புதன், 28 அக்டோபர், 2015

சங்கீத சங்கதிகள் - 57

பேராசிரியர் எஸ்.ஆர்.ஜானகிராமன் 




”டெல்லியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சங்கீத நாடக அகாடெமி விருதுகளை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

சங்கீத நாடக அகாடெமியின் கவுரவ உறுப்பினர் அந்தஸ்துக்குத் தேர்வு செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த கர்நாடக இசை ஆராய்ச்சியாளர் எஸ்.ஆர்.ஜானகிராமன் உள்பட 4 பேருக்கு 2014-ம் ஆண்டுக்கான ரத்ன சதஸ்ய விருதினை ( Academy Fellowship) பிரணாப் முகர்ஜி வழங்கி சிறப்பித்தார்.” 
(  செய்தி : 


பேராசிரியர் எஸ்.ஆர்.ஜானகிராமனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுகள்!  

நான் 2004-இல் டொராண்டோவில் வெளியான 'மெரினா' என்ற இதழில்
அவரைப் பற்றிய எழுதிய ஒரு கட்டுரையை இங்கிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ]

======================
அன்னையர் தினமும் இன்னிசைத் தனமும்

பசுபதி


தொராந்தோவில் பாரதி கலா மன்றம் ஏப்ரல் 2004-இல் நடத்திய தியாகராஜர் இசை விழாவில் இரண்டாம் நாள் விழா.  பகலில் , யார்க் பல்கலைக் கழகம் வந்தவர்கள் காதில் ஒரு தமிழ்ப் பாடல், ஒரு கம்பீரக் குரலில், கம்பீர நாட்டை ராகத்தில்  ஒலித்திருக்கும். அதுவும், எப்படிப்பட்ட பாடல்அருணகிரிநாதர் , வில்லிபுத்தூராரை வாதில் வெல்லக் காரணமாக இருந்த, 'கந்தர் அந்தாதி' யின் 54-ஆவது பாடல்.

       'திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா' ..

இது முதல் அடி! இப்படியே இன்னும் மூன்று அடிகள்! எல்லாம் '' வின் இன எழுத்துகள் !இதற்கு வில்லிபுத்தூரார் உரை சொல்ல முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டார் என்பது சரித்திரம். இதன் பொருளை அறிய விரும்புவோர் :


போய்ப் படிக்கவும்.

இந்தப் பாடல் தெரிந்தவர்களே உலகில் மிகக் குறைவு! இன்று அதைப் பாடலாகப் பாடுபவர் ஒருவர் தான் (அடியேனுக்குத் தெரிந்து) ! அவர்தான் சங்கீத வித்வான், 'சங்கீத கலாசார்ய', கலைமாமணி எஸ். ஆர். ஜானகிராமன் . ஆம், அவர்தான் அங்கே , தன் இசைப் பேருரைக்கு முன்னுரையாகஒரு ஸ்லோகத்திற்குப் பின்  இந்த கந்தர் அந்தாதிப் பாடலையும் வழங்கினார். (இதை ஒரு இறை வணக்கமாகவும் கொள்ளலாம்; அவருக்கு இதைக் கற்றுக்கொடுத்த , அவர் குரு திருப்புகழ் மேதை, இசையியல் அறிஞர் பி.கே. இராஜகோபால ஐயருக்கு அவர் செலுத்திய  குருவணக்கமாகவும்  எடுத்துக் கொள்ளலாம்.)

எழுபத்தாறு ஆண்டு இளைஞர், இசைப் பேரறிஞர் ஜானகிராமன் அவர்களைப் பற்றி அறிந்துகொள்ள ஆசைப்படுபவர்கள், அவருடைய சீடர்களான, மாகா அங்கத்தினர்கள்  அஸ்வின், ரோஹின் இருவரும் விண்ணேற்றியுள்ள இணையச் சுட்டிக்குள் சென்று படிக்கலாம் :


பேராசிரியர் எஸ்.ஆர்.ஜே தொராந்தோவில் சில நாள்கள் வந்து இருக்கும் வாய்ப்பை நழுவவிடாமல், மாகா-இசை (MACA-music) என்ற யாஹூ  இணையக் குழுவின் தலைவர் திரு  ஸ்ரீநிவாஸன்  இன்னொரு இசைப் பேருரை நமக்குக் கிட்டசுறுசுறுப்புடன் இயங்கி, அதற்கு வழி வகுத்தார். இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக, மிருதங்கக் கலைஞரும், தென்னிசை கற்கும் தொராந்தோ இளைஞரை ஊக்குவிக்கப் பல தொண்டுகள் புரிபவருமான திரு கணபதி அவர்களின் வீட்டில் மே 9, 04 -இல் நடந்தேறியது.

பேராசிரியர் அனந்தநாராயணனின் அறிமுகத்திற்குப் பின், திருவாரூர் மும்முர்த்திகள் என்று சொல்லப்படும் மூன்று இசையாசிரியர்களில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதரைப் பற்றிப் பேசியும், பாடியும், தன் ஆங்கில, ஸம்ஸ்கிருத, ராக, சாஸ்திர, இன்னிசைப் புலமையால் எல்லோரையும் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினார் எஸ்.ஆர்.ஜே. (அவரை 'ஸாஸ்திரீய ராக ஜோதி' (SRJ) என்றோ 'ஸாஸ்திரீய ராக ஜாம்பவான்' என்றோ அழைப்பதே பொருத்தம் என்று நினைக்கிறேன்!) திரு கணபதி மிருதங்கத்திலும், டாக்டர் ஸ்ரீராம் கஞ்சிராவிலும் அவருக்குப் பக்க வாத்தியம் வாசித்து அவர் இசையை மிளிர வைத்தனர். கடைசியாக, நன்றியுரை சொல்லி அவருக்கு  ஒரு வாழ்த்துப்பா (வெண்பா) நான் வழங்கினேன். அது வருமாறு:


புலிவரதர் சீடர்; புலியிவரோ ஆய்வில்;
விலையில் விரிவுரை தேனு -- கலையாசான்,
சங்கீத நக்கீரர்; சாத்திர சந்தேகக்
கங்குல் கனற்றும் கதிரவன் -- பங்கமிலாப்
பன்மொழிப் பாவலர் எஸ்.ஆர்.ஜே தேர்ந்தளிக்கும்
தென்னிசை நம்செவிக்குத் தேன்.


[ புலிவரதர்= 'டைகர்' வரதாச்சாரியார்; விலையில் = விலை மதிக்க முடியாத; தேனு=(காம)தேனு; கங்குல்= இருள் ; கனற்றும்= எரிக்கும். ] 


மே 9 'அன்னையர் தினம்'. பேராசிரியர் எஸ்.ஆர்.ஜே -அவர்களின் இன்னிசை விருந்திற்குப்பின், அந்த நாளை இன்னிசை மாதாவின் தினமாகவே கொண்டாடிய நிறைவுடன் நாங்கள் எல்லோரும் வீடு திரும்பினோம். அன்னையர் தினத்தன்று ஒரு பெருஞ் செல்வமான  இன்னிசையை நமக்களித்த பேராசிரியர் எஸ்.ஆர்.ஜே-அவர்களுக்கு நன்றி!  


~*~o0O0o~*~

பின்னூட்டம்: 

2008-இல் ‘வெண்பா விரும்பி ‘ ( வா.ந.சிவகுமார்) ‘சந்த வசந்தம்’ குழுவில் எழுதிய ஒரு மடல்.) 

வணக்கம்.  தமது எண்பதாம் பிராயத்திற் கர்நாடக இசைப் பண்டித மணியாய்த் திகழும் பேராசிரியர் எஸ். ஆர். ஜானகிராமன் அவர்களுக்குச் சென்னையிற் பாராட்டு விழாவொன்று சமீபத்தில் நடைபெற்றது.  இவ்விழாவை எதிர்நோக்கியானும் எனது இளைய சகோதரனாகிய முனைவர். வா. ந. முத்துகுமாரும் சில மாதங்களுக்கு முன் இணைந்து இயற்றிய பாடல்களைக் கீழே இடுகிறேன்.  இந்த 'நாத கோவித'ரைப் பற்றிய முக்கியத் தகவல்கள் சிலவற்றை இங்குக் காணலாம்:


பாடல்களைப் பற்றிய குறிப்புகள் சில:

1.  முதற் செய்யுளில் "வேங்கை" என்றது திரு ஜானகிராமனின் குருவாகிய காலஞ் சென்ற இசை மேதை "Tiger" வரதாசாரியார் அவர்களை.  பின்வரும் கட்டளைக் கலித்துறையில் "வரதன்" என்று சொல்லப்படுபவரும் அம் மகாவித்துவானே.

2.  கடைசிப் பாடலில் "சாரங்க தேவர்" என்ற பெயரைக் காணலாம்.  "சங்கீத
ரத்னாகரம்" என்ற நூலை எழுதிய இசைப் பேரறிஞரிவர்.  இவரையும் பேரா. ஜானகிராமனையும் இணைத்து, ஆங்கிலத்தில் என் சகோதரன் நயம்பட எழுதிய வாக்கியம் வருமாறு: "Why bemoan the absence of Saranga Deva when SR (Sangeetha Rathnakara) is in our midst?"

3.  நான்காம் செய்யுளிற் பாட்டுடைத் தலைவர் "சங்கீத நக்கீரன்" என்று
அழைக்கப்பெறுகின்றார்.  இந்தப் பட்டத்தை அன்னாருக்குச் சில வருடங்களுக்கு முன் ஒரு வெண்பா வாயிலாக வழங்கியவர் எங்கள் சிறிய தந்தையாராகிய பேரா. பசுபதியவர்கள். 
********************
SRJ: பாராட்டுப் பஞ்சகம்

1. (அறுசீர் விருத்தம்)

பேரமரோர் வேங்கையடி பணிந்தவன்பான் முந்துகலை
...பெட்பிற் கற்றிப்
பாரரிதீ தென்றறிய அதனுட்ப முனைந்தாய்ந்து
...பகரு மேலோன்
ஏரருகாத் தென்னிசையின் இருவிழியாத் திகழுமுயர்
...இராகந் தாளம்
சீரணியாய்ப் பூணறிஞன் ஜானகிரா மன்முன்னஞ்
...சென்னி தாழ்க.
*******
பதம் பிரித்து:

பேர் அமர் ஓர் வேங்கை அடி பணிந்து அவன் பால் முந்து கலை பெட்பில் கற்று
இப்
பார் அரிது ஈது என்று அறிய அதன் நுட்பம் முனைந்து ஆய்ந்து பகரும் மேலோன்
ஏர் அருகாத் தென் இசையின் இரு விழியாத் திகழும் உயர் இராகம் தாளம்
சீர் அணியாய்ப் பூண் அறிஞன் ஜானகிராமன் முன் நம் சென்னி தாழ்க.

பேர் அமர்=புகழ் வாய்த்த; முந்து=பழமை; பெட்பில் கற்று=விருப்பத்தின்
காரணத்தாற் கற்று; ஈது=இது; ஏர் அருகா=அழகு குறையாத
********************
2. (அறுசீர் விருத்தம்)

சனகசுதை நாதனிரா மனன்றெதிர்த்துப் போர்தொடுத்த
...தரிய லார்மேல்
கனமழையாய்க் கணையிரண்டு திருக்கரத்தால் எய்தவரைக்
...கடிந்த வாறு
தினமறிவாற் கலைவளர்க்கும் ஜானகிரா மனிசைவலர்
...திமிரந் தாக்கித்
தனதிருகை இலட்சியவி லட்சணங்கொண் டடியொடதைச்
...சாய்ப்பான் மன்னோ.
*******
பதம் பிரித்து:

சனக சுதை நாதன் இராமன் அன்று எதிர்த்துப் போர் தொடுத்த தரியலார் மேல்
கன மழையாய்க் கணை இரண்டு திருக்கரத்தால் எய்து அவரைக் கடிந்தவாறு
தினம் அறிவால் கலை வளர்க்கும் ஜானகிராமன் இசைவலர் திமிரம் தாக்கித்
தனது இரு கை இலட்சிய இலட்சணம் கொண்டு அடியொடு அதைச் சாய்ப்பான் மன்னோ.

தரியலார்=பகைவர்; திமிரம்=அறியாமை
********************
3.  (கட்டளைக் கலித்துறை)

தேனன தேம்பண் விருந்திசைப் பாட்டாற் செவிக்களித்த
கோனனி சால்பார் வரதன் எனுமா குருபயந்த
சானகி ராமப் புலவனின் ஆற்றல் தனையுணர்ந்தம்
மானயந் தீகுந் தனஞ்சேர்த் தடைவோ மதிவளமே.
*******
பதம் பிரித்து:

தேன் அன தேம் பண் விருந்து இசைப் பாட்டால் செவிக்கு அளித்த
கோன் நனி சால்பு ஆர் வரதன் எனும் மா குரு பயந்த
சானகிராமப் புலவனின் ஆற்றல் தனை உணர்ந்து அம்
மான் நயந்து ஈகும் தனம் சேர்த்து அடைவோம் மதிவளமே.

கோன்=தலைவன்/அரசன்; நனி சால்பு ஆர்=மிகுந்த பெருமை பொருந்திய;
மான்=பெரியோன்
********************
4. (அறுசீர் விருத்தம்)

கங்காத ரன்கும்பக் கண்திறந்தும் அவன்குற்றம்
...கண்டித் தோதம்
மங்காத கீர்த்தியுறு தமிழரியின் சிறப்பின்று
...வாய்க்கப் பெற்று
நங்கோத கற்றத்த யங்காத தைத்திருத்து
...நல்லா சானிச்
சங்கீத நக்கீரற் கிப்பாராட் டுச்சாலத்
...தகுந்த தன்றோ.
*******
பதம் பிரித்து:

கங்காதரன் கும்பக் கண் திறந்தும் அவன் குற்றம் கண்டித்து ஓது அம்
மங்காத கீர்த்தி உறு தமிழ் அரியின் சிறப்பு இன்று வாய்க்கப் பெற்று
நம் கோது அகற்றத் தயங்காது அதைத் திருத்தும் நல் ஆசான் இச்
சங்கீத நக்கீரற்கு இப் பாராட்டுச் சாலத் தகுந்தது அன்றோ.

கும்பம்=நெற்றி; ஓதுதல்=சொல்லுதல்; கோது=குற்றம்
********************
5. (அறுசீர் விருத்தம்)

சாரங்க மேவெமது தொல்லிசைக்கோர் நெறிநிறுவொண்
...சாத்தி ரத்தின்
சாரங்க டைந்ததைத்தன் புலத்தாழப் பதித்தெய்து
...தகவான் மேன்மை
சாரங்க ருத்துரைக்கும் ஜானகிரா மப்பெயர்கொள்
...சதுரன் அந்தச்
சாரங்க தேவனையாம் பாராத குறைதீர்த்தான்
...தரணி மீதே.
*******
பதம் பிரித்து:

சார் அங்கம் மேவு எமது தொல் இசைக்கு ஓர் நெறி நிறுவு ஒண் சாத்திரத்தின்
சாரம் கடைந்து அதைத் தன் புலத்து ஆழப் புதைத்து எய்து தகவால்
மேன்மை சார் அம் கருத்து உரைக்கும் ஜானகிராமப் பெயர் கொள் சதுரன் அந்தச்
சாரங்க தேவனை யாம் பாராத குறை தீர்த்தான் தரணி மீதே.

சார் அங்கம் மேவு=அழகிய அங்கங்கள் பொருந்திய (சார்=அழகு); தகவு=தகுதி;
மேன்மை சார் அம் கருத்து=மேன்மை பொருந்திய அழகிய கருத்துகள்
******************** 

[ படம் : நன்றி; அஸ்வின் ]  

சனி, 24 அக்டோபர், 2015

சங்கீத சங்கதிகள் - 56

 பண்டைத் தமிழரின் இசையும் இசைக் க‌ருவிக‌ளும்

உ.வே.சாமிநாதய்யர்

[ 1929-ஆம் வ‌ருஷ‌ம் மே மாத‌ம் 16-ஆம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. ம‌ண்ட‌ப‌த்தில் கோடைக்கால‌ வாத்திய ச‌ங்கீத‌ப் ப‌ள்ளிக்கூட‌த்தின் ஆத‌ர‌வில் செய்த‌ பிர‌ச‌ங்க‌ம். ]

இசையின் பெருமை

 இசையினுடைய‌ பெருமையை ஓர்ந்தே த‌மிழ‌ர், முத்த‌மிழுள் இசைத்தமிழை ந‌டுநாய‌க‌மாக‌ வைத்திருக்கின்ற‌ன‌ர்.இய‌ற்ற‌மிழாகிய இலக்கிய நூல்க‌ள் செய்யுட்க‌ளால் இயன்றன‌.அவை இசையுட‌னேயே ப‌யில‌ப்ப‌ட‌வேண்டும்.நாட‌க‌த்திற்கு இசை இன்றிய‌மையாத‌தென்ப‌தை யாவ‌ரும் அறிவ‌ர்.த‌மிழ் இல‌க்கிய இல‌க்க‌ண‌ப் ப‌யிற்சியும், ஆங்கில‌ம் தெலுங்கு முத‌லிய‌ பாஷைக‌ளின் ப‌யிற்சியும் உடைய‌வ‌ர்க‌ளால் அவ்வ‌க் க‌லைக‌ளில் அறிவுடையாரையே இன்புறுத்த‌ முடியும்.ஆனால் இசையோ க‌ற்றார்,க‌ல்லார், வில‌ங்கின‌ங்கள், பறைவைக‌ள் முத‌லிய‌ எல்லா உயிர்க்கும் இன்ப‌ம் ந‌ல்கும்.ப‌ண்டைத் த‌மிழ் இல‌க்கிய‌ங்க‌ளில் இருதிணை உயிர்க‌ளும் இசையின் வ‌ய‌ப்ப‌ட்டு நின்றன‌வென்று ப‌ல‌ இட‌ங்களிற் கூற‌ப்ப‌ட்டுள்ள‌து.


காட்டிலுள்ள‌ புஷ்ப‌ங்க‌ள் ம‌ல‌ரும் ப‌ருவ‌த்தில் வ‌ண்டுகள் சென்று அவ‌ற்றிலிருந்து ஊதும். ம‌ல‌ரும் ப‌ருவ‌த்திலிருக்கும் பேர‌ரும்பு 'போது'என்று த‌மிழிற் கூற‌ப்ப‌டும். காட்டிலுள்ள‌ முனிவ‌ர்க‌ளும் பிற‌ரும் சிற்சில‌ போதுகள் ம‌ல‌ர்வதாற் கால‌த்தை அறிந்து வ‌ந்த‌ன‌ர். நள்ளிருள் நாறி என்றொரு ம‌ல‌ர் உண்டு. அது ந‌டுயாம‌த்திலேதான் ம‌ல‌ரும். சூரிய‌ன் ம‌றைந் திருப்பினும்,ம‌ல‌ர்த‌லாலும் குவித‌லாலும் போதினைப் புல‌ப்ப‌டுத்த‌லின் போதென்று அப் பேரரும்புக‌ள் பெய‌ர் பெற்ற‌ன‌.அப்போதுக‌ளில் வ‌ண்டுக‌ள் இசை பாட‌ அவை ம‌ல‌ரும்; "புத‌லும், வ‌ரிவண் டூத‌ வாய்நெகிழ்ந்த‌ன‌வே" என்பது குறுந்தொகை.

பாம்பு இசைக்கு அட‌ங்கும் என்று கூறுவ‌ர். ம‌த‌ம் பிடித்து அலையும் யானைக‌ளும் இசையால் அட‌ங்கிவிடும்; ப‌ரிக்கோல்,குத்துக்கோல் முத‌லிய‌ ஆயுத‌ங்க‌ளாலும் அட‌க்க‌ முடியாத யானை வீண‌யின் இசைக்கு அட‌ங்கி விடுமாம்; இச்செய்தியே உவ‌மான‌மாக‌,

"காழ்‌வ‌ரை நில்லா க‌டுங்க‌ளிற் றொருத்த‌ல்
யாழ்வ‌ரைத் த‌ங்கி யாங்கு"

என்று க‌லித்தொகை யென்ற ச‌ங்க நூலிற் கூற‌ப்ப‌ட்டுள்ளது.

"அணியிழை மகளிரும் யானையும் வணக்கும்
மணியொலி வீணையும்"

என்று பெருங்கதையும்,

"மகரயாழ் வல்ல மைந்தன்
ஒருவனைக் கண்ட மத்தப்
புகர்முகக் களிற்றின்"

என்று மேருமந்தர புராணமும் கூறுகின்றன.

குறிஞ்சி நிலத்தில் தினைக்கொல்லையைக் காக்கும் ஒருபெண் தெள்ளிய சுனையில் நீராடிப் பரணின்மேல் நின்று இனிய காற்றில் தன்கூந்தலை ஆற்றிக் கொண்டும் மிகுந்த களிப்புடன் அந்நிலத்துக்குரிய குறிஞ்சிப் பண்ணைப் பாடிக்கொண்டும் நிற்கையில், தினைக்கதிரை உண்பதற்காக அங்கே வந்த யானை யொன்று அந்தப் பெண்ணின் இசையிலே மயங்கிக் கதிரை உண்ணாமல் தான் கொண்ட பெரும்பசியையும் மறந்து மயங்கி நின்றதாக ஒரு செய்தி அகநானூறு என்னும் நூலில் காணப்படுகின்றது. இந்தக் காட்சியையே,

"ஒலியல் வார்மயி ருளரினன் கொடிச்சி
பெருவரை மருங்கிற் குறிஞ்சி பாடக்
குரலுங் கொள்ளாது நிலையினும் பெயராது
படாஅப் பைங்கண் பாடுபெற் றொய்யென
மறம்புகன் மழகளி றுறங்கு நாடன்"

என்ற அடிகள் தெரிவிக்கின்றன.

பெருங்கதையில், உதயணன் நளகிரி யென்ற மதம் பிடித்த யானையை வீணை வாசித்து அடக்கி அதன்மேல் ஏறி ஆயுதங்களை எடுத்துத்தர அதனையே ஏவி ஊர்ந்தானென்று ஒருசெய்தி காணப்படுகிறது. இசையினால் வணக்கப்பட்ட அந்த யானை உதயணனுக்கு அடங்கி நின்றதை ஆசிரியர் கூறுகையில்,

'குருவினிட‌த்துப் மிகுந்த ப‌க்தியுள்ள‌ ஒரு சிஷ்ய‌னைப் போல‌ யானை ப‌டிந்த‌து'என்னும் பொருள் ப‌ட‌,

"வீணை யெழீஇ வீதியி ன‌ட‌ப்ப‌
ஆணை யாசாற் க‌டியுறை செய்யும் 
மாணி போல‌ ம‌த‌க்க‌ளிறு ப‌டிய‌"

என்று பாடியுள்ளார்.

ப‌சுக்க‌ள் இசையின் வ‌ய‌ப்ப‌டுகின்ற‌ன‌ என்ப‌தைக் க‌ண்ண‌ன் க‌தை விள‌க்கும்.ப‌சுக்க‌ளைப் ப‌ல‌ இட‌ங்க‌ளிலும் மேய‌விட்டு விளையாடிக் கொண்டிருந்த‌ க‌ண்ண‌பிரான் மாலைக் காலத்தில் அவ‌ற்றை ஊருக்கு ஓட்டிப் போக‌ வேறு ஒன்றும் செய்வ‌தில்லை.குழ‌லை யெடுத்து ஊதுவான்; உட‌னே ப‌ல‌ இட‌ங்க‌ளிலும் மேய்ந்து கொண்டிருந்த‌ ப‌சுக்க‌ளெல்லாம் ஒருங்கே திர‌‌ண்டு க‌ண்ண‌ன்பால்வ‌ந்து சேரும்.இத‌னையே,

"ஆக்குவித் தா‌ர்குழ லால‌ரங் கேச‌ர்",

என்று திவ்ய‌ க‌வி ஒருவ‌ர் சுருக்க‌மாக‌ விள‌க்குகின்றார். பெரிய புராண‌த்திற் கூற‌ப்ப‌டும் நாயன்மார்களுள் ஆனாய‌ நாய‌னாருடைய‌ புராண‌த்தும் இத்த‌கைய‌ செய்திக‌ள் காண‌ப்ப‌டுகின்ற‌ன‌.

அசுண‌மா என்றொரு வில‌ங்கு உண்டு.அத‌னைப் ப‌ற‌வை யென்பாரும் உள‌ர்.இசையை அறிவ‌திற் சிற‌ந்த‌து அது. இனிய‌ இசையைக் கேட்டுக் க‌ளிக்கும்; இன்னாத‌ இசையைக் கேட்பின் மூர்ச்சையுற்று விழுந்து விடும்.அத‌ன் த‌ன்மையை,

"இருஞ்சிறைத் தொழுதி யார்ப்ப‌யாழ் செத்து
இருங்க‌ல் லிடர‌‌ளை ய‌சுண‌ மோர்க்கும்"

என்ற‌ அக‌நானூற்ற‌டிக‌ளாலும்,

"இன்ன ளிக்குர‌ல் கேட்ட வ‌சுண‌மா 
அன்ன ளாய்மகிழ் வெய்துவித் தாள்"

என்ற சீவக சிந்தாமணிப் பாட்டாலும்,

. யாழ்
ந‌றைய‌ டுத்த‌ வ‌சுண‌ந‌ன் மாச்செவிப்
ப‌றைய‌ டுத்த‌து போலும்"

என்ற‌ க‌ம்ப‌ர் வாக்காலும் அறிய‌லாகும்.அத‌னைப் பிடிக்க‌ எண்ணிய‌வ‌ர்க‌ள் மறை‌விலிருந்து யாழ் வாசிப்பா‌ர்க‌ளென்றும் அதன் இசையைக் கேட்டு அருகுற்று அசுணம் களிக்கு மென்றும் அப்பொழுது அதனைப் பிடித்துக் கொள்வார்க ளென்றும் தெரிகிற‌து. அவ‌ர்க‌ள் கை முத‌லில் யாழின் இசையால் அசுண‌த்திற்கு இன்ப‌த்தை விளைவித்துப் பின்பு அத‌ன் உயிருக்கே அழிவு சூழ்வ‌தை ந‌ற்றிணையில் உவ‌மையாக‌ எடுத்தாண்டு,

"அசுணங் கொல்பவர் கைபோ னன்றும்
இன்பமுந் துன்பமு முடைத்தே"

என்று ஒரு ந‌ல்லிசைப் புல‌வ‌ர் பாடியிருக்கின்றார். கின்ன‌ர‌ப் ப‌ற‌வையும் இத்த‌கைய‌தே.

வ‌ண்டி மாடு,ஏற்ற‌க் காளைக‌ள் முத‌லிய‌வ‌ற்றை இய‌க்கும்பொழுது தெம்மாங்கு,ஏற்ற‌ப் பாட்டு முத‌லிய பாடல்களைப் பாடுவ‌தையும்,அவைகளைக் கேட்டு அவ்வில‌ங்குக‌ள் த‌ம் வேலையை வ‌ருத்த‌மின்றி அமைதியாக‌ச் செய்து வ‌ருவ‌தையும் இன்றும் காண்கிறோம். அந்த‌த் தெம்மாங்கு தேன் பாங்குபோலும்! குழ‌ந்தைக‌ள் அன்னையின் இனிய‌ தாலாட்டிசையைக் கேட்டு அழுகை ஓய்ந்து உற‌ங்குவ‌தை எவ‌ர்தாம் அறியார்?

வ‌ன்ம‌ன‌க் க‌ள்வ‌ரும் த‌ம் கொடுஞ் செய‌லை ம‌ற‌ந்து இசை வ‌ய‌த்தாராவ‌ர். ஒரு ப‌ழைய‌ நூலில் இத்தகைய‌ செய்தி காண‌ப்ப‌டுகிற‌து. பாலை நில‌‌த்தில் ஆற‌லைக‌ள்வ‌ர் வ‌ழிவ‌ருவோர் பொருளையும் உயிரையும் க‌வர்வா‌ர்; பொருளில்லையெனினும் வாளால் வெட்ட‌ப்ப‌ட்ட‌ உட‌ம்பு துள்ளுவ‌தைப் பார்த்தேனும் க‌ளிக்கும் பொருட்டுக் கொலை செய்வ‌ர். அவ‌ர்முன் பொருநர்கள் பாலைப்ப‌ண்ணைப் பாடினால், அக்க‌ள்வ‌ர் த‌ம் கையிலுள்ள‌ ஆயுத‌ங்க‌ளை ந‌ழுவ‌விட்டுத் த‌ங்க‌ள் வ‌ன்றொழிலை மற‌‌ந்து அன்புற்று இசைக்கு உருகுவார்க‌ளாம். இத‌னையே,

"ஆற‌லை க‌ள்வ‌ர் ப‌டைவிட‌ அருளின்
மாறுத‌லை பெய‌ர்க்கு மருளின் பாலை"

என்ற‌ அடிக‌ள் உண‌ர்த்துகின்ற‌ன‌.

சீவ‌க‌ சிந்தாம‌ணியின் க‌தாநாய‌க‌னான‌ சீவ‌க‌ன், ஆண்க‌ளைப் பார்ப்ப‌துகூட‌ இல்லையென்ற‌ விர‌தத்துட‌ன் இருந்த‌ சுர‌ம‌ஞ்ச‌ரியென்ற‌ பெண்ணின்பால் ஒரு பழுத்த கிழவன் வேட‌ங் கொண்டு சென்று இசை பாடி அவளை வசப்படுத்தினான். அவனது இசையைக் கேட்ட பெண்கள் யாவரும் வேடன் பறவைபோற்கத்தும் ஓசையைக் கேட்டு மயங்கி ஒரே கூட்டமாக ஓடிவரும் மயிலினங்களைப்போல விரைந்து வந்தனரென்று கவி அவ்விடத்தில் வருணிக்கிறார்.

"கள்ள மூப்பி ன‌ந்தனன் 
      க‌னிந்த‌ கீத‌ விதியே
வ‌ள்ளி வென்ற‌ நுண்ணிடை
      ம‌ழைம‌ ல‌ர்த்த‌ ட‌ங்க‌ணார்
புள்ளு வ‌ம்ம‌ திம‌க‌ன்
      புண‌ர்த்த‌ வோசை மேற்புக‌ன்
றுள்ள‌ம் வைத்த‌ மாம‌யிற் 
      குழாத்தி னோ*...."

என்ப‌து அந்த‌ப் பாட்டு.

பிற‌ரை இசை த‌ன்வ‌ய‌ப்ப‌டுத்தும் என்னும்போது என்னுடைய‌ இள‌மைக் கால‌த்தில் ந‌ட‌ந்த‌ ஒரு விஷ‌ய‌ம் ஞாப‌க‌த்துக்கு வ‌ருகிற‌து. என்னுடைய‌ த‌மிழாசிரியாகிய‌ திரிசிர‌புர‌ம் ம‌காவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்த‌ர‌ம் பிள்ளைய‌வ‌ர்க‌ளிட‌த்துச் சிற‌ப்புப்பாயிர‌ம் பெறப் பல புலவர்கள் முயற்சி செய்வதுண்டு. சிறந்த சங்கீத வித்துவானும் மிக்க சிவபக்தரும் ஆகிய கோபாலகிருஷ்ணபாரதி யவர்கள் தாம் இயற்றிய நந்தன் சரித்திரக் கீர்த்தனத்திற்குச் சிறப்புப்பாயிரம் வேண்டியபோது பிள்ளையவர்கள் தருவதற்கு மறுத்து விட்டார்கள். மறுத்தாலும் பாரதியார் முயன்றே வந்தார். ஒருநாள், பிள்ளையவர்கள் உள்ளே படுத்திருக்கும்போது அவர்கள் வீட்டிற்கு வந்த பாரதியார் பிள்ளையவர்கள் நித்திரை செய்கிறார்களென்பதை அறிந்து எழுப்புதல் கூடாதென்று எண்ணி வெளியேயிருந்து தமது நந்தன் சரித்திரக் கீர்த்தனையிலுள்ள, "கனக சபாபதி தரிசனம் ஒருநாள் கண்டாற் கலி தீரும்" என்ற கீர்த்தனையை இனிமையாக மெல்லப் பாடிக் கொண்டிருந்தார். பிள்ளையவர்கள் விழித்துக்கொண்டு எழுந்து கீர்த்தனை முழுவதையும் பாடும் வரையில் இருந்து கேட்டு மனம் உருகி,'இதற்குச் சிறப்புப் பாயிரம் கொடாமல் இருப்பது முறையன்று' என்று உடனே வந்து சிறப்புப் பாயிரமொன்றை வழங்கினார்கள்.*
--------
*இவ்வரலாற்றின் விரிவை கோபாலகிருஷ்ண பாரதியார் சரித்திரத்திற் காணலாகும்.

பரமசிவனே இசையின் வடிவமாய் இருப்பவனென்றும் இசையிற் பிரியம் உடையவனென்றும் பெரியோர்கள் சொல்லி யிருக்கிறார்கள்.

"ஏழிசையா யிசைப்பயனாய்"
"இயலவன் இசையவன்"
"இயலிசைப் பொருள்க ளாகி"
"ஏழிசையை"

என வரும் தேவாரப் பகுதிகள் சிவபெருமான் இசையுருவின‌னென்பதை நன்கு தெரிவிக்கின்றன.இசையிலுள்ள விருப்பத்தினால் அனவரதமும் இசையைக் கேட்டு ஆனந்திக்கும் பொருட்டுக் கம்பளர் அசுவதரர் என்ற இசையில் வல்ல இரண்டு கந்தருவர்களைச் சிவ பெருமான் காதிற் குழையாக வைத்தருளியிருக்கின்றனனென்று நூல்கள் கூறும்.

"இசைவிரும்புங் கூத்தனார்" என்பதும் இறைவனுடைய இசை விருப்பத்தை வெளியிடும். ஈசுவரன் திருக்கரத்தில் வீணையை வைத்து வாசித்து இன்புறுவதாகப் பெரியோர் கூறுவர்; "எம்மிறை நல் வீணை வாசிக்குமே" என்பது தேவாரம். இத்தகைய மூர்த்தி 'வீணா தட்சிணாமூர்த்தி' என்று வழங்கப் படுவ‌ர். கண்ணன் வேய்ங் குழலோடு விளங்கி இசை பரப்பியதை அறியாதார் யார்? கடவுளாலேயே விரும்பப்படுவது இசையென்பதை அறிந்து பல தொண்டர்கள் இசையாலேயே இறைவனை வழிபட்டிருக்கின்றார்கள். நாயன்மார்களுள் ஆனாய நாயனார், திருநாளைப் போவார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், பரமனையே பாடுவார் முதலியவர்கள் இசையால் வழிபட்டுப் பேறு பெற்றவர்கள். ஆனாய நாயனார் ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தைக் குழலில் இசைத்து ஊதி வழிபட்டார். மதுரையில் பாணபத்திர‌ர் என்னும் அடியார் யாழ் வாசித்துச் சிவபெருமானை வணங்கி வந்தார். அவருக்காகச் சோமசுந்தரக் கடவுள் விறகு சுமந்து இசைபாடி அவருடைய எதிரியைப் பயந்து ஓடச் செய்தார். திருமாலடியார்களுள்ளும் திருப்பாணாழ்வார், நம் பாடுவான் முதலியோர் இசைபாடித் திருமாலை வழிபட்டார்கள். இத்தகையவர் இன்னும் பலருளர்.

கடவுளைத் துதிக்கும் தோத்திரங்களெல்லாம் இசைப்பாட்டாக அமைந்து விளங்குதல் கடவுளுக்கு இசையிலுள்ள விருப்பத்தை வெளியிடுமன்றோ? தேவாரம் திருவாசகம் முதலிய திருமுறைகளும், திவ்யப்பிரபந்தமும்,திருப்புகழும்,தத்துவராயர் பாடுதுறை முதலியனவும் இசைப்பாட்டுக்களாலாகிய நூல்களே. தேவாரங்களின் பண்கள் முற்கூறப்பட்ட திருநீலகண்ட யாழ்ப்பாணர் பரம்பரையில் வந்த ஒருவரால் அமைக்கப்பட்டன.அ ங்ஙனமே திவ்யப் பிரபந்தத்திற்கும் பண்கள் அமைக்கப் பட்டிருக்க வேண்டும். இவற்றைத் தெரிவிக்கும் நூலைத் தேவகானமென்பர்.எ ல்லோரும் அனுசந்திக்க இயலுமாறு ஒருவித இசையுடன் இப்போது பயிலப்பட்டு வரினும், திவ்யப் பிரபந்தத்தில் ஒவ்வொரு பதிகத்திற்கும் உரிய பண்கள் முன்பு அமைந்திருந்தனவாதல் வேண்டும். இப்பொழுது பதிப்பிக்கப்பட்டுள்ள‌ திவ்யப் பிரப‌ந்தப் புத்தகங்களிற் பலவித ராகங்களைப் பொருத்தமின்றி அமைத்திருக்கின்றார்கள். ஒரே பதிகத்தில் ஒவ்வொரு பாட்டிற்கும் தனித்தனி ராகங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு இருப்பது முறையன்று.

இதுகாறுங் கூறியவை இசையின் பெருமையைப் புலப்படுத்தும். இனி, தமிழர் இசையை வளர்த்த முறையை ஆராய்வோம்.

தமிழர் இசை

பழைய தமிழ்ச் சங்கங்க‌ளில் மூன்று தமிழையும் ஆராய்ந்து வந்தார்கள். இசைத் தமிழாராய்ச்சியும் இசைப் பயிற்சியும் அப்பொழுது ஏனைய இயல் நாடகங்கள் போல மிகவும் சிறந்து விளங்கின.

இசைத் தமிழ்ச் சங்கங்களே தனியே அமைக்கப் பட்டுப் பல இசைவல்லார்கள் இசைத் தமிழை வளர்த்து வருவதற்கு நிலைக்களனாக இருந்தனவென்று தெரிய வருகிறது.

"ஏழிசைச் சூழல்புக்கோ"

என்று வரும் திருச்சிற்றம்பலக் கோவையாரால் இசைச் சங்கங்களும் இருந்தனவென்பதை அறியலாம். கடைச்சங்கப் புலவர்களுள்ளும் இசையையே சிறப்பாகப் பயின்று ஆராய்ந்து நூல்கள் இயற்றியவர்களும் இருந்தார்கள். அவர்கள் கண்ணகனார், கண்ணனாசனார், கேசவனார், நந்நாகனார், நல்லச் சுதனார், நன்னாகனார், நாகனார், பித்தாமத்தர், பெட்டகனார், மருத்துவன் நல்லச்சுதனார் முதலியோர். இவர்களையன்றி நெடும்பல்லியத்த‌னார் என்று ஒருவர் இருந்தார். அவர் பல வாத்தியங்களிலும் பயிற்சியுடையவராதல் பற்றி அப்பெயர் பெற்றார் போலும். அவர் பாட்டிற் பல வாத்தியங்களின் பெயர்கள் சொல்லப்பட்டிருக்கினறன. புதுக்கோட்டைத் தச வாத்தியம் கிருஷ்ணையர் என்ற ஒரு சங்கீத வித்துவானுடைய ஞாபகம் இங்கே வருகிறது. அவர் பத்து வாத்தியங்களை வாசிப்பதில் வல்லவர். கூடாரம்போல‌ ஓர் இடம் அமைத்து அதில் இருந்து கொண்டு சுற்றிலும் பல வாத்தியங்களை வைத்து அவர் வாசிப்பார்.

கடைச்சங்க காலத்தில் இருந்த இசைத்த‌மிழ் இலக்கண இலக்கிய நூல்கள் பல. இப்பொழுது சிலப்பதிகார உரைகளே அந்த நூல்களின் பெயர்களையும் அவற்றிற் சிலவற்றிலிருந்து சில பகுதிகளையும் தெரிவிக்கன்றனவே யன்றி அந்நூல்கள் அகப்படவில்லை. அந்தச் சிலப்பதிகார உரைகளால் தெரிந்த தமிழ் இலக்கண நூல்கள் பெருநாரை, பெருங்குருகு, பஞ்சபாரதீயம், இசை நுணுக்கம், பஞ்சமரபு, தாள சமுத்திரம், கச்சபுட வெண்பா, இந்திரகாளியம், பதினாறு படலம், தாளவகையோத்து, இசைத்தமிழ்ச் செய்யுட்டுறைக் கோவை முதலியன. பிற்காலத்தில் எழுந்த சுத்தானந்த‌ப்பிரகாசம் முதலிய சில நூல்களும் இசையிலக்கணத்தைக் கூறுவனவே. பழைய இசைத்தமிழ் இலக்கியங்கள் சிலப்பதிகாரம், பரிபாடல் முதலியனவாம். சிலப்பதிகாரம், இலக் கணங்களையும் கூறும். சீவகசிந்தாமணி, சூளா மணி, கல்லாடம், திருவால வாயுடையார் திரு விளையாடற் புராணம், பரஞ்சோதி முனிவர் திரு விளையாடல், அதிவீரராம பாண்டியர் இயற்றிய நூல்கள் முதலிய பிற்கால நூல்களிலும் இசைத் தமிழ் இலக்கணங்கள் காணப்படுகின்றன.

குறவஞ்சி, பள்ளு, சிந்து முதலிய பிற்காலப் பிரபந்தங்களும் இசையைச் சேர்ந்தனவே.

இசைத் தமிழ் இலக்கண நூல்கள் பல இருந்தன வென்பதால் அக்காலத்தில் இருந்த இசையமைப்பின் விரிவு உணரப்படும். சிலப்பதிகாரம் முதலிய நூல்களால் இசையைப் பற்றித் தெரிந்தவற்றிற் சில கூறுவேன்.

இசைவகை

இசையில் பண்களென்றும் திறங்களென்றும் இருவகை உண்டு. பண்கள் ஏழு நரம்புகளும் கொண்டன. நரம்பு என்பது இங்கே ஸ்வரம். ஏழு ஸ்வரமுங் கொண்டவை ஸம்பூர்ண ராகம். அதுவே பண்ணாம். வடமொழியில் மேளகர்த்தாவென்று கூறப்படுவதும் அதுவே. ஏழு ஸ்வரங்கள் வடமொழியில் ஸட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று கூறப்படும்; அவற்றையே தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என வழங்குவர். யாவருக்கும் இயல்பான குரல் ஸட்ஜம் ஆகும். அதனைக் குரலென்றே வழங்கிய பெயரமைதி வியக்கற் பாலது. ஏழு ஸ்வரங்களுக்கும் ஸ, ரி, க, ம, ப, த, நி என்று இப்போது பயிலப்படும் எழுத்துக்களைப் போலவே தமிழ் முறையில் ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ என்ற ஏழு நெடிலையும் ஸ்வரங்களுக்கு எழுத்துக்களாகக் கொண்டு பயின்றனர். இந்த ஏழு நரம்புகளும் நிறைந்த ராகம் பண்ணென்று முன்னரே சொன்னேன். ஜனகராகமென்பதும் அதுவே. அப்பண்களிலிருந்து திறங்கள் பிறக்கும். அவை இக்காலத்தில் ஜன்ய ராகங்களென்று வழங்கப்படும்.

"நிறைநரம் பிற்றே பண்ணென லாகும்
குறை நரம்பிற்றே திறமெனப் படுமே"

என்ற திவாகரச் சூத்திரத்தால் பண்கள், திறங்கள் என்பவற்றின் இலக்கணம் விளங்கும். பண்களுக்கு இனமாகத் திறங்கள் கூறப்படும். யாப்பருங்கல விருத்தி யுரையில் காணப்படும் மேற்கோட் செய்யுளாகிய,

"பண்ணுந் திறமும்போற் பாவு மினமுமாய்
வண்ண விகற்ப வகைமையாற் பண்ணின்
நிறம்விளரிக் கில்லதுபோற் செப்ப லகவல்
இசைமருட்கு மில்லை யினம்"

என்பதில் இது விளக்கப்பட்டிருத்தலைக் காணலாம்.

இப்படிப் பிறக்கும் பண்ணும் திறமுமாம் இசை வகைகள் ஒரு வழியில் தொகுக்கப்பட்டு 11,991 என்று கூறப்படுகின்றன.

பண்கள் பல வகைப்படும். குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் எனப்பெரும்பண்கள் ஐந்து. இவற்றின் வகையாகும் பண்கள் பல. இவற்றுள் பகற் பண்கள் முதலியனவும், அவ்வப்பொழுதிற்கு அமைந்த பண்களும், யாமங்களுக்குரியனவும் எனப் பலவகை யுண்டு. புறநீர்மை முதலிய பன்னிரண்டு பண்கள் பகற்பண்களெனப்படும். தக்க ராக முதலிய ஒன்பது பண்கள் இராப் பண்களெனப்படும். செவ்வழி முதல் மூன்று பொதுப் பண்களாம். காலைக்குரிய பண் மருதம். மாலைக்குரியது செவ்வழி என்பாரும் உளர். இந்தப் பண்களால் இசை வல்லோர்கள் சில குறிப்பினை அறிவிப்பதுண்டு. ஒருவர் தம் நண்பனை மாலையில் வரவேண்டி மாலைப்பண்ணைப் பாடினாரென்று ஓரிடத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இரங்கற் பண் விளரி. அதைப் பாடிப் பிறர்பால் இரக்கம் உண்டாக்கினார்கள். சிவபெருமானால் கைலையின் கீழ் அமிழ்த்தப்பட்ட இராவணன் அவருக்கு இரக்கம் உண்டாக விளரியைப் பாடினான் என்ற பொருள்பட,

"விராய்மலர்ப்பூங் குழலிபங்கன் மகிழ்வி னோங்கும்
வெள்ளிமலைக் கீழ்க்கிடந்து விளரிபாடும், இராவணனார்"

என்று ஒரு கவிஞர் பாடியுள்ளார். இச் செய்யுட்பகுதி விளரி இரங்கற்பண் என்பதை நன்கு தெரிவிப்பது காண்க.

இத்தகைய பண்களை அமைத்துப் பாட்டுக்கள் இயற்றப்பெறும். பொருட்கு ஏற்றனவும், சுவைக்கு ஏற்றனவுமாகிய பண்களை யமைத்து இசைப் பாட்டுக்களைப் புலவர் பாடினர். பண்ணும் பாட்டும் இயைந்திருத்தல் வேண்டும்.

"பண்ணென்னாம் பாடற் கியைபின்றேல்"

என்ற குறள் இதனை வலியுறுத்தும். பண்ணமைந்த இசைப்பாட்டுக்கள் உருக்கள், வரிகள் எனக் கூறப்படும். இக்காலத்தில் கீர்த்தனங்களைக் குறிக்க வழங்கும் உருப்படிகள் என்ற சொல் உரு என்ற பழைய வழக்கிலிருந்தே வந்திருக்க வேண்டுமென்று எண்ணுகிறேன். அவ்வுருக்கள் பத்துவகை யென்று ஒரு சாரார் பகர்வர். அவை செந்துறை, வெண்டுறை, பெருந்தேவபாணி, சிறுதேவபாணி, முத்தகம், பெரு வண்ணம், ஆற்றுவரி. கானல்வரி, விரிமுரண், தலை போகு மண்டிலம் என்பனவாம். தாளக்கிரியையுடன் பொருந்தும் பாட்டுக்கள் ஒன்பதென்பர்; அவை,சிந்து, திரிபதை, சவலை, சமபாத விருத்தம், செந்துறை, வெண்டுறை, பெருந்தேவபாணி, சிறு தேவபாணி, வண்ணம் என்பனவாம்.

இவைகளை யன்றி இசைப்பகுதியில் கந்தர்வ மார்க்க மென்பதொன்று உண்டு. இடை மடக்காகப் பாடுவதாகும் அது. காந்தர்வ சாஸ்திர மென்பது சங்கீத சாஸ்திரத்துக்கு ஒரு பெயர்.

பாடுங்கால் இன்னவகை யிலக்கணங்களோடு பாடவேண்டும் என்ற விஷயங்களை மிக விரிவாக இசை நூல்கள் கூறும். குற்றம் சிலவகைப்படும்; இன்ன குற்றங்கள் இசை பாடுவோர்பால் இருத்தல் கூடாவென விலக்கியும் நூல்கள் கூறும்.

"வயிறது குழிய வாங்கல்
      அழுமுகங் காட்டல் வாங்கும்
செயிரறு புருவ மேறல்
      சிரநடுக் குறல்கண் ணாடல்
பயிரரு மிடறு வீங்கல்
      பையென வாயங் காத்தல்
எயிறது காட்ட லின்ன
      உடற்றொழிற் குற்ற மென்ப"

என்று திருவிளையாடற் புராணம் தெரிவிக்கின்றது.

பெரிய வித்துவான்கள் சிலரிடத்தும் இத்தகைய குற்றங்கள் காணப்படும்: காரணம் அவர்கள் தம்மைத் திருத்திக்கொள்ளாமையே.

இனி, இசைக் கருவிகளைப் பற்றிப் பேசுவேன்.

இசைக் கருவிகள்

இசைக்கருவிகள் கீதாங்கம், நிருத்தாங்கம், உபயாங்கம் என மூவகைப்படும். பாடும்பொழுது மட்டும் கொள்ளுதற்குரியன கீதாங்க வாத்தியங்கள். நிருத்தரங்கம் நாடகத்திற்குரியன. இரண்டிலும் பயன் படுவன உபயாங்கமாம். எல்லா வாத்தியங்களுள்ளும் குழலையே முன்னதாகக் கூறியிருக்கிறார்கள். ஏனெனில், இயற்கையை அனுசரித்து அது செய்யப்பட்டது. காட்டில் வளர்ந்திருக்கும் மூங்கில்களில் வண்டுகள் துளைத்த துளைகளின்வழியே காற்று வீசும்பொழுது இனிய ஓசை எழும். அதைக் கேட்டே குழலை அமைத்தார்கள். இயற்கையில் மூஙகிலில் எழுந்த அந்த இனிய ஓசையைப்பற்றி அகநானூற்றிற் காணப்படும்

" ஆடமைக் குயின்ற வவிர்துளை மருங்கிற்
கோடை யவ்வளி குழலிசை யாகப்
பாடின் னருவிப் பனிநீ ரின்னிசைத்
தோடலின் முழவின் றுதைகுர லாக"

என்ற அடிகள் விளக்குகின்றன. புல்லாங்குழலென்னும் பெயர் அது மூங்கிலால் செய்யப்பட்டமையால் ஏற்பட்டது. சிறுவர்கள் விளையாடும் கிட்டுப்புள் போன்று இருப்பதால் புள்ளாங்குழல் என்ற பெயர் அதற்கு அமைந்தது என்பர் சிலர்; அது பொருந்தாது.

" புறக்கா ழெல்லாம் புல்லெனப்படுமே"

என்ற சூத்திரத்தின்படி புறத்தே வயிரமுடைய மூங்கில் முதலியன புல்லெனப்படும். எனவே மூங்கிலாற் செய்யப்பட்டமை காரணமாகப் புல்லாங்குழலென்னும் பெயர் ஏற்பட்டதென்பதே பொருத்தமாகும். வங்கியம் என்றும் குழலுக்கு ஒரு பெயர் சொல்லப்படும். அது வம்சமென்பதன் திரிபு; வம்ச மென்பது மூங்கிலைக் குறிக்கும் வடமொழிப் பெயர்.

இயற்கை மூலமாக அறிந்து அமைத்தது பற்றிக் குழலே முதல் இசைக் கருவியாயிற்று.

"குழல்வழி நின்றதி யாழே யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே முழவொடு
கூடிநின் றிசைந்த தாமந் திரிகை"

என்ற சிலப்பதிகார அடிகளில் இசைக்கருவிகள் முறையாகக் கூறப்பட்டிருக்கின்றன.

"குழலினிதி யாழினி தென்ப"

என்னும் குறளில் குழல் முன் வைக்கப்பட்டிருத்தல் காண்க.

குழலில் பலவகை உண்டு. கொன்றையங்குழல், ஆம்பலந் தீங்குழல், முல்லையங்குழல் முதலியன பல இலக்கியங்களிற் சொல்லப்படுகின்றன. குழலின் இலக்கணங்களை விரிவாக நூல்களிற் காணலாம்.

இப்படியே யாழ்வகைகளும் பல உண்டு. யாழ் வேறு; வீணை வேறு. பேரியாழ் என்பதொன்றுண்டு. அஃது இருபத்தொரு நரம்புகளை உயையதென்பர். பத்தொன்பது நரம்புகளையுடைய மகரயாழ் என்பதொன்றும், பதினான்கு நரம்புளைடைய சகோட யாழ் என்பதொன்றும் இசை நூல்களிற் கூறப்பட்டுள்ளன. செங்கோட்டியாழென்பதொன்று ஏழு நரம்புகளை உடையதாம். ஆயிரம் நரம்பு கொண்டதும் ஆதியாழ் என்றும் பெருங்கலமென்றும் பெயர் கொண்டதுமாகிய ஒன்று இருந்ததென்பர்.

நரம்புகளின் குணங்கள் குற்றங்கள் முதலியனவும் இலக்கணங்களில் கூறப்பட்டுள்ளன.

தண்ணுமை வகைகளும் பல. பேரிகை, பாடகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி,முழவு, சந்திரவளையம், மொந்தை,முரசு,கண்விடுதூம்பு,நிசாளம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம்,விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப்பறை முதலிய தோற்கருவிகளின் பெயர்கள் நூல்களிற் காணப்படுகின்றன. மத்தென்ற ஓசையை எழுப்புதலின் ஒரு வாத்தியம் மத்தளம் எனப்படும். கரடியின் முழக்கம் போன்று சப்திப்பதால் ஒன்று கரடிகை எனப்பட்டது. இப்படியே வாத்தியங்களில் பெயர்க்குக் காரணங்கள் அமைந்திருக்கின்றன.

இதுகாறும் கூறிவந்த இசைக்கருவிகளை யன்றி வேறு பல கருவிகளும் ஆங்காங்கே கூறப்படுகின்றன. அவை ஆகுளி, பாண்டில், கோடு, நெடுவங்கியம், குறுந்தூம்பு, தட்டைப்பறை, பதலை முதலிய பல.

இந்த இசைக் கருவிகளோடும், இசையைப் பரம்பரையாகவே பயின்று அரசர்கள் பிரபுக்கள் முதலியவர்களிடம் சென்று தம்முடைய இசை வன்மையைக் காட்டிப் பரிசுபெற்றுவந்த வகுப்பினர் சிலர் இருந்கனர். பெரும்பாணர், சிறுபாணர், பொருநர், கூத்தர் முதலியோர் அத்தகையவர்களே. மலைபடு கடாம் என்ற நூலில் அவர்கள் பல வாத்தியங்களையும் பலா மரத்திற் காய்கள் தொங்குவதுபோல் தோன்றும்படி பின்னும் முன்னும் சுமந்துகொண்டு சென்றதாகச் சொல்லப் பட்டிருகின்றது.

பாணர் என்பார் பாட்டுப்பாடி ஜீவனம் செய்து வந்தவர்கள். அவர்கள் பெரிய அரசர்களிடத்தும் குறுநில மன்னர்களிடத்தும் தம்முடைய இசை வன்மையைக் காட்டிப் பரிசு பெற்றார்கள். பொன்னாற் செய்யப்பெற்ற தாமரைப் பூவை அவர்கள் பரிசாகப் பெறுதல் வழக்கமென்று தெரியவருகின்றது. இக் காலத்தில் நல்ல வன்மையையுடைய சங்கீத வித்துவான்கள் தங்கப் பதக்கங்களைப் பெறுவதைப்போன்ற செயலாகவே அதை நாம் கருதவேண்டும்.

பாணர்களுள் சிறிய யாழை வாசிப்பவர்கள் சிறு பாணரென்றும், பேரியாழை யுடையவர்கள் பெரும்பாணரென்றும் சொல்லப்படுவர். பெரியநகரங்களில்
அவர்கள் வாழ்ந்து வந்த வீதிகள் தனியே இருந்து வந்தன.

[ நன்றி: நல்லுரைக் கோவை - 3, மதுரைத் திட்டம் ]

தொடர்புள்ள பதிவுகள் :

என் சரித்திரம்: உ.வே.சா

கம்பனைப் பாடப் புதிய ராகம்: உ.வே.சா


பெரிய வைத்தியநாதய்யர் : பகுதி 1

பெரிய வைத்தியநாதய்யர் : பகுதி 2

மற்ற சங்கீத சங்கதிக் கட்டுரைகள்


உ.வே.சா : கட்டுரைகள்

வெள்ளி, 9 அக்டோபர், 2015

கல்கி -10

கல்கியின் நகைச்சுவை -3

( தொடர்ச்சி )


முந்தைய  பகுதிகள்:

நகைச்சுவை -1

நகைச்சுவை -2








( தொடரும் )
[  நன்றி : கல்கி ; ஸ்ரீநிவாசன் ராமமூர்த்தி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவுகள் :

'கல்கி’ கட்டுரைகள்

கல்கியைப் பற்றி . . .