புதன், 13 ஏப்ரல், 2016

சங்கீத சங்கதிகள் - 72

வீணையின் குரல்

வீயெஸ்வி 

ஏப்ரல் 13. வீணை எஸ்.பாலசந்தர் அவர்களின் நினைவு தினம்.



2012 -இல்  வீணையின் குரல்: எஸ்.பாலசந்தர்-ஒரு வாழ்க்கை சரிதம்  என்ற தலைப்பில் விக்ரம் சம்பத் ஆங்கிலத்தில் எழுதிய நூலை தமிழில் பிரபல எழுத்தாளர், இசை விமர்சகர்  வீயெஸ்வி மொழிபெயர்த்த நூல் வெளிவந்தது. 

அப்போது விகடனில் வீயெஸ்வி எழுதிய நூல் அறிமுகக் கட்டுரை இதோ! 

====== 
'கச்சேரி முடிந்ததும் உங்களைப் பாராட்டுவதற்காக மேடையை முற்றுகை இடும் ரசிகர்கள் பலரில் கோடீஸ்வரர்களும் இருப்பார்கள். உங்களுடன் மனப்பூர்வமாகக் கை குலுக்க ஆர்வமுடன் வருவார்கள் அவர்கள். 'உங்களை மாதிரி நானும் ஓர் இசைக் கலைஞராக இருந்து, உங்களைப் போல இசைத் தெய்வங்களுக்குச் சேவை புரிந்து, உங்களை மாதிரி அமைதியாக வாழ்ந்து, உலகம் சுற்றிலும் இருக்கும் ஆன்மாக்களை மகிழ்வித்துக்கொண்டு இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்றே அவர்கள் பெரும்பாலும் கூறுவார்கள். அவர்களிடம் இருக்கும் லேசான பொறாமை உங்கள் மீது அல்ல. உங்களிடம் இருக்கும் கலையின் மீது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - அவர்கள் ஏழையாகவும், யார் என்றே தெரியாதவர்களாகவும் இருக்கலாம் - உங்கள் மீது ஆழ்ந்த மரியாதை வைத்து, பொது இடம் என்றும் பார்க்காமல் உங்கள் கால்களில் விழுந்து வணங்குகிறார்கள் என்றால், உங்களிடம் இருக்கும் கலையை அவர்கள் நமஸ்கரிக்கிறார்கள் என்று அர்த்தம். அவற்றை ஏற்றுக்கொள்ளும் வெறும் ஏஜென்ட்டுகள்தான் நீங்கள். உங்களைப் பற்றி பத்திரிகைகளில் எழுதப் பட்டால், நீங்கள் விமர்சனம் செய்யப்பட்டால், உங்களிடம் உள்ள கலை அலசப்படுவதாகவோ அல்லது புகழப்படுவதாகவோதான் பொருள். அவை எல்லாவற்றுக்கும் நீங்கள் வெறும் கருவி மட்டுமே!’

 - 1989-ம் வருடம் ஜூன் மாதம் 4-ம் தேதி மும்பையில் நடந்த ஒரு விழாவில் மறைந்த வீணை மேதை எஸ்.பாலசந்தர் நிகழ்த்திய உரையின் ஒரு பகுதி இது.
வீணையைக் கடவுளாகப் போற்றி வழிபாடு செய்து வந்த எஸ்.பாலசந்தர், முதலில் வாசிக்க ஆரம்பித்தது கஞ்சிரா. பின்னர் தபேலா. ஒரு கட்டத்தில் சிதாரைக் கையில் எடுத்தார். இறுதியாக வீணை மீட்டத் தொடங்கியவர் அதிலேயே செட்டில் ஆகி, சாதித்து, தனக்கு என்று தனி பாணி ஒன்றை உருவாக்கி, உலகை வலம் வந்தார். நடுவில் திரைப்படத் துறையிலும் கால் பதித்து பலராலும் பாராட்டப்பட்டார்.

பன்முகம்கொண்ட இந்த அபூர்வக் கலைஞரின் வாழ்க்கைக் கதையை 'VOICE OF THE VEENA S.BALACHANDER’ என்ற தலைப்பில் அண்மையில் வெளியாகி இருக்கும் ஆங்கில நூலில் பதிவு செய்திருக்கிறார் விக்ரம் சம்பத். மியூஸிக் அகாடமியுடன் பாலசந்தர் மல்லுக்கு நின்றதும், பாலமுரளி கிருஷ்ணாவுடன் கோதாவில் இறங்கியதும், சுவாதித் திருநாள் மற்றும் செம்மங்குடிக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கியதும், சுப்புடுவின் விமர்சனத்துக்குப் பதில் அடி கொடுத்ததும்... படிப்பதற்கு செம விறுவிறுப்பு!

எஸ்.பாலசந்தர் முதன்முதலாக கச்சேரி மேடை ஏறியது, 1933-ல். வித்வான் ஜி.சுப்ரமணியம்,வயலினிஸ்ட் தேவர், மிருதங்கம் வீரராகவ சௌத்ரியுடன் பாலசந்தரின் பெயரும் அப்போது அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் காணப்படுகிறது. விக்டோரியா ஜூப்ளி டவுன் ஹாலில் நடந்த இந்தக் கச்சேரியில் கஞ்சிரா வாசித்து இருக்கிறார் பாலசந்தர். வானொலி நிலையத்தில் இரண்டரை வருடங்கள் நிலைய வித்வானாக வேலை பார்த்திருக்கிறார். இது அவருடைய 15-வது வயதில். வீணை மீது அவருக்கு வற்றாத காதல் பிறந்தது அந்தச் சமயத்தில்தான். 'இனி வீணைதான் எனக்கு’ என்று தீர்மானித்தவர், கஞ்சிரா, தபேலா, சிதார் ஆகிய இசைக் கருவிகளுக்கு குட்பை சொல்லிவிட்டார்!

ஏவி.எம். தயாரித்த 'அந்த நாள்’ படம் எஸ்.பாலசந்தரின் சினிமா வாழ்க்கையில் ஓர் மைல் கல். இவர் இயக்கிய அந்தப் படத்தின் கதாநாயகன் சிவாஜி கணேசன்.

'படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தனித்துவிடப்பட்டால், அது நாட்டை நாசமாக்கிவிடும்’ என்பது படத்தின் தீம். கொலை செய்தவர், கொலை செய்யப்பட்டவர் இருவரைப் பார்த்தும் ரசிகர்களை அனுதாபப்படவைத்தது அந்தப் படத்தின் ஸ்பெஷல். 'அதில் நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்’ என்று தனது வாழ்க்கைச் சரிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார் சிவாஜி. 'தமிழில் தயாரிக்கப்பட்ட மிகச் சிறந்த படங்களில் 'அந்த நாள்’ படமும் ஒன்று’ என்று இன்றைய முன்னணி இயக்குநர்களான கே.பாலசந்தர், மணிரத்னம், அமீர் போன்றவர்கள் பாராட்டி இருக்கிறார்கள்.

திரைத் துறையில் எஸ்.பி-யின் புகழ் வளர வளர... அவருடைய வீணைக் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்தவர்கள் சினிமா பிரபலத்தைக் கச்சேரிகளுக்கு விளம்பரமாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இது பாலசந்தருக்குப் பிடிக்கவில்லை. விளைவு, தனது சொந்த சினிமா கம்பெனியையும் மூடிவிட்டு, திரைத் துறைக்கே முழுக்குப் போட்டுவிட்டார் அவர்!

கச்சேரிகளில் வெறும் ராகங்களை மட்டுமே கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்துக்கு வாசித்து புரட்சி ஏற்படுத்தியவர் பாலசந்தர். அதாவது, பிரதானமாக ஒரு ராக ஆலாபனை. பின்பு, தாளங்களை 45 ராகங்களில் ராக மாலிகையாக வாசிப்பார். இந்த வகையில் முதல் கச்சேரி கிருஷ்ணகான சபாவில் 1967-ம் வருடம்.

''வேறு எந்த இசைக் கலைஞரும் இதைச் சாதிக்கவில்லை. என் வாழ்க்கையில் இதற்கு முன்னால் இப்படி ஒரு நிகழ்ச்சியை நான் கேட்டதே இல்லை. இந்தக் கச்சேரி வரலாறு படைத்துவிட்டது!'' என்று இந்தக் கச்சேரியைக் கேட்டுவிட்டு பிரமித்து எழுதினார் பேராசிரியர் பி.சாம்பமூர்த்தி.


[ நன்றி: விகடன் ]

தினமணியில் வந்த அந்த நூலின் மதிப்புரை :


வீணையின் குரல்: எஸ்.பாலசந்தர்-ஒரு வாழ்க்கை சரிதம் - விக்ரம் சம்பத்; தமிழில் : வீயெஸ்வி; பக்.440, விலை ரூ. 350, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், )0462-278525.
கடந்த நூற்றாண்டில் தென்னிந்தியாவில் தோன்றிய ஒரு கலை மேதை என்றே எஸ்.பாலசந்தரைக் கூற வேண்டும். நடிப்பு, எழுத்து, சங்கீதம், பின்னணிப் பாட்டு, திரைப்பட இயக்கம் என்று வலம் வந்தவர் எஸ்.பாலசந்தர்.
சினிமாவில் தான் நினைத்ததை சாதித்த அவர், அதன் பிறகு மிகத் தீவிரமாக கர்நாடக இசைக்குத் திரும்பிவிட்டார். அவருடைய வார்த்தைகளில் கூற வேண்டுமானால், ""வீணை என்றால் பாலசந்தர், பாலசந்தர் என்றால் வீணை'' என்று அறியப்பட அவர் பெரும் உழைப்பு உழைத்தார்.
அவருடைய இசை ஞானம் லேசுப்பட்டதல்ல; பல வாத்தியங்களைச் சிறு வயதில் தானாகவே வாசிக்கப் பழகியிருந்தார். வீணையையும் அவராகவே வாசிக்கப் பழகிக் கொண்டார். பின்னர் அதில்தான் எத்தனை புதுமைகள், சோதனை முயற்சிகள்! ஆனால் எதிலும் மரபு தவறியது கிடையாது. வீணை அமைப்பிலும் அதனை உருவாக்குவதிலும் தொழில்நுட்பத்திலும் கூட அவர் கவனம் செலுத்தினார்.
எந்த ஒரு மேதையும் வைரம்தான். சீராக பட்டை தீட்டப்படாத கரடு முரடான சில பக்கங்கள் இவருக்கும் உண்டு. சக கலைஞர்களுடன் அவருடைய மோதல், அவருடைய குறைகள், மேன்மை எல்லாவற்றையும் சமமான தட்டுகளில் வைத்து அளிக்கிறார் நூலாசிரியர் விக்ரம் சம்பத்.
பாலசந்தரின் வருகையின் முக்கியத்துவத்தைத் தெரிவிக்க விரும்பிய ஆசிரியர், கர்நாடக இசை சரித்திரம், மியூசிக் அகாதமி-தமிழிசை சர்ச்சை என்று சற்று அகலக் கால் வைத்திருப்பதாகத் தோன்றுகிறது.
விமர்சனபூர்வமான வாழ்க்கைச் சரிதங்கள் தமிழில் வந்தது கிடையாது என்றே சொல்லிவிடலாம். அந்தக் குறையைப் போக்கும் முக்கியமான புத்தகம் இது.
[ நன்றி: தினமணி ] 


தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்

2 கருத்துகள்:

R.V.RAJU சொன்னது…

இசையிலும் திரையிலும் இப்போதும் நான் எஸ் பி தின் விசிறி. அந்தநாள் என் பதிநாலு வயதில் வந்தது. தினசரி காலண்டர் தாலின் பாதி அளவில் போஸ்டர், ஒவ்வொரு வீட்டு கதவின் மேலும்.

Partha Sarathy சொன்னது…

Sir,
Thank you. SB was a genius, perfectionist...