வியாழன், 27 ஆகஸ்ட், 2015

திரு. வி. க -1

அன்புருவான திரு.வி.க.
கி.வா.ஜகந்நாதன்

ஆகஸ்ட் 26.  ’தமிழ்த் தென்றல்’ திரு வி.கல்யாணசுந்தரனாரின் பிறந்தநாள்.

திரு.வி.க : 1883 -1953 

அவர் 1953-இல் மறைந்தபோது, அவரைப் பற்றி கி.வா.ஜகந்நாதன் ‘கலைமகளில் எழுதிய ஒரு கட்டுரையின் சில பகுதிகளை இங்கிடுகிறேன்.

=========


இணையாதவற்றை எல்லாம் இணைத்தவர் திரு.வி.க. அவர் சைவ வேளாள குலத்தில் உதித்தவர். தமிழ்ப்பயிற்சி மிக்கவர்.தமிழாசிரியராகச் சில காலம் பணியாற்றியவர். ஆனால் அவருடைய தொண்டிற்கு இந்தக் குலமும் சமயமும் தொழிலும் கரைபோட்டுத் தடுக்கவில்லை. ஆளைப் பார்த்தால் ஒல்லியாய் உச்சிக் குடுமியும் கதராடையும் துலங்க நெற்றியில் திருநீறு நிலவ ஒரு வைதிகப் பிச்சுப் போல இருப்பார். ஆனால் அவர் பேசும் பேச்சிலும் எழுதும் எழுத்திலும் வைரம் பாய்ந்திருந்தது . அவர் உள்ளம் சீர்திருத்தத்தை விரும்பியது. சமய சமரசத்தை அவர் தம்முடைய வாழ்க்கையில் மேற்கொண்டு ஒழுகினார்.

கடவுள் இல்லையென்று கூறும் கம்மூன்னிஸ நூல்களை நிறையப் படித்தார்; ஆராய்ச்சி செய்தார்; ஆழ்ந்தார். மார்க்ஸீயத்தில் அவருக்கு நல்ல பற்று உண்டு. ஆனால் அவர் நாஸ்திகர் அல்ல. கடவுள் உணர்ச்சியைக் கணந்தோறும் வற்புறுத்திய காந்தீய நெறியில் நின்றவர் அவர். ”மனித வாழ்க்கையும் காந்தி அடிகளும் “ என்ற அவருடைய நூல் காந்தீயத்தில் அவருக்கு இருந்த ஆழமான பற்றைக் காட்டும். மார்க்ஸீயமும் காந்தீயமும் கலந்து இணைந்தால் இந்த இந்தியா முன்னேற அந்த இணைப்பு மிகுதியாக உதவும் என்று அடிக்கடி அவர் சொல்வதுண்டு.

அவருடைய உள்ளம் கலைஞனது உள்ளம்; கவிஞனது உள்ளம். எந்தப் பொருளையும் அழகுபட அவர் சொல்லும்போது  அதில் ஒரு தனிச்சுவை இருக்கும். அவருடைய பேச்சில் அதிகமாகக் கவிஞர்களின் கருத்தைத் தான் கேட்கலாம். அந்தக் கவிகளையே மிகுதியாக எடுத்துச் சொல்வதில்லை. ஆயினும் அவர் பேச்சு முழுவதுமே கவிதையைப் போல இருக்கும். இயற்கையோடு இணைந்த வாழ்வைப்பற்றி அவர் பேசும் சமயங்களில் அவர் வெறும் சொற்பொழிவாளராகவா இருப்பார்? அவருடைய பேச்சு முழுவதும் கவிதையே ஆகிவிடும். காதல் வாழ்வைப் பற்றிப் பேசும் போதும்,  இறைவன் பெருமையை எடுத்துரைக்கும் போதும் கேட்பவர்கள் தம்மை மறந்து வேறு ஏதோ அமுதமயமான உலகத்தில் இருப்பவர்கள் போல் ஆகி விடுவார்கள். படிப்படியாக எடுத்துக்கொண்ட பொருளை விளக்கும்போது, கேட்பவர் மனம் அந்தப் பேச்சின் வழியே நழுவி நழுவி உள் ஆழ்ந்துபோகும்.

பிறரைக் காரசாரமாகக் கண்டித்துக் கைதட்டச் செய்வதும், கிண்டலும் கேலியுமாகப் பேசி மக்களை ஆரவாரம் செய்யச் செய்வதும், நகைச்சுவையை நீட்டி எல்லோரையும் நகைப்புக்கு ஆளாக்குவதும் அவர் அறியாதவை; அறிந்தும் வேண்டாம் என்று ஒதுக்கியவை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

சிலருடைய பேச்சில் உணர்ச்சி இருக்கும்; எழுத்தில் அது செத்துப் போய்விடும். சிலர் அற்புதமாக எழுதுவார்கள்; ஆனால் அவர்கள் பேச்சுச் சுவையாக இருக்காது. சிலர் பேசுவதும் நன்றாக இருக்கும்; எழுதுவதும் நன்றாக இருக்கும். ஆனால் பேச்சு நடை தனியாகவும் எழுதும் நடை வேறாகவும் இருக்கும். திரு.வி.கல்யாணசுந்தர முதலியாரிடம் அந்த இரண்டும், ஒரே மாதிரி அழகுடையனவாக இருக்கும். எழுத்தில் மாத்திரம் எழுதலாம் என்று நினைத்திருந்த பல தொடர்கள் அவர் பேச்சில் இயற்கையாக இழைந்து வந்தன.  “ யாண்டும், என்னை, சிந்திக்கற்பாலது, காழ்ப்பு, யான், கழிபேருவகை, சான்று” என்பன போன்றவற்றைத் திரிசொற்களாக எண்ணி அவற்றை எழுதக் கூட அஞ்சுகிறவர்கள் உண்டு. ஆனால் இத்தகைய பல சொற்களையும் தொடர்களையும் தம்முடைய பேச்சினிடையிலே விரவவைத்து, சிறிதும் இடர்ப்பாடின்றி, கேட்பவர்கள் தெளியும்படி செய்த பெருமை திரு.வி.க. வுக்கே உரியது.

அவருடைய எழுத்து நடையும் பேச்சு நடையும் ஒத்தே இருக்கும். பேசும்போது இடது கை ஆட்காட்டி விரலை உயர்த்திக் கையை அசைத்துப் பேசுவார். எடுத்துக் கொண்ட பொருளைத் தெளிவாகச் சொல்லிவிட்டு, அதை முடிக்கும்போது உணர்ச்சி விஞ்ச வேகமாகப் பேசுவார். கடைசியில் முத்தாய்ப்பாக ஒரு தொடரை மூன்று முறை சொல்லி முடிப்பார். “ சிந்திக்கற்பாற்று, சிந்திக்கற்பாற்று, சிந்திக்கற்பாற்று” என்றோ, “பெண்ணுரிமை பேணுக, பேணுக, பேணுக” என்றோ முடிப்பது அவர் வழக்கம்.

சொற்பொழிவின் முடிவிலே தாம் பேசிய அனைத்தையும் சுருக்கி மாலை தொடுப்பது போல வைத்து முடிப்புரை கூறும் அருமை கேட்டவர்களுக்குத் தெரியும். அவர் பேச்சை அப்படியே எழுதிப் படிக்கலாம். அழகும் உணர்ச்சியும் கெடாமல் இருக்கும்.

( தொடரும் )

[ நன்றி : கலைமகள் ]

தொடர்புள்ள பதிவு:

திரு.வி.க. 10

கி.வா.ஜகந்நாதன் 

2 கருத்துகள்:

Nagendra Bharathi சொன்னது…

தமிழ்த் தென்றல் மறுபடி வீசியது

Unknown சொன்னது…

ஓர் அறிஞரை மற்றொருவர் புகழ்வது அரிது. கிவாஜ திருவிகைப் பற்றி எழுதியிருப்பதெல்லாம் 'சொல்லிய வாக்கின் பொருளுணர்ந்து' சொல்லிய வண்ணம் எல்லோர்க்கும் ஏற்புடையது. கருத்தாழமான இத்தகைய கட்டுரைகள் தமிழ்பேசும் மக்களை இவ்வறிஞர்களைப்பற்றி மேலும் அறியத் தூண்டும். நன்றி.