம்  விட்டுவிடுகிறேன்.)

இனி லா.ச.ரா.வே உங்களுடன் பேசட்டும்!

தி.ஜ.ர, சிட்டி, சி.சு. செல்லப்பா, ந.பிச்சமூர்த்தி , கு.ப.ரா.,க.நா.சு போன்ற பல இலக்கிய முன்னோடிகள் இந்த ‘நினைவலையில்’  தலைகாட்டுகிறார்கள். ( இதன் தொடர்ச்சியாக இன்னொரு கட்டுரையும் பின்பு எழுதினார் லா.ச.ரா; அதைப் பின்னர் இடுகிறேன்.)

இது ‘சிந்தா நதி’ யின் 17-ஆம் அத்தியாயம்.




=======
நாற்பத்து ஐந்து, நாற்பத்து ஏழு வருடங்களுக்கு முன் கூடவே இருக்கலாமோ? ஆனால் ஐம்பது ஆகவில்லை.

உங்களை மெரினாவுக்கு அழைத்துச் செல்கிறேன்.

சொல்லத் தேவையில்லையானாலும், கண்ணகி சிலை இல்லை.

ஸ்ப்- வே இல்லை. மூர்மார்க்கெட் பின்னால் வந்த பர்மா பஜார் போல் எல்லாப் பொருள்களும் வாங்கக்கூடிய சந்தையாக மெரினா மாறவில்லை. இத்தனை ஜனமும் இல்லை.

மாலை வேளை, வானொலியின் ஒலி பெருக்கிகளை மாட்டியாகிவிட்டது. அங்கேயே சுட்டு அப்பவே விற்கும் பஜ்ஜியின் எண்ணெய்ப் (எத்தனை நாள் Carry overஓ?) புகை சூழவில்லை. நிச்சயமாக இப்பொக் காட்டிலும் மெரினா ஆசாரமாகவும், சுகாதாரமாகவும், கெளரவமாகவும், காற்று வாங்கும் ஒரே நோக்கத்துடனும் திகழ்ந்தது. பூக்கள் உதிர்ந்தாற்போல், இதழ்கள் சிதறினாற் போல், எட்ட எட்ட சின்னச் சின்னக் குடும்பங்கள். நண்பர்களின் ஜமா. அமைதி நிலவுகிறது.

இதோ மணலில், வடமேற்கில் ப்ரஸிடென்ஸி கல்லூரி மணிக் கோபுரத்துக்கு இலக்காக அக்வேரியம் பக்கமாக என்னோடு வாருங்கள். ஆ, அதோ இருக்கிறார்களே, ஏழெட்டுப் பேர் கூடி உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

உஷ்-மணிக்கொடி சதஸ் கூடியிருக்கிறது. அதன் நடு நாயகமாக- அப்படியென்றால் அவர் நடுவில் உட்கார்ந்திருக்கவில்லை. எல்லாருமே சப்தரிஷி மண்டலம் போல் வரிசை இல்லாமல்தான் அமர்ந்திருப்பார்கள். நாயகத் தன்மையை அவருடைய தோற்றம் தந்தது.

அந்நாளிலேயே அவரைத் தென்னாட்டுத் தாகூர் என்று அந்த வட்டம் அழைக்கும். அந்த ஒப்பிடலுக்குப் பொருத்தமாகத்தான் இருந்தார். நடு வகிடிலிருந்து இருமருங்கிலும் கறும் பட்டுக் குஞ்சலங்கள் போலும் கேசச் சுருள்கள் செவியோரம் தோள் மேல் ஆடின. கறுகறுதாடி மெலிந்த தவ மேனி. ஆனால் அந்தக் கூட்டத்தில் பெரும்பாலும் மெலிந்த உடல்தான். சிதம்பர சுப்ரமணியனைத் தவிர, அவர் பூசினாற் போல், இரட்டை நாடி. க.நா.சு, சிட்டி சாதாரண உடல் வாகு.

ந. பிச்சமூர்த்தியின் அழகுடன் சேர்ந்த அவருடைய தனித்த அம்சம் அவருடைய விழிகள். ஊடுருவிய தீக்ஷண்யமான பார்வை. அதன் அற்புதக்ரணத் தன்மை அவருக்குக் கடைசிவரை இருந்தது. உயரத்தில் சேர்த்தி அல்ல. அவரிடம் மற்றவர்கள் காட்டின மரியாதையும், அவர் பேச்சுக்குச் செவி சாய்த்த தனிக் கவனமும், என்றும் சபாநாயகர் அவர்தான் என்பதை நிதர்சனமாக்கியது.

எத்தனைக்கெத்தனை பிச்சமூர்த்தி ஒரு பர்ஸனாலிட்டியாகப் பிதுங்கினாரோ அத்தனைக்கத்தனை அவர் எதிரே உட்கார்ந்திருந்த

கு. ப. ரா. தான் இருக்குமிடம் தெரியாமலிருப்பதே கவனமாயிருந்தார் எனத் தோன்றிற்று. பிச்சமூர்த்தியைக் காட்டிலும் குட்டை. அவருடைய கனத்த மூக்குக் கண்ணாடி இல்லாவிட்டால் அவர் பாடு திண்டாட்டம்தான். பேசும்போது அவர் குரல் அவருக்குக் கேட்டதா என்பது என் சந்தேகம்.

பிச்சமூர்த்தியும், கு.ப.ரா.வும் எழுத்தில் கையாள எடுத்துக்கொண்ட விஷயம், பாணி தனித்தனி, ஆனால் ஏன் இவர்களைச் சிறுகதை இரட்டையர்கள் என்று குறிப்பிட்டார்கள்- எனக்குப் புரியவில்லை.

புதுமைப் பித்தனை மனதில் கூட்டுகையில், பளிச்சென்று நினைவில் படுவது அவருடைய உயர்ந்த dome like நெற்றியும் வெடிப்பான உரத்த சிரிப்பும்தான். அடிக்கடி சிரிப்பார்.

எனக்கு நினைவு தெரிந்தவரை, பி. எஸ். ராமய்யா எப்பவுமே உற்சாகமான பேர்வழி, நிமிர்ந்த முதுகும் வரித்த கழி போன்ற உடலுக்கு உறையிட்டாற் போல், ஜிப்பாவும், தரையில் புரளும் வேட்டியும் அவரை உயரமாகக் காட்டின. கைகளை உற்சாகமாக ஆட்டி உரக்கப் பேசுவார்.

இந்தக் கூட்டத்தை நான் உங்களுக்குப் பரிச்சயம் பண்ணும் சமயத்தில் கலைமகளில், சக்ரவாகம் என்கிற அவர் கதை வெளியாகி, அதன் வெற்றிப்ரபை சிதம்பர சுப்ரமணியனைச் சூழ்ந்து ஒளி வீசிக்கொண்டிருந்தது. அவரிடம் விஷயம் நிறைய இருந்தது. ஆனால் சங்கோஜி. அப்படியே அபிப்ராயமாக ஏதேனும் அவர் சொல்ல ஆரம்பித்தாலும் சரியாக முடிக்காமல், சிரிப்பில், பலமான தலையாட்டலில் மழுப்பிவிடுவார். நுண்ணிய முக அங்கங்கள். அலைபாயும் க்ராப்.

தி. ஜ. ர. முழங்கால்களைக் கட்டியபடி குந்திட்டபடி உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு செளகர்யமான போஸ்ட்சர். தலையை அழுத்த வாரி, உடனேயே மெனக்கெட்டுத் தானே கையை உள்ளே விட்டுக் கலைத்துக் கொண்டாற்போல் குட்டையாக வெட்டிய க்ராப் விரைத்துக் கொண்டிருக்கும். அவர் தோற்றத்தில் கவனம் இன்னும் கொஞ்சம் செலுத்தியிருந்தால் அழகான மனிதனாகவே வெளிப்படுவார் என்பது என் கருத்து. செதுக்கினாற் போன்ற மூக்கு, வாய், வரிசையான முத்துப் பற்கள். சிரிக்கும் போது அவர் முகத்தில் ஐந்தாறு வயதுகள் உதிரும்.

சிட்டி, சி. சு. செல்லப்பா, க. நா. சு. இவர்களின் படங்களைச் சமீபமாகப் பத்திரிகைகளில் பார்க்கிறீர்கள். அன்றைக்கு இன்று வருடங்கள் இவர் தோற்றங்களை அதிகம் பாதித்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

ஒருவர், இருவர் அல்லது இருவர் மூவர். கூட்டத்தில் சேரலாம். குறையலாம். ஆனால் மாலை, இந்த வேளைக்கு இந்த இடத்தில் இந்த ஏழு பேர் நிச்சயம்.

அத்தனை பேரும் கதராடை

இவர்களை விழுங்கும் விழிகளால் பார்த்துக்கொண்டு இவர்கள் பேச்சைச் செவியால் உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருப்பதில் எனக்கு அலுப்பே இல்லை.

இலக்கிய ஆர்வம் மிக்க என் நண்பன் குஞ்சப்பாவும் நானும், எங்கள் மரியாதையில், இயற்கையான வயதின் அச்சத்தில் இவர்களுக்கு நாலு அடி எட்ட உட்கார்ந்திருப்போம்.

நான் அப்போத்தான் மொக்கு கட்டியிருந்த எழுத்தாளன். எஸ்.எஸ்.எல்.சி. குட்டெழுத்து தட்டெழுத்துப் பரீட்சைகள் தேறிவிட்டு வேலைக்கு அலைந்துகொண்டிருந்தேன். தேடினால் கிடைத்துவிடுகிறதா? பறித்து எடுத்துக்கொள் என்கிற மாதிரி அப்பவே, வேலை ஒண்ணும் காய்த்துத் தொங்கவில்லை. அந்த ரோசம், அதனால் படும் கவலை சமயங்களில் தவிர, சிந்தனைக்கும் இலக்கியச் சிந்தனைக்கும் வயது காரணமாகப் பற்றிக் கொண்டிருக்கும் ஆக்கக் கனல் வெளிப்பட வழி காணாது, உள் புழுங்கவும் வேண்டிய நேரம் இருந்த அந்தப் பருவத்தில், என்னை என்னிலிருந்து மீட்டு, எனக்குத் தருவதற்கு இந்தக் கடற்கரைக் குழுவின் பாதிப்பு, தன் பங்கைச் செய்தது என்றால் மிகையில்லை.

மஞ்சேரி எஸ்.ஈஸ்வரன் ஆசிரிமையில் வெளி வந்து கொண்டிருந்த 'ஷார்ட் ஸ்டோரி' ஆங்கில மாதப் பத்திரிகையில் என் கதைகள் இரண்டு பிரசுரமாகியிருந்தன, அடுத்து மணிக்கொடி (ஆசிரியர் ப.ரா) யில் மூன்று கதைகள், ஹனுமான் வாரப் பத்திரிகையில் ஒன்று. உம், ஆமாம்.

"ஏண்டா, அங்கே தனியா உட்கார்ந்திண்டிருக்கே, இங்கே வாயேன்!"

தி. ஜ. ர, அழைப்பார். அப்படியே நகர்ந்து, அவருக்கும் ஈஸ்வரனுக்கும் இடையே (என் நினைப்பில்) அவர்கள் பாதுகாப்பில் இடுங்குவேன். அந்தக் கூட்டத்தில் ஒருவனாக நான் என்னைப் பாவித்துக் கொள்ளும் அதிர்ஷ்டம் இதுமாதிரி நேர்ந்தால் வலிக்குமா? ஆனால் இங்கே வாய் திறக்க எனக்கு 'தில்' கிடையாது. போயும் போயும் இங்கே 'றாபண'வா? என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அப்போதெல்லாம் யார் சொல்வதையும் கவனமாகக் கேட்டுக் கொள்ளும் பங்குதான் என்னுடையது.

என்ன பேசினார்கள்? இலக்கியம். இங்கே மார் தட்டல் கிடையாது. வகுப்பு நடத்தவில்லை. உபதேசம் செய்யவில்லை. இலக்கியத்திலேயே யாருக்கேனும் வாரிசு எடுத்துக்கொண்டு, கட்சிப் பிரசாரம் கிடையாது. உலக இலக்கிய கர்த்தாக்களின் சிருஷ்டிகள் நடமாடின. அவர்கள் பெயர்களைச் சொல்லிச் சுவைக்க எனக்கு ஆசைதான். ஆனால் ஏதோ வெறும் பெயர்களை உதிர்த்து அதில் பெருமை அடையப் பார்க்கிறேன் எனும் சந்தேகத்துக்குக்கூட நான் ஆளாக விரும்பவில்லை. அந்த மாதிரிப் பெருமையால் எனக்கு இனி ஆக வேண்டியது ஏதுமில்லை. தவிர அப்போதேனும் மாப்பஸான், மாம், செக்கோவ் என்று எழுத்தாளர்கள் முனகினார்கள். Chase, Robbins, Maclean என்று இடத்தைப் பிடித்துக்கொண்டு, எழுத்து ஒரு ஃபாக்டரியாக மாறியிருக்கும் இந்நாளில் நாங்கள் பழகிய பெயர்கள், அந்த எழுத்துக்களின் சத்தியங்கள் எடுபடா.

பிச்சமூர்த்தியின் வெளிப்பாட்டில் விஷயம் நிறைய இருக்கும். அபூர்வமான விதானங்கள் தட்டும். இத்தனைக்கும் பேச்சில் சிங்காரங்கள், நகாசுகள் effect உண்டாக்க வேண்டும் எனும் தனி முயற்சி இல்லை. உள்ளது உள்ளபடி அவர் கண்டபடி, ஆனால் எப்படியும் கவிஞன் மனம் இல்லையா? லேசாக நடுக்கம் கொடுத்த குரலில் வார்த்தைகள் வெளிப்படுகையில், பிசிர்கள் கத்தரிக்கப்பட்டு, சொல்லும் பொருளும் சுளை சுளையாக விழுவது போலத் தோன்றும். ரத்னச் சுருக்கம். இதற்குள் முடிஞ்சு போச்சா? இன்னும் கொஞ்சம் பேசமாட்டாரா?

"ராஜகோபாலா! சிட்டி! செல்லப்பா!" என்று அழைக்கையில் அந்தக் குரல் நடுக்கத்தில் ததும்பிய இனிமை, பரஸ்பரம் யாரிடம் இப்போ காண முடிகிறது? அவர் பார்வையே ஒரு ஆசீர்வாதம்.

இலக்கிய விழாக்கள் இந்நாளில் கொண்டாடப்படுகின்றன. கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. டி.வி., வானொலி வழி வேறு: பேட்டிகள், சந்திப்புகள், மோஷியாரா, ஸம்மேளனம்..... எந்தச் சாக்கிலேனும் மேடை.

ஆனால் கடற்கரையில் மாலை அந்த இரண்டு, இரண்டரை மணி நேரம் இந்த ஏழெட்டுப் பேர் கூடி மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தார்களே, அதுதான் உண்மையில் இலக்கியப் பட்டறை.

இத்தனை வருடங்களின் பின்னோக்கில் எனக்கு இன்னும் வேறு ஏதேதோ உண்மைகள் புலப்படுகிறாப் போல் ஒரு உணர்வு.

ஏதோ ஒரு வகையில், இவர்கள் எழுத்துக்குத் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட பிக்குகள்.

இந்த ஏழெட்டுப் பேரில் நாலுபேர் இப்போது நம்முடன் இல்லை. இவர்களில் மூவரேனும் எழுத்துக்கே பலியானவர்கள்.

அந்த மஹாராஜியைப் பற்றி எனக்குக் கொஞ்சம் தெரியும். அவள் மோஹினி. மிக்க அழகி. இரக்கமற்றவள். Medusa "வா, வா. என்னைப் பார். என் அழகைப் பார்!"

அவன் நெஞ்சை நீட்டுகிறாள். உள் உள்ளே*யே பாடுகிறாள்.

கொல் இசை.

சிந்தா நதி மேல் கவிந்த ஒரு பனிப் படலம்.

* *


இந்தக் கட்டுரை வந்த அடுத்த வாரம், கதிரின் “வாரம் ஒரு கடிதம்” என்ற பகுதியில் , “தேவகுமார்” என்பவர் எழுதியது:

“ அற்புதம்! வெகு அற்புதம்! சென்னையின் பிரசித்தி வாய்ந்த மெரீனாக் கடற்கரையில் “மணிக்கொடி” காலத்துப் பிரமுகர்கள் கூடிப்பேசும் காட்சியை தத்ரூபமாகச் ” சிந்தா நதி”ப் பகுதியில் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியுள்ள திரு லா.ச.ரா வின் சாதனையைக் குறிப்பிடுகிறேன். அந்த சம்பாஷணைகளின் சில பகுதிகளையேனும் லா.ச.ரா. தன் நினைவுப் பேழையிலிருந்து பொறுக்கி எடுத்து தந்தால் இன்னும் எவ்வளவு சிறப்பாக இருக்கும்? “

நமக்கும் அப்படித்தானே தோன்றுகிறது ? ஒரு வேளை இந்தக் கடிதத்தைப் படித்தபின் தான் லா.ச.ரா இன்னும் கொஞ்சம் ‘ மணிக்கொடி சதஸ்’ பற்றி எழுதலாம் என்று எண்ணி, அதற்கடுத்த வாரம்  இன்னொரு கட்டுரையை . .  தன் 19-ஆவது பதிவாக . . . எழுதினாரோ?

[ நன்றி: தினமணி கதிர், மதுரைத் திட்டம் ]

( தொடரும் )

பி.கு.

கட்டுரையைப் படித்த ஆசுகவி சிவசூரியின் மறுமொழி


சிந்தை என்னும் நதிகாட்டி -அது
   தெளிவாய் ஓடும் கதிகாட்டி
விந்தை புரியும் மதிகாட்டி-கதை
   விரியும் விதத்தின் முதல்காட்டி
முந்தை நாளின் கதைகாட்டி- அதில்
   முற்றும் எம்மைக் குளிப்பாட்டி -ஒலி
சிந்தும் கடலின் கரைகாட்டும் - அது
   செம்மை மிகுந்த நாட்காட்டி.

சுற்றுப் புறத்தின் எழில்காட்டி -அன்று
   துடிப்பாய் வரைந்த முகம்காட்டி
வெற்றுத் தாளில் உயிரூட்டி- எமை
   வேகம் வளர்த்த பயிர்காட்டி
கற்றுக் கொடுக்கும் கலைகாட்டி- அவர்
   கதையும் தொடுக்கும் நிலைகாட்டி
பற்றி நடந்திடும் வழிகாட்டும்-அது
   பண்டை நாளின் மொழிகாட்டும்.


மால்குடி நாளைக் கண்டுள்ளேன் -அதில்
   மையல் மிகவும் கொண்டுள்ளேன்
லால்குடி யார்என் முனம்கண்டேன் - அந்த
   ராமா அமுதின் இனம்கண்டேன்
பால்குடி நாட்களின் வலம்கண்டேன்-என்
   பள்ளிப் பருவ நலம்கண்டேன்
கோல்பிடித் தவரின் பதம்கண்டேன் -நான்
   கொஞ்சும் தமிழின் இதம்கண்டேன்.


சிவ சூரியநாராயணன்.

===========

தொடர்புள்ள பதிவுகள்:

லா.ச.ராமாமிருதம் படைப்புகள்

திங்கள், 19 நவம்பர், 2012

செல்வமலைச் செவ்வேள்: சில நினைவுகள்

                                                               
செல்வமலைச் செவ்வேள்: சில நினைவுகள்

பசுபதி




ஒரு கோயிலுக்குக் குடமுழுக்கு விழா நடக்கும் போது, அந்தக் கோவில் வளர்ச்சியை முழுதும் பார்த்த ஒருவன் மனத்தில் சில காட்சிகள்வரலாற்று நிகழ்வுகள்ஒரு திரைப்படம் போல் ஓடுவதில்  ஆச்சரியமில்லை. அக்காட்சிகள் சிலவற்றைப் பதிவு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

காட்சி 1

1988 –இல் ஒரு நாள் என்று நினைவு. டொராண்டோ, ரிச்மண்ட் ஹில் ( Richmond Hill) கோவிலில் திரு ஜானகிரமண ஸ்தபதியுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். “எப்படி அவர்சிவசுப்பிரமணியமூர்த்தியாய்ச் சிலையை வடிவமைத்தார் என்று கேட்கிறேன். அவர், எப்படிக் காலையில் இறைவனைத் தியானித்து, முருகனின் தியான ஸ்லோகத்தை மனத்தில் சொல்லிக் கொண்டே தொடங்கும் தன் சிற்பப் பணி எப்படி இறையருளால் ஒரு நெற்றிக் கண் கொண்ட முருகனை கடைசியில் ஈந்தது என்று விவரிக்கிறார். எனக்குப் புல்லரிக்கிறது. “சிவசுப்பிரமணியர்என்ற நாமமும் என்னுள் ஒலிக்கத் தொடங்குகிறது.


காட்சி 2

1988 அல்லது 1990. திருப்புகழ்குருஜிராகவன் டொராண்டோவிற்கு வந்திருக்கிறார். நான் திருப்புகழ் நூலிலே தேடுகிறேன். அருணகிரி எங்கேனும்சிவசுப்பிரமணியர்என்ற பெயரைப் பயன்படுத்தி இருக்கிறாரா என்று. கடைசியில்ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணுஎன்று ஒரு திருவொற்றியூர் திருப்புகழைக் கண்டுபிடிக்கிறேன். ‘சொருபப் பிரகாசஎன்று தொடங்கும் அத் திருப்புகழில்

குருகுக்குட வாரகொடி செருவுக்கிர ஆதபயில்
   . பிடிகைத்தல ஆதியரி  மருகோனே

குமரப்பிர தாபகுக சிவசுப்பிர மாமணிய 
   . குணமுட்டர வாவசுரர்  குலகாலா
என்று வரும். அத்திருப்புகழை டொராண்டோத் திருப்புகழ் அன்பர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார் குருஜி ராகவன்.


காட்சி 3

1990. ரிச்மண்ட் ஹில் கோவில் வெளியிட்ட இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகிறது. அதிலிருந்து ஒரு பகுதி:

“ (முருகனின் ) ஐந்தாம் படை வீடானகுன்றுதோறாடல்ஓர் இடத்தை மட்டும் குறிப்பதன்று; குன்றுகள் தோறும் குலவும் குமரனின் திருவிளையாடலையே குறிக்கிறது. இந்தக் குன்றுகளுக்கெல்லாம் பிரதிநிதியாகப் பொதுவாகத் திருத்தணி போற்றப்பட்டாலும், முருகனுக்கு ஏற்படும் புதுக் கோவில்களையும் சேர்ப்பது முறையே. உதாரணமாக, ரிச்மண்ட் ஹில்லில் உள்ள சிவசுப்பிரமணிய மூர்த்தியை, தமிழ் மரபிற்குப் பொருந்தசெல்வமலைச் செவ்வேள்என்று அழைத்துப் போற்றலாம். செல்வர்களின் வீடுகள் பல உள்ள இவ்விடத்தில், ‘ஆன்மிகச் செல்வத்தை மறக்காதேஎன்று அறிவுறுத்தும் வகையில் கோயில் கொண்டுள்ளான் ஆறுமுகன். இந்த இடத்தைஸ்ரீகிரிஎன்று வடமொழியில் அழைக்கலாம். வள்ளி-தெய்வானை இருவரும் திருமாலின் குமாரிகள் , பார்வதி விஷ்ணுவின் சோதரி என்ற புராணக் கதைகளை அநுசரித்துச் செல்வமலைக் குமரனை மாமி வீட்டில் உள்ள மருகனாக எண்ணி, ரசித்து, மகிழலாம்”.


காட்சி 4

1990 –இல் ஒரு நாள். என் சோதரர், ‘திருப்புகழ் அடிமைநடராஜன் சென்னையில் தவத்திரு ஸாதுராம் ஸ்வாமிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது , தற்செயலாக, என் சோதரர், நான்ரிச்மண்ட் ஹில்லுக்குசெல்வமலை என்று மொழியாக்கம் செய்ததைக் குறிப்பிடவே,  அதை ரசித்த ஸ்வாமிகள், உடனே கீழ்க்கண்டஅருட்புகழைஅருளினார். ( அருணகிரி நாதர் எப்படி மிகக் கடினமான திருப்புகழ் பாடல்களை ஆசுகவியாய்ப் பாடினார் என்பது ஸாதுராம் ஸ்வாமிகள் பாடுவதைக் கேட்டவர்களுக்குப் புரியும் ) .

                 அருட்புகழ்

ராகம் : ஷண்முகப்ரியா
தய்ய தனத்தன தத்தன தத்தன தனனத் தனதான

உய்வர் திருப்புகழ் கற்றவர் எனும்அற் புதம்ஓரா
. . உய்தி பெறத்தமிழ் சொற்றுனை வழிபட் டுணரேன் நான்;

வைவ துரைப்பது மற்றெதும் உனதர்ச் சனையாக
. . வள்ளி மறத்தி திறத்த!நின் மனம்வைத் தினிதேலாய் ;

சைவர் பழிச்சுடும் அப்பணி ஜடையற் கருள்சேயே!
. . தைவ குருத்துவ புத்திர! தமிழிற் ப்ரியவேளே!

செய்வ தனைத்தையும் அர்ப்பணி ஜநர்நற் கனடாவில்
. . செல்வ மலைச்சிவ ஸுப்பிரமணியப் பெருமாளே.
                          ஸாதுராம் ஸ்வாமிகள்
                               29-11-1990
                              சென்னை -61    

[ பழிச்சுடும்போற்றிடும் ]

( பின் குறிப்பு: சங்கீத வித்வான் நெய்வேலி சந்தான கோபாலன் பின்னர் சென்னைக்கு விடுமுறையில் நான் சென்றிருந்தபோது இதை ஷண்முகப்ரியா ராகத்தில் அமைத்து எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார் என்பதும் இதற்குத் தொடர்புள்ள ஒரு நிகழ்வே ]

செல்வமலைச் செவ்வேளுக்குஅரகரோகரா

டொராண்டோ தீரனுக்கு - அரகரோகரா

ஆண்டேரியோ அழகனுக்குஅரகரோகரா

கனடா கந்தனுக்குஅரகரோகரா

சிவசுப்பிரமணிய ஸ்வாமிக்குஅரகரோகரா 

[ ரிச்மண்ட் ஹில் கோவில்  புனருத்தாரண கும்பாபிஷேக மலரில்
வெளியான கட்டுரை, 28 அக்டோபர், 2012 ]

தொடர்புள்ள பதிவுகள்:
பசுபடைப்புகள்

அனுபந்தம்
===========
இக்கட்டுரையைப் படித்த ஆசுகவி சிவசூரி அளித்த கவிதைகள்:




செல்வமலைச் செவ்வேள்

ஆசு கவிதிரு சாது முனியவர்
ஆசை யுடன்உனைப் பாடிடவே
தேசு புகழுடன் செல்வ மலைதனில்
சிங்காரக் கோயிலில் கூடியவா.

பாசு பதிமுதல் பாவலர் பற்பலர்
பக்தி யுடன்நினைப் பாடிடுவார்
காசு பணம்நிறை கானடா நாட்டிலே
காலடி வைத்தவன் ஆடிடுவாய்.

முத்தமிழ் வித்தகர் மாமுனை வர்பலர்
முந்தித் துதிப்பதை வேட்டனையா
சித்தம் களித்திடும் சிந்து பலவிதம்
செல்வ மலைதனில் கேட்டனையா.
வெள்ளிப் பனிமலை வேண்டி விரும்பியே
வேலவன் அங்குநீ சென்றனையோ
கொள்ளை அழகுடன் குட்டிக் குழந்தையாய்க்
கொஞ்சக் குருபரன் நின்றனையோ

அப்பனின் பேரின் முதலெழுத்து அட
அய்யனே நீயுமே கொண்டனையா
சுப்பனே நின்னைச் சிவனாகக் கூடவும்
செல்வ மலைதனில் கண்டனரா.

சிற்றுளி கொண்டு செதுக்குமுன் சிற்பியின் சிந்தனையில்
பற்றிய பாலன் முருகனின் நாமம் பதிந்திருக்க
நற்றுணை யாக நுதல்விழி வந்து நடனமிடக்
கற்சிலை செய்யக் கடவுள் வழிதனைக் காட்டினரே.

கல்லில் கடவுளைக் காட்டும் கலைஞரின் கண்களின்முன்
எல்லை கடந்த எழிலுரு கொண்ட இளமிறையாய்ச்
செல்வ மலையில் திருவிழி மூன்றும் திகழ்ந்திடவே
சொல்லில் வராத சுகந்தரு சோதியன் தோன்றினனே.


வெள்ளிப் பனிமழை வீழ்ந்திடும் நாட்டில் விளங்குமெழில்
துள்ளும் தொராந்தோ துதிசெயும் தொண்டர் துணையெனவே
கள்ளின் சுவையுடைக் கன்னித் தமிழ்தினம் காதுபட
வள்ளிக் கணவன் திருவிழி மூன்றுடன் வந்தனனே.


அருண கிரியார் அருளிய பாடல் அனுதினமும்
உருகும் உளமுடன் ஓதும் அடியார் உயிர்வளர்க்கப்
பெருகும் நிதிக்கும் நிதியாய் சிவசுப் பிரமணியாய்க்
கருணை முகிலெனக் கண்முனம் வந்தனன் கந்தய்யனே.

செல்வ மலைவாழ் சிவமணி நாமம் செபிப்பவர்க்குக்
கல்லாக் கலையும் கணத்தில் உணர்த்தும் கருணையினால்
எல்லா நலமும் இகத்தினில் சேர இமைப்பொழுதில்
வல்லான் அருளினால் நாடும் நகரும் மணம்பெறுமே.



சிவ சூரியநாராயணன்.