ஞாயிறு, 29 மே, 2016

சங்கீத சங்கதிகள் - 76

சில சங்கீத சமாசாரங்கள்
ரா.கி.ரங்கராஜன்

   




           
 சங்கீத கலாநிதி அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் சஷ்டியப்த பூர்த்தி நடைபெற்றபோது, அந்த விழாவுக்காகப் பல சங்கீத வித்வான்கள் வந்து இசை நிகழ்ச்சி நடத்தினார்கள். புல்லாங்குழல் மேதை பல்லடம் சஞ்சீவி ராவ் மேடை ஏறினார். குழல் வாசித்துக் கொண்டிருக்கும்போது அரியக்குடியிடம். 'உங்களுக்கு ஏதாவது தர வேண்டும் என்று நினைக்கிறேன். என்னிடம் சில்லறை இல்லை. 'நோட்டாகத் தருகிறேன்,' என்று கூறியவர், சங்கராபரண ராகத்தின் 'நோட்' வாசித்தார்.

சங்கீத வித்வான்களுள் மிக மிக தெய்வ பக்தியும் ஆசார அனுஷ்டானமும் உள்ளவராகத் திகழ்ந்தவர் செம்பை வைத்தியநாத பாகவதர். ஒரு முறை கள்ளிக் கோட்டையில் அவருடைய கச்சேரி இருந்தது. நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு சற்று முன்னால் திடீரென்று அவருக்குத் தொண்டை கட்டிக் கொண்டது. பாடுவது கஷ்டம் என்று உணர்ந்தார். நாள்பூரா நன்றாயிருந்த குரல் திடீரென்று ஏன் இப்படி ஆயிற்று என்று திகைத்த செம்பை, 'இன்று என்ன திதி?' என்று விசாரித்தார். கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசி என்று பஞ்சாங்கத்தைப் பார்த்து சொன்னார்கள். பிறகு தான் செம்பைக்குப் புரிந்தது. கார்த்திகை மாத சுக்ல பட்ச ஏகாதசியன்று குருவாயூர் சன்னதியில் பாடுவதை விரதமாகக் கொண்டிருந்தவர் அவர். அன்று அதை மறந்ததை நினைத்து வருந்தி, கச்சேரி ஏற்பாடு செய்தவரிடம் அனுமதி பெற்று, காரில் குருவாயூருக்குப் போனார். சுவாமி சன்னதியில் பாடிய போது சாரீரம் சரியாகிவிட்டது. வெகு நேரம் பாடினார். மறுநாள் கள்ளிக் கோட்டைக்குத் திரும்பி வந்து கச்சேரி செய்தார்.

இத்தகைய சங்கீதத் துணுக்குகளைப் படித்துக் கொண்டிருந்த சமயம் நண்பர் நாராயண விசுவநாத் தான் நடத்தி வரும் 'ஸரிகமபதநி' என்ற மாத இதழை நாராயண விசுவநாத் தான் அனுப்பி வைத்தார். எம்.எஸ். சுப்புலட்சுமி சிறப்பிதழ். அட்டையில் உள்ள வண்ணப் படம் கண்ணாடி போட்டு வைக்கும் அளவுக்குப் பளீரென்று இருக்கிறது. உள்ளே உள்ள கறுப்பு வெளுப்புப் படங்கள் சரியான மங்கல்.

எம்.எஸ்.ஸைப் பற்றி சமீப காலத்தில் ஏராளமான பாராட்டுக்களும் புகழுரைகளும் வாழ்க்கைக் குறிப்புக்களும் வெளி வந்துவிட்டன. ஆகவே இந்த 'ஸ்பெஷல்' இதழில் வித்தியாசமாக என்ன இருக்கப் போகிறது என்று நினைத்துப் புரட்டிப் பார்த்தேன். இரண்டொரு விஷயங்கள் புதிதாயிருந்தன.(ஒரு வேளை நீங்கள் ஏற்கெனவே கேள்விப்பட்டதாகவோ படித்ததாகவோ இருக்கலாம்.)

1. வீட்டில் செல்லப் பெயர் குஞ்சம்மாள். அன்னை ஷண்முகவடிவு புகழ்பெற்ற வீணைக் கலைஞர். மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியின் அரங்கில் ஷண்முகவடிவு அவர்களின் வீணைக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. திடீ ரென்று வீணை வாசிப்பதை நிறுத்திவிட்டு, அருகில் அமர்ந்திருந்த எட்டு வயது சிறுமி குஞ்சம்மாளைப் பார்த்து. 'எங்கே, அந்த ஆனந்த ஜா பாட்டைப் பாடு' என்றார் அன்னை. அவர் சொன்னதுதான் தாமதம், துளியும் சபைச் கூச்சமின்றி, கணீரென்று பாட ஆரம்பித்தாள் சிறுமி. சற்று முன்னால் வரை விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென மேடை யேறி ஹிந்துஸ்தானி மெட்டில் அமைந்த மராத்தியப் பாடலான 'ஆனந்த ஜா' வைப் பாடியது அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. இதுதான் எம்.எஸ்.ஸின் அரங்கேற்றக் கச்சேரி.

2. இசை உலகில் மகளுக்குக் கிடைத்த ஆதரவையும் வளர்ச்சியையும் மனத்தில் கொண்டு மதுரையிலிருந்து சென்னைக்குக் குடி பெயர்ந்தார் ஷண்முகவடிவு. சென்னை புரசைவாக்கம் தாணாத் தெருவில் ஜாகை. (ஆ! 'என்னோட' புரசை வாக்கத்துக்கு மேலும் ஒரு பெருமை!)

3. கஸ்தூரி பா நினைவு நிதிக்காகப் பல கச்சேரிகள் செய்தார் எம்.எஸ். இதைப் பாராட்டி, காந்தியடிகள் ஆங்கிலத்தில் தன் கைப்படக் கடிதம் எழுதி, தமிழிலே கையொப்பமிட்டு அனுப்பினார். அது: 'அன்புள்ள சுப்புலட்சுமி, உங்களது தெய்வீகமான இசையைப் பயன்படுத்தி, கஸ்தூரி பா நினைவு நிதிக்காக நீங்கள் செய்துள்ள ஆத்மார்த்தமான தொண்டின் முழு விவரங்களையும் ராஜாஜி என்னிடம் கூறினார். ஆண்டவனின் பரிபூரண அருட்கடாட்சம் உங்களுக்குக் கிட்டட்டும். உங்கள் மோ. க. காந்தி'.

4. 'சகுந்தலை' படத்தில் 'மல்லிகைப் பூங்கொடி பாங்கி இதோ பார்' என்ற பாடலை டி.ஏ. மதுரத்துடன் இணைந்து பாடியிருக்கிறார் எம்.எஸ்.

5. புழுதி நிறைந்த அந்த சாலையில் ஒரு ஜட்கா வண்டி போய்க் கொண்டிருந்தது. உள்ளே அமர்ந்திருந்தவர் ஒரு சாது. வண்டியின் கம்பியைப் பிடித்தபடி பினினாலேயே ஓடி வந்து கொண்டிருந்தார் ஓர் இளைஞர். தேசத் தொண்டில் தானும் பங்கேற்க வேண்டுமென்று மூச்சு இரைக்கக் கேட்டுக் கொண்டிருந்தார் அவர். 'உயிரையும் கொடுப்பாயா?' என்று சாது கேட்க, 'கொடுப்பேன் ஐயா' என்று அந்த இளைஞர் உறுதி கூற, 'சுண்ணாம்புக்காரத் தெரு பதினெட்டாம் நம்பர் வீட்டுக்கு வந்து பார்' என்றார் சாது. அவர் தொழுநோயின் நடுவில் 'வந்தே மாதரம்' என்று கோஷம் கொடுத்த தேச பக்தர் சுப்பிரமணிய சிவா. இளைஞர் எம்.எஸ்.ஸின் கணவர் கல்கி சதாசிவம். 1921ம் வருடம் இந்த சந்திப்பு நடந்த இடம் கும்பகோணம்.(ஆ! மறுபடியும் 'என்னோட' கும்பகோணம்!) 

6. சுப்புடுவின் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:( 1) (இதை சுப்புடு எப்போது எழுதினார் என்று தெரியவில்லை). இசையைத் தவிர எம்.எஸ். ஸுக்கு வேறு ஒன்றுமே தெரியாது. எந்த இடத்தில் கச்சேரி என்பது கூட அவர் தெரிந்து வைத்துக் கொள்வதில்லை. அதெல்லாம் சதாசிவத்தின் இலாகா.

வங்காளிப் பாட்டுக்கள் கற்றுக் கொள்ளும்போது எம்.எஸ். பல அல்லல்களுக்கு ஆளாகியுள்ளார். 'அந்தகார'வை 'ஒந்தகார' என்றும் 'விரஹ' என்பதை 'பீரோ ஹொ' என்றும் உச்சரிக்க, வாயைக் கிழக்கு மேற்காக அசை போட்டு. நுனி நாக்கு அண்ணாவியைத் தொட்டு, பரம வேதனையைப் பட்டால்தான் வங்காளம் வெளியேவரும். துளி உச்சரிப்பு விலகினால் கூட வங்காளம் வேதாளமாகிவிடும்.

டிசம்பர் சீசன் போது எத்தனை வித்வான்கள் பாடினார்கள், என்னென்ன ராகங்களைக் கையாண்டார்கள்,

பல்லவிக்கு எடுத்துக் கொண்ட ராகங்கள் எவை யெவை என்பதைக் கேட்டறிந்து. அலசி, எம்.எஸ்.ஸின் கச்சேரிக்கு சதாசிவம் தான் நிரல் தயாரிப்பார்.

இவ்வளவு நேரம் படித்து சலித்திருந்தவர்களுக்கு ஒரு ஜோக்:

டி. ராஜேந்தர் ஒரு கச்சேரிக்குப் போனார். எப்படி இருந்தது என்று கேட்டார்கள். 'தாத்துக்குக் காவேரி ராகத்துக்கு சாவேரி' என்றார் டி.ராஜேந்தர்.

                    
 [ நன்றி: அண்ணாநகர் டைம்ஸ் ] 

தொடர்புள்ள பதிவுகள்:

(1)  சுப்புடுவின் கட்டுரை அடுத்த ‘சங்கதி’யில் வரும் ! 


சனி, 28 மே, 2016

பதிவுகளின் தொகுப்பு : 401 -425

பதிவுகளின் தொகுப்பு : 401 -425





401. ரா.பி. சேதுப்பிள்ளை -2
ரா.பி. சேதுப்பிள்ளை
வெங்கடேசன்
ஏப்ரல் 25. ”சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் நினைவு தினம்.

402. ’அவ்வை டி.கே.சண்முகம் -1
நாடகத்தில் நகைச்சுவை
டி.கே.சண்முகம்

403. பதிவுகளின் தொகுப்பு : 376 -400

404. உ.வே.சா. - 6
திருடனைப் பிடித்த விநோதம்
உ.வே.சாமிநாதய்யர்
ஏப்ரல் 28. உ.வே.சா அவர்களின் நினைவு தினம்.

405. பாரதிதாசன் - 4
பாலாமணி பாட்டுக்கள்
பாரதிதாசன்.
ஏப்ரல் 29. பாரதிதாசன் பிறந்த தினம்.

406. கோபுலு - 2
குழந்தையுலகம் -1
கோபுலு
ஏப்ரல் 29.  கோபுலு அவர்களின் நினைவு தினம்.

407. சங்கீத சங்கதிகள் - 74

ஜி.என்.பி.யின் சாரீரமும் சங்கீத பாணியும்
கல்கி
மே 1.  ஜி.என்.பாலசுப்பிரமணியம் அவர்களின் நினைவு தினம்.

408. பாமரருக்கும் படித்தவருக்கும் கணிப்பொறி : நூல்
இராதாகிருஷ்ணன், சுஜாதா
மே 3. சுஜாதாவின் பிறந்த தினம்.

409. தேவன்: துப்பறியும் சாம்பு - 7:
"சித்ரஸேனா நாடக சபை
தேவன்
மே 5. தேவனின் நினைவு தினம்.

410. ரா.கி.ரங்கராஜன் - 6
கன்னத்தில் போட்டுக் கொள்கிறேன்
ரா.கி. ரங்கராஜன்.

411. கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2
அஞ்சலி
கவிமணி
மே 7. ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த தினம்.

412. நாமக்கல் கவிஞர் -1
கோபால கிருஷ்ண கோகலே
நாமக்கல் கவிஞர்
மே 9.   கோபால கிருஷ்ண கோகலேயின் பிறந்த தினம்

413. பாடலும் படமும் - 10
ஸ்ரீ ராமானுஜ விஜயம்
கோபுலு
மே 10, 2016.  ஸ்ரீ ராமானுஜரின் பிறந்த நாள்.

414. ராஜாஜி -4
அநுதாபமும் அன்புமே அத்வைதம்
ராஜாஜி
மே 10, 2016.   ஸ்ரீ ஆதி சங்கரரின் பிறந்த தினம். 

415. பாடலும் படமும் - 11; சங்கீத சங்கதிகள் -74
ஆசாரியர் அவதாரம்
பாபநாசம் சிவன்

416. சங்கீத சங்கதிகள் -75
பாலஸரஸ்வதியும் ஜயம்மாளும்!
கல்கி
மே 13.  பாலசரஸ்வதி அவர்களின் பிறந்த தினம்.

417. திருப்புகழ் - 11
வள்ளி மணவாளப் பெருமாள்
குருஜி ஏ.எஸ்.ராகவன்

418. பி.எஸ்.ராமையா -1
மணிக்கொடியை உயர்த்திய பி.எஸ்.ராமையா
கலைமாமணி விக்கிரமன்
மே 18. பி.எஸ்.ராமையாவின் நினைவு தினம்.

419. பி.எஸ். ராமையா -2
சொந்தக் கதை
பி.எஸ். ராமையா

420. பாடலும், படமும் - 12
முகச்சிங்க முராரி
இன்று நரசிம்ம ஜெயந்தி.

421. முருகமுகம்; கவிதை
முருகமுகம்
இன்று வைகாசி விசாகம்.

422. தமிழ்வாணன் -2
துணிவைத் துணை கொண்ட தமிழ்வாணன்
கலைமாமணி விக்கிரமன்
மே 22. தமிழ்வாணன் அவர்களின் பிறந்த தினம்

423. வி.கனகசபைப் பிள்ளை
"தமிழிலக்கியத் தேனீ " வி.கனகசபைப் பிள்ளை
 முனைவர் பா.இறையரன்
மே 25. தமிழறிஞர் வி.கனகசபைப் பிள்ளை அவர்களின் பிறந்த தினம்.

424. கா. அப்பாதுரையார்
பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார்
பி. தயாளன்
மே 26.  தமிழறிஞர் கா. அப்பாத்துரையாரின் நினைவு தினம்.

425. மகா வைத்தியநாதையர்
மகா வைத்தியநாதையரைப் பற்றி ....
 உ.வே.சாமிநாதய்யர்
மே 26 . மகா வைத்தியநாதையரின் பிறந்த தினம்.



 தொடர்புள்ள பதிவுகள்:


வெள்ளி, 27 மே, 2016

கொத்தமங்கலம் சுப்பு -13

குல  தெய்வத்தின் சிலை எங்கே?
கொத்தமங்கலம் சுப்பு 


மே 27.  ஜவகர்லால் நேருவின் நினைவு தினம்.

28-5-67 - விகடனில் வந்த கவிதை இதோ! [ நன்றி: சுப்பு சீநிவாசன் ]





தொடர்புள்ள பதிவுகள்:

கொத்தமங்கலம் சுப்பு

வியாழன், 26 மே, 2016

மகா வைத்தியநாதையர்

மகா வைத்தியநாதையரைப் பற்றி ....
உ.வே.சாமிநாதய்யர் 

மே 26 . மகா வைத்தியநாதையரின் பிறந்த தினம். அவரைப் பற்றி  உ.வே.சா. நிறைய எழுதியிருக்கிறார். “என் சரித்திரத்தி”லிருந்து ஒரு பகுதி இதோ:
============





மகா வைத்தியநாதையரைப் பார்ப்பதே எனக்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது. அவர் முகத்திலே இருந்த ஒளியும் அமைதியும் அவர் உள்ளத்தின் இயல்பை விளக்கின. அத்தோற்றத்தினால் மட்டும் என் ஆவல் அடங்கவில்லை. அவர் இடையிடையே பேசின மெல்லிய வார்த்தைகளிலே இனிமை இருந்தது. அந்த இனிமையும் என் மனத்தைக் கவர்ந்தது. ஆனால் அவ்வார்த்தைகளாலும் என் ஆவல் அடங்கவில்லை. வைத்தியநாதையராய் இருந்த அவர் எதனால் மகா வைத்தியநாதையர் ஆனாரோ அச்சங்கீதத்தைக் கேட்க வேண்டுமென்ற ஆசை எனக்கு அதிகரித்தது. ‘இவர் வந்திருக்கிற காரியமோ வேறு. இக்கூட்டத்தில் ஒரு சம்பந்தமும் இல்லாமல் நமது ஆவலை  நிறைவேற்றுவதற்காக இவர் பாடுவது சாத்தியமாகுமா? நமக்கு இவ்வளவு ஆசை இருப்பது இவருக்குத் தெரிவதற்குத்தான் சந்தர்ப்பம்  உண்டா?........எப்படியாவது ஒரு பாட்டைக் கேட்டால் போதுமே.....ஒரு பாட்டானால் என்ன? நூறு பாட்டானால் என்ன? அதற்கு இதுவா சமயம்?’ என்று என் மனத்துக்குள்ளே ஆட்சேப சமாதானங்கள் எழுந்தன. இந்த யோசனையிலே சுந்தர சுவாமிகளும் தேசிகரும் என்ன பேசினார்கள் என்பதைக் கூட நான் நன்றாகக் கவனிக்கவில்லை.

திடீரென்று எனக்கு ஆச்சரியம் உண்டாகும்படி சுப்பிரமணிய தேசிகர் பேசத் தொடங்கினார்: “உங்களுடைய சங்கீதத்தைக் கேட்க வேண்டுமென்று இங்கே படிக்கும் மாணாக்கர்கள் சிலர் ஆசைப்படுகிறார்கள். பிள்ளையவர்கள் வாக்கிலிருந்து சில பாடல்களைச் சொன்னால் திருப்தியாக இருக்கும்” என்று அவர் மகா வைத்தியநாதையரை நோக்கிக் கூறிய போது, நான் என் காதுகளையே நம்பவில்லை. ‘நாம் கனவு காண்கிறோமோ? நம்முடைய யோசனையினால் விளைந்த பகற் கனவா இது?’ என்று கூட நினைத்தேன். நல்லவேளை, அது வாஸ்தவமாகவே இருந்தது.

“அதற்கென்ன தடை? காத்திருக்கிறேன்” என்று சொல்லி மகா வைத்தியநாதையர் பாட ஆரம்பித்து விட்டார். தேவகானமென்று சொல்வார்களே அச்சங்கீதம் அப்படித்தான் இருக்குமோவென்று எனக்குத் தோற்றியது. முதலில் தமிழ்ச் சூத சங்கிதையிலிருந்து சில செய்யுட்களைச் சொல்லத் தொடங்கினார். தமிழ்ச் செய்யுளாக இருப்பதனாலே முதலில்  அவை மனத்தைக் கவர்ந்தன. பிள்ளையவர்கள் வாக்கென்ற பெருமையும் அவைகளுக்கு இருந்தது. மகா வைத்தியநாதையருடைய இன்னிசையும் சேர்ந்து அப்பாடல்களுக்கு என்றுமில்லாத அழகைக் கொடுத்தது. அந்த இன்னிசை முதலில் இந்த உலகத்தை மறக்கச் செய்தது. பாவத்தோடு அவர் பாடுகையில் ஒவ்வொரு வார்த்தையும் உள்ளத்துள்ளே படிந்து படிந்து ஒரு பெரிய காட்சியை நிர்மாணம் செய்து வந்தது.

சூதசங்கிதையில் கைலாஸத்தில் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் காட்சியை வருணிக்கும் செய்யுட்கள் அவை. வெறும் பாடல்களை மாத்திரம் படித்தபோதும் எங்களுக்கு உள்ளத்துள்ளே காட்சிகள் எழும். புறத்தே உள்ள பார்வையும் இருக்கும். ஆனால் அப்பாடல்கள் இசையோடு கலந்து வந்தபோதோ எல்லாம் மறந்து போயின. அப்பாட்டு எப்படிச் சுருதியிலே லயித்து நின்றதோ அப்படி எங்கள் மனம் அப்பாட்டின் பாவத்திலே லயித்து நின்றது. ஒரு பாடலைக் கூறி நிறுத்தும் போதுதான் அவர் பாடுகிறார், நாம் கேட்கிறோம் என்ற வேற்றுமை உணர்ச்சி உண்டாயிற்று.

பாடல்களைக் கூறிவிட்டுப் பிறகு பொருளும் சொன்னார். பாடல்  சொல்லும்போதே பொருள் தெரிந்து விட்டது.

பாட ஆரம்பித்துவிட்டால் அதை நிறுத்திவிட மனம் வருமா? கேட்பவர்களுக்குப் போதுமென்ற திருப்திதான் உண்டாகுமா? சூத சங்கிதையிலிருந்து அப்பெரியாருடைய இசை வெள்ளம் வேறு மடைகளிலே திரும்பியது. பிள்ளையவர்கள் வாக்காகவுள்ள வேறு பல பாடல்களை அவர் இசையுடன் சொன்னார்.

பிறகு சுப்பிரமணிய தேசிகர், “உங்கள் தமையனார் வாக்காகிய பெரிய புராணக் கீர்த்தனையிலிருந்து சில கீர்த்தனங்கள் பாட வேண்டும்” என்றார். வைத்திய நாதையரிடத்திலுள்ள ‘சரக்கு’ இன்னதென்று தேசிகருக்கு நன்றாகத் தெரியும். அவர் ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டே வர அந்தச் சங்கீத சிகாமணி தடையின்றிப் பாடி வந்தார்.

அவர் கீர்த்தனங்களைப் பாடும்போது பிடில், மிருதங்கம் முதலிய பக்க வாத்தியங்கள் இல்லை. அக்காரணத்தால் அவர் இசைக்குக் குறைவு இருந்ததாக எனக்குத் தோற்றவில்லை. அவர் கையினால் மெல்லத் தாளம் போட்டுப் பாடியபோது ஒவ்வொருவருடைய இருதயமும் அப் பாட்டோடு ஒன்றிப் பக்கவாத்தியம் வாசித்ததென்றுதான் சொல்ல வேண்டும். இணையற்ற இன்பம்

அதுவரையில் அடைந்திராத இன்பத்தை அன்று அடைந்தேன். ‘இவர்களுடனே போய் இருந்து சங்கீத அப்பியாசம் செய்யலாமா?’ என்ற ஆசைகூட இடையே தோற்றியது. ஒருவாறு மகா வைத்தியநாதையரது கான மழை நின்றது. சுந்தர சுவாமிகள் விடை பெற்றுக் கொண்டனர். அவரோடு மகா வைத்திய  நாதையரும் பிறரும் விடை பெற்று எழுந்தனர். அவர்கள் யாவரும் மடத்தில் அவரவர்களுக்குரிய இடத்தில் விருந்துண்டு பிற்பகலில் திருவையாற்றுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

அன்று பிற்பகலில் சுப்பிரமணிய தேசிகரை நான் பார்த்த போது, “காலையில் மகா வைத்தியநாதையர் பாட்டைக் கேட்டீரா?” என்று அவர் கேட்டார். “இந்த மாதிரி சங்கீதத்தை இதுவரை நான் கேட்டதே இல்லை.அவர்களுடைய சாரீரம் எல்லோருக்கும் அமையாது. வெறும் சாதகத்தால்மட்டும் வந்ததன்று அது” என்றேன்.

“சாதகம் மாந்திரம் போதாதென்பது உண்மைதான். அவர் நல்ல சிவபக்தர். சிவகிருபை அவருக்கு நல்ல சாரீரத்தை அளித்திருக்கிறது. அவர் செய்துவரும் அப்பியாசம் அந்தச் சாரீரத்திற்கு வளப்பத்தைத் தருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அவரது தூய்மையான ஒழுக்கம் அந்தத் திவ்விய சாரீரத்தின் அழகு கெடாமல் பாதுகாக்கிறது” என்று சொல்லி விட்டு, “அவர் தமிழறிவும் உமக்குப் புலப்பட்டிருக்குமே!” என்றார்.

“ஆம், அவர் பாடல் சொல்லும்போதே பொருள் தெளிவாகிறது” என்றேன்.

[ நன்றி: “என் சரித்திரம்” ]

தொடர்புள்ள பதிவுகள்:
உ.வே.சா

கா. அப்பாதுரையார்

பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார்
பி. தயாளன்

மே 26.  தமிழறிஞர் கா. அப்பாத்துரையாரின் நினைவு தினம்.
இதோ, தினமணியில் வந்த ஒரு கட்டுரை:

==============

ஆய்வறிஞர் அப்பாதுரையார் எடுக்க எடுக்கக் குறையாத ஓர் அறிவுச் சுரங்கம்; பன்மொழிப் புலவர்; தென்மொழி தேர்ந்தவர்; யாரும் செய்ய முடியாத சாதனையாகப் பலதுறைகள் பற்றிய நூற்றுக் கணக்கான நூல்களைத் தமிழுக்குத் தந்தவர்; அகராதி தொகுத்தவர்; அக்கலையில் ஆழம் கால் கொண்டவர்; சிறந்த சிந்தனையாளர்; பகைவர் அச்சுறும்படி சொல்லம்புகளை வீசும் சொற்பொழிவாளர்; மொழிபெயர்ப்பாளர்; கனிந்து முதிர்ந்து பழுத்த பேரறிவாளர்” என்று இவ்வாறெல்லாம் பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பனால் போற்றிப் புகழ்ந்திட்ட பூந்தமிழ் அறிஞர் கா.அப்பாதுரையார்.

கா.அப்பாதுரையார், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி என்னும் சிற்றூரில், காசிநாதப்பிள்ளை-முத்துலெட்சுமி அம்மாள் வாழ்விணையருக்கு 1907-ஆம் ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி பிறந்தார். பெற்றோர் சூட்டிய பெயர் “நல்லசிவம்’ என்பதாகும். தொடக்கக் கல்வியை ஆரல்வாய் மொழியிலும், பள்ளிக் கல்வியை நாகர்கோவிலிலும், கல்லூரிக் கல்வியை திருவனந்தபுரத்திலும் பயின்றார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இந்தி மொழியில் “விஷாரத்’ தேர்ச்சியடைந்தார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் தனிவழியில் பயின்று தமிழில் முதுகலைப் பட்டதாரியானார். சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து எல்.டி.பட்டம் பெற்றார்.

திருநெல்வேலி, மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் 1937 முதல் 1939 முடிய இந்தி ஆசிரியராகப் பணிபுரிந்தார். காரைக்குடி, அமராவதி புதூர் குருகுலப் பள்ளியில் அப்பாதுரையார் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய போது, இவரிடம் கல்வி பயின்ற மாணவர் கவிஞர் கண்ணதாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சில காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார். மத்திய அரசின் செய்தித் தொடர்புத் துறையில் 1947 முதல் 1949 வரை பணியாற்றினார். அப்போது, “இந்தியாவின் மொழிச்சிக்கல்’ என்ற ஆங்கில நூலை எழுதியதால் தனது வேலையை இழந்தார்.

சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் அகராதித் தயாரிப்பில் 1959 முதல் 1965 வரை அதன் ஆசிரியராகப் பணி செய்தார். மேலும் தமிழக வரலாற்றுக்குழு உறுப்பினராக 1975 முதல் 1979 வரை இருந்துள்ளார்.

திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லிபரேட்டர், விடுதலை, லோகோபகாரி, தாருல் இஸ்லாம், குமரன், தென்றல் முதலிய இதழ்களில் இவரது எழுத்துப் பணி தொடர்ந்தது.

அப்பாதுரையார் இந்தி மொழி ஆசிரியராகப் பணி புரிந்தவர். ஆனால் தமிழகத்தில் இந்திமொழி கட்டாயப் பாடமாகத் திணிக்கப்பட்டபோது, 1938-39-ஆம் ஆண்டுகளில் நாடெங்கும் நடந்த இந்தி எதிர்ப்புப் போரில் பங்கு கொண்டார்.

குமரிக்கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு, தென்னாட்டுப் போர்க்களங்கள், சரித்திரம் பேசுகிறது, சென்னை நகர வரலாறு, ஐ.நா.வரலாறு, கொங்குத் தமிழக வரலாறு முதலிய வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். திராவிட நாகரிகம், திராவிடப் பண்பு, திராவிடப் பாரம்பரியம், திராவிட மொழி என்பனவற்றுக்கெல்லாம் மிகப் பொருத்தமான விளக்கங்களைத் தம் வரலாற்று நூல்களில் அளித்துள்ளார்.

அப்பாதுரையாரின், தென்னாட்டுப் போர்க்களங்கள் என்ற வரலாற்று நூல், போர்க்களங்களில், பட்டியலன்று, போர்க்காரணங்கள், போர்களின் பின்புலங்கள், போர்ச் செயல்கள், போரின் விளைவுகள், போர்களின் வழியாக புலப்படும் அரசியல் நெறிகள் ஆகியவற்றையெல்லாம் ஆராயும் நூலாக அமைந்துள்ளது என வரலாற்று அறிஞர்கள் அந்நூலைப் போற்றுகின்றனர்.

தென்னாட்டுப் போர்க்களங்கள் என்ற நூல் குறித்து அறிஞர் அண்ணா, “”இந்நூல் என்னை மிகவும் கவர்ந்த நூலாகும். அந்த நூலின் ஒரே ஓர் ஏட்டை எழுத, அவர் எத்தனை ஆயிரம் ஏடுகளைத் தேடிப் பார்த்திருக்க வேண்டும். எத்தனை ஆயிரம் கவிதைகள், இலக்கியங்களைத் திரட்டிப் பார்த்திருக்க வேண்டும் என்பதை எண்ணி வியந்தேன்” என்று வியந்து கூறியுள்ளார்!

கிருஷ்ண தேவராயர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டேவிட் லிவிங்ஸ்டன், அரியநாத முதலியார், கலையுலக மன்னன் ரவிவர்மா, வின்ஸ்டன் சர்ச்சில், அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன், அறிவுலக மேதை பெர்னாட்ஷா, கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி மற்றும் ஆங்கிலப் புலவர் வரலாறு, சங்க காலப் புலவர் வரலாறு, அறிவியலாளர் பெஞ்சமின் ஃபிராங்கிளின் – உள்பட பலரின் வாழ்க்கை வரலாறுகளை அரிய பல நூல்களாகப் படைத்துள்ளார். மேலும் சங்க காலப் புலவர்களில் பிசிராந்தையார், கோவூர்கிழார், ஔவையார், பெருந்தலைச் சாத்தனார் முதலிய நால்வர் பற்றியும் எழுதியுள்ளார் அப்பாதுரையார்.

அலெக்ஸாண்டர், சந்திரகுப்தர், சாணக்கியர் ஆகிய மூவரைப் பற்றி ஏ.எஸ்.பி. ஐயர் எழுதிய நூலை மொழிபெயர்த்துத் தந்துள்ளார். இளைஞர்கள் பயிலும் பாடநூல்களுக்காகவே, சாதனையாளர்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளை எழுதிக் குவித்துள்ளார். திருக்குறளுக்கு விரிவும் விளக்கமுமாக பல்லாயிரம் பக்கங்கள் ஓயாமல் எழுதிக் குவித்தவர். அவரது “திருக்குறள் மணி விளக்க உரை’ என்ற தலைப்பில் அமைந்த நூல், ஆறு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. மேலும், கவியரசு கண்ணதாசன் நடத்திய “தென்றல்’ வார இதழிலும், “அன்னை அருங்குறள்’ என்ற தலைப்பில் புதிய குறள்பா படைத்துள்ளார். திருக்குறள் உரைக்கெனவே “முப்பால் ஒளி’ என்ற இதழை ஆறு ஆண்டுகள் தொடர்ந்து வெளியிட்டார். அவரது திருக்குறள் விளக்க உரையில், உலகின் பல மொழிகளில் உள்ள அறிவார்ந்த அற நூல்களோடு ஒப்பிட்டு, திருக்குறளைக் காணும் காட்சி மிகப் புதியது எனலாம்.

“உலக இலக்கியங்கள்’ என்ற நூலில், பிரெஞ்ச், சீனம், ருசியா, உருது, பாரசீகம், கன்னடம், தெலுங்கு, ஜெர்மனி, வடமொழி, கிரேக்கம் எனப் பத்து மொழிகளின் இலக்கியங்களை ஆராய்ந்து அரிய பல செய்திகளைத் தந்துள்ளார்.

வரலாறு, வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு, இலக்கியத் திறனாய்வு, சிறுகதை, நாடகம், பொது அறிவு நூல், அகராதி, உரைநூல், குழந்தை இலக்கிய நூல் என எத்துறைக்கும் ஏற்றதான நூற்று இருபது அரிய நூல்களைப் படைத்த ஆழ்ந்தகன்ற தமிழறிஞர் அப்பாதுரையார்.

இப் பன்மொழிப் புலவர் 1989-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். எனினும், அவனியை விட்டு என்றென்றும் நீங்காமல் அவரது புகழும், அவரது படைப்புகளும் நின்று விளங்கும்.

[ நன்றி : தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:
கா. அப்பாத்துரை - தமிழ் விக்கிப்பீடியா

கா. அப்பாதுரையார்

புதன், 25 மே, 2016

வி.கனகசபைப் பிள்ளை

"தமிழிலக்கியத் தேனீ " வி.கனகசபைப் பிள்ளை
 முனைவர் பா.இறையரன்

மே 25. தமிழறிஞர் வி.கனகசபைப் பிள்ளை அவர்களின் பிறந்த தினம்.
அவரைப் பற்றித் தினமணியில்  2012-இல் வந்த ஒரு கட்டுரை இதோ !;

====



சங்க காலத்திலிருந்தே இலங்கையில் மிகச் சிறந்த தமிழ்ப் புலவர்கள் வாழ்ந்துள்ளனர். இலங்கையிலிருந்து, வின்சுலோ, பெர்சிவல் ஆகிய இருவரும் தாம் செய்த தமிழ் ஆங்கில அகராதி, கிறிஸ்துவமறை மொழிபெயர்ப்பு ஆகியவற்றைப் பதிப்பிக்க ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரனார், விசுவநாதன் ஆகியோரைச் சென்னைக்கு அழைத்து வந்தனர். வின்சுலோ செய்த "தமிழ்-ஆங்கில அகராதி' அச்சிடும் பணியில் உதவிவந்த விசுவநாதன் மகன்தான் கனகசபை. இவர் 25.5.1855-இல் பிறந்தவர்.

கனகசபை, சென்னை அரசினர் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றபின், அஞ்சல் துறையில் அலுவலக ஊழியராகப் பணியில் சேர்ந்தார். விடுப்பில் சென்று ஓராண்டில் சட்டவியலில் இளநிலைப் பட்டம் (பி.எல்.) பெற்றார். பின்னர் மதுரையைச் சேர்ந்த மருத்துவர் பொன்னையாப் பிள்ளையின் மகள் செல்லம்மாளை மணந்தார். அதனால், மதுரையில் வழக்குரைஞராகப் பணியாற்றத் தொடங்கினார். முதல் வழக்கிலேயே வெற்றி பெற்றார். ஆனால், இவர் வெளியில் செல்லும்போது வழக்கில் தோற்றவர் இவரைப் பற்றி அவதூறாகப் பேசியதால், மனம் நொந்த கனகசபை வழக்குரைஞர் தொழிலைக் கைவிட்டு, சென்னையில் அஞ்சல்துறை மேற்பார்வையாளர் பணியில் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று சென்னை மாநில அஞ்சலகங்களில் உயர்நிலைக் கண்காணிப்பாளரானார்.

கனகசபையின் தந்தையும் தாயும் அடுத்தடுத்த ஆண்டில் (1884, 1885) இறந்தனர். தந்தையையும் தாயையும் இழந்த துன்பம் போதாதென்று கனகசபையின் குழந்தைகள் இருவரும் அடுத்தடுத்து இறந்தனர். வாழ்வில் ஏற்பட்ட துன்பம் கண்டு துவண்டுபோன தம் உள்ளத்தைத் தமிழ்ப் பற்றால் தேற்றி, அலுவலகப் பணிபோக மீதி நேரமெல்லாம் தமிழ் இலக்கியங்களில் மூழ்கினார்.

அக்காலச் சென்னை மாநிலத்தின் அனைத்து ஊர்களுக்கும் அஞ்சலகங்களை மேற்பார்வையிடும் பொருட்டுச் சென்றுவந்தார். அவ்வாறு செல்லும் ஊர்களில் கிடைக்கும் ஏட்டுச்சுவடிகளையும் கல்வெட்டுகளையும் படியெடுத்தார்.

தமிழ் இலக்கண-இலக்கிய ஓலைச்சுவடிகளைத் தொகுக்கவும், படியெடுக்கவும், குறிப்புகள் எழுதவும் அப்பாவுப்பிள்ளை என்பவர் 20 ஆண்டுகள் கனகசபையின் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார். 20 ஆண்டு கடும் உழைப்பில் தொகுக்கப்பெற்ற அவ்வளவு ஏடுகளையும் உ.வே.சாமிநாதையருக்கு அவ்வப்போது வழங்கினார் கனகசபை.

பனை ஓலைச் சுவடிகளையும் கல்வெட்டுகளையும் தொகுத்த கனகசபை, இலக்கியங்களை வரலாற்றுச் செய்திகளைத் தரும் ஆவணங்களாகக் கருதி ஆய்வு செய்யத் தொடங்கினார். கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் உள்ள வரலாற்றுக் குறிப்புகளைத் திரட்டி, சங்ககாலத் தமிழர்களின் வாழ்வியல் சிறப்பை "மெட்ராஸ் ரெவியூ' இதழில் ஆங்கிலத்தில் எழுதிவந்தார். இக்கட்டுரைகளை "ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்கள்' ( Tamils Eighteen Hundred Years ago ) என்ற ஆங்கில நூலாக வெளியிட்டு, அந்நூலை சுப்பிரமணிய ஐயருக்குக் காணிக்கை ஆக்கினார்.

சீன நாட்டினருக்கும் தமிழ் நாட்டினருக்கும் இருக்கக்கூடிய பண்பாட்டு, நாகரிக இன ஒற்றுமைகளைத் தம் நூலில் கனகசபை நிறுவியுள்ளார். சிலப்பதிகாரத்திலும் அதற்கு முந்தைய சங்க இலக்கியங்களிலும் காணப்படும் வரலாற்றுச் செய்திகளைக் கொண்டு தமிழக நிலப்பிரிவு நில அமைப்பு, அயல் நாட்டு நிலப்பிரிவு நில அமைப்பு, அயல்நாட்டு உள்நாட்டு வணிகம், பழங்குடியினர் வாழ்வு, மூவேந்தர் ஆட்சி, இலக்கியம், சமயம் ஆகியன பற்றி எழுதியுள்ளார். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரிகளின் செம்மாந்த வாழ்வியலை கனசபையின் இந்நூல் வரலாற்று அடிப்படையில் ஆங்கிலத்தில் உலகுக்கு உணர்த்தியது.

வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் தோன்றிய களவழி நாற்பது, கலிங்கத்துப்பரணி, விக்கிரமசோழன் உலா ஆகிய இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இவை, தமிழரின் தொன்மை பற்றிய ஆங்கில இதழில் ( The Tamilian Antiquary ) தமிழ் வரலாற்று இலக்கியங்கள் ( Tamil Historical Texts ) என்ற தலைப்பில் வெளிவந்தன. சீன நாட்டுத் தொடர்பை நிறுவிய கனகசபை, தமிழர்கள் வங்காளம், பர்மா முதலிய நாடுகளை வென்ற வரலாற்றுப் பெருமையையும் ( The conquest of Bengal and Burma by the Tamils: Rajaraja chola ) ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழக இளங்கலை முதுகலைப் பட்டங்களுக்கான தேர்வுக் குழுக்களில் கனகசபை தேர்வாளராக இருந்துள்ளார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுவிழாவில் 1905-இல் தலைமை தாங்கித் தமிழரின் வரலாற்றுப் பெருமை பற்றிச் சொற்பொழிவாற்றினார். எட்வர்ட் இளவரசர் சென்னை வந்தபோது ஆங்கிலத்தில் வரவேற்புரை நல்கினார்.

வலங்கைமான் கணியர் (ஜோதிடர்) இருவரின் வழி காட்டுதலில் "ஓகம்' (யோகப் பயிற்சி) கற்றிருந்த கனகசபை, உடற்பயிற்சியும் செய்து நல்ல உடற்கட்டுடன் வாழ்ந்தவர். அஞ்சலக மேற்பார்வைப் பணி தொடர்பாகக் காஞ்சிபுரம் சென்றிருந்தபோது உடல் நலங்குன்றி 21.2.1906-இல் காலமானார்.

எங்கெல்லாம் ஓலைச் சுவடிகள் உள்ளதோ அங்கெல்லாம் சென்று தேனீபோல் உழைத்து, இலக்கண-இலக்கியம் என்னும் தேனை சேகரித்துத் தந்த கனகசபைக்கு தமிழ்கூறுநல்லுலகம் மிகுந்த கடமைபட்டுள்ளது.

[ நன்றி: தினமணி ]

தொடர்புள்ள பதிவு:
வி. கனகசபை - தமிழ் விக்கிப்பீடியா

ஞாயிறு, 22 மே, 2016

தமிழ்வாணன் -2

துணிவைத் துணை கொண்ட தமிழ்வாணன் 

கலைமாமணி விக்கிரமன்


மே 22. தமிழ்வாணன் அவர்களின் பிறந்த தினம்.  அவரைப் பற்றி விக்கிரமன் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்று இதோ! 
==========


நாற்பது, ஐம்பது ஏன் எழுபதுகளில்கூட பிள்ளைப் பிராயத்தினரை ஆவலுடன் படிக்கத் தூண்டிய பல்வேறு சிறுவர் இலக்கியம் படைத்தவர்களுள் தமிழ்வாணனை மறக்க முடியாது. நூறு, ஆயிரம் பிரதிகள் விற்பனையாவதற்குப் பத்திரிகைகள் பெருமுயற்சி எடுத்துக்கொண்டபோது ஆயிரம், பதினாயிரம் என்று பரபரப்புடன் படிக்கத் தூண்டியவர் தமிழ்வாணன்.
தேவகோட்டையும், காரைக்குடியும், செட்டிநாட்டுப் பல ஊர்களும் தமிழ்நாட்டுக்குத் தந்த பல செல்வங்களுள் படைப்பிலக்கியச் செல்வங்கள் மறக்க முடியாதவை. தேவகோட்டை தந்த எழுத்துச் செல்வங்களுள் மிக முக்கியமானவர் தமிழ்வாணன்.

1926-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி, லெ.லெட்சுமணன் செட்டியார் - பிச்சையம்மை ஆச்சி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் சூட்டிய பெயர் லெட்சுமணன். "தமிழ்வாணன்' என்ற பெயரைச் சூட்டியவர் தமிழ்த்தென்றல் திரு.வி.க. என்று கூறுவர்.

எழுத்தால் வாசகர்களைக் கவர்ந்த "கல்கி'க்குப் பிறகு, செய்தி இதழால் புதிய வாசகர்களைக் கண்டெடுத்த சி.பா.ஆதித்தனாருக்குப் பிறகு, பேச்சாற்றலால் அறிஞர் அண்ணா ஆட்சியைப் பிடித்ததுபோன்று இளைஞர்களைக் கவர்ந்தவர் தமிழ்வாணன்.

யுத்த காலத்திலும் சரி, அதற்குப் பிறகும் சரி  காலணா, அரையணா, ஓரணா என்ற விலையில் தம்பி - தங்கைகளுக்காக வார, மாத இதழ்கள் வெளிவரத்தொடங்கின. அதன் ஆசிரியர்கள், "அண்ணன்', "மாமா' என்ற அடைமொழியுடன் வளரும் குருத்துகளிடையே படிக்கும் ஆவலைத் தூண்டினர்; வளர்த்தனர்.


"துணிவே துணை' என்ற கோஷத்தை முதன் முறையாக தாரக மந்திரமாக ஒலிக்க, தமிழ்வாணன் பத்திரிகையாளராகும் முயற்சியில் ஈடுபட்டார். திருச்சி "கிராம ஊழியன்' பத்திரிகையில் சேர்ந்தார். வல்லிக்கண்ணன் அந்தப் பத்திரிகையின் முதல் ஆசிரியர். தமிழ்வாணன் உதவி ஆசிரியர். முப்பது ரூபாய் சம்பளம். அங்குதான் பல எழுத்தாளர்கள் பழக்கமானார்கள். பிரபல எழுத்தாளர் நா.பிச்சமூர்த்தியைச் சந்தித்தார். அவருடைய எழுத்து நடை தமிழ்வாணனைக் கவர்ந்தது. கிராம ஊழியன் அதிபர் கிருஷ்ணசாமி செட்டியாரிடம் பிச்சமூர்த்தி தமிழ்வாணனை அறிமுகப்படுத்தினார்.
"தம்பி! எப்போதும் உன் எழுத்து எளிமையாக இருக்க வேண்டும். பின்னலான வாக்கியங்களை அறவே விட்டுவிடு, நீ ஒரு நாள் பிரபல எழுத்தாளராகி விடுவாய்'' என்று கூறினார்.

கிராம ஊழியன் ஆசிரியராய் சில மாதங்களில் பதவி உயர்வு பெற்றார். சென்னை வந்தார். எழுத்தாளர்களின் வேடந்தாங்கலாகவும், நல்ல நூல்கள் வெளியிடுவதற்கு வழிகாட்டியாக இருந்தவருமான சக்தி வை.கோவிந்தன் "சக்தி' என்ற மாத இதழை வெளியிட்டு வந்தார். அவருக்குப் புதிய புதிய வெளியீடுகளை வெளியிடுவதில் கொள்ளை ஆசை. அவர், "அணில்' என்ற பெயரில் குழந்தைகளுக்காகப் புதிய வார இதழ் தொடங்கினார். அதற்குத் தமிழ்வாணன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.  என்ன துணிவு! தன் சொந்த வாழ்க்கைப் படிப்பினையால் உழைப்பே துணை என்ற மந்திரச் சொல்லை அறிமுகப்படுத்தினார். தன் அறிவாற்றலால் "அணில்' பரபரப்புடன் விற்குமாறு செய்தார். "அணில் அண்ணன்' அப்போதுதான் தோன்றினான்.

வானதி திருநாவுக்கரசு, தமிழ்வாணனின் உயிர் நண்பர் - பள்ளித் தோழர். இருவரும் கூட்டாகச் சேர்ந்து "ஜில்ஜில்' பதிப்பகம் என்ற பெயரில் குழந்தைகளுக்காக நூல்கள் வெளியீட்டகம் ஒன்றைத் தொடங்கினர். அந்தப் பதிப்பகத்தின் முதல் வெளியீடு "சிரிக்காதே!'. அடுத்து ஜவாஹர்லால் நேருவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். தமிழ்வாணனால் எழுதப்பட்டு, நான்கணா விலையில் வெளியிடப்பட்டது. வெற்றிகரமாக விற்பனையானது. தொடர்ந்து "அல்வாத் துண்டு', "சுட்டுத் தள்ளு', "பயமா இருக்கே' என்ற பல தலைப்புகளில் நூல்கள் வெளிவந்தன.

தமிழ்வாணன் நூல்களின் அமோக விற்பனையைப் பார்த்து - பல பதிப்புகள் அச்சிடப்படுவதைக் கண்ட குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை, தமிழ்வாணனைச் சந்தித்தார். தமிழ்வாணனுடைய பேச்சு, உற்சாகம், திட்டங்கள், சுறுசுறுப்பு எல்லாம் எஸ்.ஏ.பி.க்கு மிகவும் பிடித்திருந்தது.
குமுதம் நிறுவனத்திலிருந்து "கல்கண்டு' என்ற புதிய வார இதழ் தொடங்க எஸ்.ஏ.பி. முடிவு செய்தார். தமிழ்வாணனுடைய முழுப் பொறுப்பில் கல்கண்டு வெளிவரத் தொடங்கியது. முயற்சி, ஊக்கம், உழைப்பு எல்லாமே தமிழ்வாணன் பிரபலமாவதற்குக் காரணமாயின. கல்கண்டால் தமிழ்வாணன் புகழ், திறமை பிரபலமானதா அல்லது தமிழ்வாணனால் கல்கண்டு வார இதழைப் பல்லாயிரம் வாசகர்கள் படித்து அவர் ஆற்றலைப் புகழ்ந்தார்களா? என்பதை எளிதில் தீர்மானிக்க முடியாது.

கேள்வி-பதில் பகுதி அவருடைய ஆற்றலுக்குச் சாட்சியாக விளங்கியது. கேள்வி-பதில் பகுதியில் தான் ஒரு சகலகலா வல்லவர் என்பதை நிலைநாட்டினார். சிரிக்க - சிந்திக்க - செயலாற்ற தமிழ்வாணன் பதில்களைப் படித்தார்கள். தலைசிறந்த அரசியல் கேள்வி-பதில்களில் நடுநிலையான பதில்கள் இருக்கும்.

"மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜக்ட்ஸ்' என்று பிரபல ஆன்மிகச் சொற்பொழிவாளர் மேதை கிரிதாரி பிரசாத் புகழ்ந்து கூறியதோடன்றி, ""என்னைப் பற்றித் தமிழகம் அன்று அறியவில்லை. அவர்தான் அறிமுகம் செய்தார்'' என்று கூறியதைவிட, தமிழ்வாணன் எழுத்து வலிமைக்கு வேறு சான்று வேண்டுமா?

தமிழ்வாணன் இருக்குமிடத்தில் கலகலப்புக்குக் குறைவிருக்காது. தமிழ்வாணன் பேச்சைக் கேட்கவே கூட்டம் கூடும். அவர் பேசிய பிறகு, சபையோர் கலகலவென்று சிரித்துக் களைத்த பிறகு யார் பேசினாலும் எடுபடாது. தவத்திரு குன்றக்குடி அடிகளார் பேச்சைக் கேட்பதற்காகவே ஏராளமானவர்கள் கூடுவார்கள். ஆனால், பட்டுக்கோட்டையில் நடைபெற்ற விழா ஒன்றில் சொற்பொழிவாற்றிவிட்டு, வேறு அவசரப் பணி நிமித்தமாகச் செல்ல வேண்டியவர், தமிழ்வாணன் பேசத் தொடங்கியவுடன் அவர் பேச்சை ரசிப்பதற்காக அடிகளார் புறப்படாமல் இருந்துவிட்டார். ""குற்றாலத்து அருவி போன்ற பேச்சு! அற்புதமான எடுத்துக்காட்டுகள்! நகைச்சுவை! ஒரு மணி நேரத்துக்கு மேலாகப் பேசினார். பொதுமக்களிடையே குறிப்பாக இளைஞர் சமூகத்தினரிடையே நல்ல வரவேற்பு. தமிழ்வாணனுடைய அற்புதமான பேச்சுக்குப் பிறகு நாம் பேச விரும்பவில்லை. சுருக்கமாகக் கூறிப் பேச்சை முடித்துக் கொண்டேன்'' என்று அடிகளார் கூறியதில் மிகை இல்லை.

குழந்தைகள் பத்திரிகை, மாணவர்களுக்குப் பத்திரிகை, இளைஞர்களுக்குத் தனி இதழ் என்று கூறினால் "நமக்குப் பயன்படாது' என்று பலர் நினைக்கலாம். ஆனால், தமிழ்வாணன் எழுத்தைச் சிறுவர் முதல் முதியோர் வரை விரும்பிப் படிப்பார்கள்.

வள்ளலாரிடம் மிகுந்த பக்தி கொண்ட தமிழ்வாணன், அருள்செல்வர் நா.மகாலிங்கத்தின் அன்புக்குப் பாத்திரமானவர். கைரேகை பார்ப்பதிலும் திறமை மிகுந்தவர் தமிழ்வாணன். ""பல ஆண்டுகளுக்கு முன்பு எனது கைரேகைப் பார்த்துக் கூறியது அப்படியே பலித்தது'' என்று நா.மகாலிங்கம் புகழ்ந்து குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்வாணன் வித்தியாசமான எழுத்தாளர். எழுத்தால் வாசகர்களைக் கவர்ந்தார் என்றால், எழுத்தில் ஆழம் இருக்கும். தகவல் இருக்கும்.  மருத்துவம் முதல் அரசியல் வரை வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு "நறுக் நறுக்'கென்று விடை கிடைக்கும்.

தொப்பி, கறுப்புக் கண்ணாடி என்றெல்லாம் நூதன முறையில் வாசகர்கள் கவனத்தைத் துணிவுடன் ஈர்த்ததால் அவருக்குக் கர்வி என்ற பெயரும் உண்டு. அவர் எதிர்ப்பிலேயே வளர்ந்தவர்.

கோணி மூட்டைகளில் வரும் வாசகர் கேள்விகளுக்கு மளமளவென்று பதில் எழுதுவது சாதாரணச் செயலன்று. வேகமாக எழுதுவார்; ஒரே இரவில் முழு நாவலை எழுதும் ஆற்றல் படைத்தவர். கல்கண்டு வாரப் பதிப்பில் பல ஆண்டுகளுக்கும் மேல் ஆசிரியராக இருந்த, அரசியல் தலைவர் முதல், சாதாரண வாசகர் வரை அனைவரது அன்பையும் பெற்ற தமிழ்வாணன், 1971-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி மாரடைப்பால், தமிழ் வாசகர் உலகை விட்டு மறைந்தார்.

அவரை என்றும் நினைக்கும் வகையில், அவர் ஆசிரியராக இருந்த "கல்கண்டை' அவரது புதல்வர்களுள் ஒருவரான லேனா தமிழ்வாணனும், அவர் தொடங்கிய மணிமேகலைப் பிரசுரத்தை லேனாவின் வழிகாட்டுதலுடன்  ரவி தமிழ்வாணனும் கட்டிக்காத்து வளர்த்து வருகிறார்கள். 

[ நன்றி: தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:

தமிழ்வாணன்

சனி, 21 மே, 2016

முருகமுகம்; கவிதை

முருகமுகம்

இன்று வைகாசி விசாகம்.


கோபுர தரிசனம் 2003 தீபாவளி மலரில் வந்த கவிதை ஒன்று இதோ!




தொடர்புள்ள பதிவுகள்:

வெள்ளி, 20 மே, 2016

பாடலும், படமும் - 12

முகச்சிங்க முராரி 



இன்று நரசிம்ம ஜெயந்தி.



மேலே அமரர் எஸ்.ராஜம் அவர்களின் அருமையான ஓவியத்தை பார்க்கலாம்.

இதற்குப் பொருத்தமாய்ப் பல ஆழ்வார்களின் பாசுரங்களைக் குறிப்பிடலாம்.
சற்று வித்தியாசமாய், வண்ணம் என்ற மிகக் கடினமான தமிழ்ப் பாடல்வகையில் நரசிம்மரைக் குறிக்கும் ஒரு பாடல் பகுதியை இங்கிடுகிறேன்.

பதினைந்துக்கும் மேற்பட்ட திருப்புகழ்களில் நரசிம்ம அவதாரத்தைக் குறிப்பிட்டிருக்கிறார் அருணகிரிநாதர்.

இதோ ஒரு பகுதி:

உரியதவ நெறியில்நம நாராய ணாயவென
     ஒருமதலை மொழியளவி லோராத கோபமுட
          னுனதிறைவ னெதனிலுள னோதாய டாவெனுமு ...... னுறுதூணில்

உரமுடைய அரிவடிவ தாய்மோதி வீழவிரல்
     உகிர்புதைய இரணியனை மார்பீறி வாகைபுனை
          உவணபதி நெடியவனும்



இந்தப் பாடலின் பொருளை அறிந்திடவும், இந்தத் திருப்புகழை குருஜி ராகவன் பாடுவதைக் கேட்கவும்
http://www.kaumaram.com/thiru/nnt0870_u.html  - க்குச் செல்லவும்.

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்


S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam


வியாழன், 19 மே, 2016

பி.எஸ். ராமையா -2

சொந்தக் கதை
பி.எஸ். ராமையா



 கட்டுரைக்கு ஓர் அறிமுகம், பின்புலம்:
'மணிக்கொடி’  பத்திரிகை 33-இல் தொடங்கியது.






38-இல் அதன் ஆசிரியராய் இருந்த ராமையா  அப் பணியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்குப் பின் சில மணிக்கொடி இதழ்களே வந்தன; பத்திரிகையே நின்றுவிட்டது. 1950-இல் கணேசன் என்ற இளைஞர் ‘மணிக்கொடி’யை மீண்டும் தொடங்கினார். ராமையா மீண்டும் பொறுப்பேற்றார். 

பிறகு நாலைந்து இதழ்களே வந்தன. கணேசனுக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டதால், பத்திரிகையை நிறுத்தவேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லி  ராமையா விலகிவிட்டார்.  ( ’முதல் மணிக்கொடி’ யைப் பற்றிய  தகவல்களுக்கு ‘மணிக்கொடிக் காலம்’ என்ற நூலைப் படிக்கவும்.) 

இரண்டாவது தோற்றம் பெற்ற மணிக்கொடியின் முதல்  மூன்று இதழ்களைப் பற்றிச் சுவையாக  இங்கே எழுதுகிறார் ராமையா.( இது மணிக்கொடியில் அவர் எழுதிய கடைசிக் கட்டுரையோ? )
===========

'மணிக்கொடி வெளிவரப் போகிறதென்று அறிந்தவுடன் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே யில்லை. ஆனால் அந்த மகிழ்ச்சி யெல்லாம் பிரதி மாதமும் அது என்று வெளிவரும் என்று எதிர்பார்த்து ஏமாறுவதிலேயே தீர்ந்து விடுகிறது' என்று குறை கூறிப் பல அன்பர்கள் கடிதங்கள் எழுதினார்கள். சொந்தமாக அச்சகமும் இதர வசதிகளும் அமைத்துக் கொள்ளாமலே பத்திரிகையைத் தொடங்கி விட்டதால் அவர்கள் அப்படிக் குறை கூற இடம் ஏற்பட்டது.

'பிரதி மாதமும் முதல் தேதியிலேயே பத்திரிகையைக் கொண்டு வர முயற்சி செய்யக் கூடாதா?" என்று ஒரு ஏஜண்டு நண்பர் வற்புறுத்திக் கடிதம் எழுதினார்.

வேறு வகைகளில் முயன்று, சாத்தியமாகாது என்று தோன்றியதால், ஒரு இதழையே இடைமறித்து, ஒவ்வொரு மாதமும் முதல் தேதியிலேயே பத்திரிகை வெளிவர ஏற்பாடு செய்வதென்று முடிவு செய்தோம். ஆகையால் ஏப்ரல் 1950 என்று முகவரி போட்டுக் கொண்டு வர வேண்டிய இதழ் வரவில்லை. இந்த இதழின் விலாசம் மே, 1950. ஆனாலும் முதல் கொடியில் நான்காவது மணிதான். இனி பிரதி மாதமும் இதழ்கள் முதல் தேதியன்றே வெளி வந்து விடும். இடையில் ஏற்பட்ட ஏமாற்றத்தை அன்பர்கள் பாராட்ட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

'மணிக்கொடி இலக்கியப் பத்திரிகை. தமிழில் அசலாக எழுதப்படும் கதை இலக்கிய வளர்ச்சிக்கென்றே தோன்றியது. வசன நடையிலேயே கவிதா வேகமும் மேதா விலாசமும் காட்டி எழுதும் ஆசிரியர்களுக்கும் வாசகர்களுக்குமிடையே ஒட்டிய உறவைத் தோற்றுவிப்பது அதன் லட்சியங்களில் ஒன்று.

'மணிக்கொடி'யின் புதிய தோற்றத்தில் சென்ற மூன்று இதழ்களிலேயே இந்த வகையில் அது நல்ல சாதனை கண்டிருக்கிறது.

"ஸ்ரீ தி. ஜானகிராமனின் கதை ஒவ்வொன்றும் வியப்பை யூட்டும் படைப்புகள். அவற்றிலே உள்ளடங்கியிருந்தே படிப்பவர் நெஞ்சையள்ளும் அழகும், ஹாஸ்யமும் அதிசயமானவை. முதல் சில வரிகளுக்குள்ளேயே அவருடைய கதாபாத்திரங்கள் உருவம் பெற்றுக் கண்முன் எழுந்துவிடுகின்றன. அவற்றின் வளர்ச்சியிலே அவர் காட்டும் நகாஸ் வேலைகள் படிப்பவரை அபூர்வமான அனுபவங்களுக்கு உள்ளாக்குகின்றன, என்றும், "ஸ்ரீ எல்லார்வி நம்முடைய கிராமங்களில் சகஜமாக வழங்கும் சொற்களைச் சுலபமாகக் கையாளுகிறார். அவருடைய கதைகளிலும், பாத்திரங்களிலும் காணும் அழகுகளுக்கு அவருடைய நடை ஒரு தனிச் சோபையளிக்கிறது, ' என்றும் ஒரு நண்பர் என்னிடம் நேரில் சொல்ல வந்திருந்தார்.

மூன்றாவது இதழில் வெளியான கதை ஒவ்வொன்றும் ஒரு தனி மணிக்கதை' என்று பலர் கடிதம் எழுதியிருக்கிறார்கள். ஒன்றிருவர் ஒவ்வொரு கதையையும் அலசி ஆராய்ந்து விமரிசனமே எழுதியிருக்கிறார்கள்.
அந்த இதழில் வந்த 'மாப்பிள்ளை என்ற கதையைப் பற்றிச் சொல்லாத கடிதமே இல்லை. அதை யெழுதிய 'ரஜனி'யின் உண்மைப் பெயர் என்ன என்பதையறிய ஒருவர் தீவிர ஆவல் கொண்டு கடிதம் எழுதியிருக்கிறார்.

ஸ்ரீ பி. வி. ராமகிருஷ்ணன் எழுதியுள்ள "அவள் வாழ்க்கை' என்ற கதையை அபாரமாகப் புகழும் ஒரு அன்பர், "மகரம் எழுதியுள்ள தரை மீன் எங்கள் காரியாலயத்திலும் ஒன்று இருக்கிறது,' என்று எழுதியிருக்கிறார்.
வாசகர்களிடம் தோன்றியுள்ள இந்த உற்சாகம் தமிழில் உயர்தர இலக்கியப் படைப்புகள் பெருக வைக்கும் தூண்டு கோலாக வளர வேண்டும் என்பதே என் ஆசை.

'மணிக்கொடி"யில் கதைகளுடன் சில கட்டுரைகளுக்கும் இட மளிக்கலாம் என்ற கருத்தைப் போன இதழில் வெளியிட்டிருந்தேன். அதற்குப் பலமான ஆட்சேபணைக் கடிதங்கள் வந்துள்ளன. ஒரு இலங்கை யன்பர், ''எக்காரணத்தைக் கொண்டும், எல்லாம் கதைகள் என்ற தனிச் சிறப்பை மணிக்கொடி இழந்து விடக் கூடாது' என்கிறார். மதுரையிலிருந்து ஸ்ரீ துரைசாமி நாடார் என்ற அன்பரும் அதே கருத்தைத்தான் எழுதியிருக்கிறார். அவ்விருவரும், அதைப் பற்றி எழுதியுள்ள மற்றவர்களும், "இப்போது ஒவ்வொரு இதழிலும் வரும் ஸ்ரீ. கு. ஸ்ரீநிவாஸனின் கட்டுரை யொன்றே போதும்,' என்று சொல்லுகிறார்கள். எனவே 'மணிக்கொடி"யை எல்லாம் கதைப் பத்திரிகையாகவே வைத்து விடுவதென்று முடிவு செய்து விட்டோம்.

இந்த இதழில் உள்ள சில கதைகளில் தற்செயலாக ஒரு விசித்திரமான கருத்து ஒற்றுமை அமைந்து விட்டது. "மரணபயம்", 'மனக்குரங்கு', 'நினைப்பதும் நடப்பதும்', 'வெறிஆகிய இந்த நான்கு கதைகளிலும் மரணம் என்ற கருத்து, அதிலிருந்து எழும் பயம் மனித நெஞ்சை எப்படியெல்லாம் ஆட்டி வைத்து, எந்த எல்லை வரை இழுத்துச் சென்று விடுகிறது என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையும் ஒரு தனி அழகு உருவமாக அமைந்திருக்கிறது.

"மரண பயத்தில் சாவின் பிடியிலிருந்து தப்பி வந்தவரின் மனைவி, 'இன்னொரு உயிரை எமனிடம் காட்டிக் கொடுத்துத் தன் கணவன் உயிரை மீட்டுக் கொண்டாள் என்ற கருத்து ஒரு அதிசயமான அழகு.

மீ. ரா. என்ற இளைஞர் - இதுதான் அவருடைய முதல் கதை என்று நினைக்கிறேன் - 'மனக்குரங்கில் அதிசயிக்கத்தக்க லாகவத்துடன் 'மரண பயத்தைக் கதைத்திருக்கிறார் சில வினாடிகளுக்குள் பல வருஷ வேதனையை அனுபவித்து விடும் அவருடைய மனத் தத்துவப் படைப்பு அபாரமாக இருக்கிறது.

 'நினைப்பதும் நடப்பதும்" என்ற  கதையின் ஆசிரியை, நேரிடையாகத் தொடாமல் மறை முகமாக 'மரணம்' என்ற கருத்து எப்படி ஒருத்தியின் மனோ பலத்தையே குடித்து, அவளையும் பலி கொண்டு விட்டது என்பதை அழகாக விவரித்திருக்கிறார்.

'வெறியில் ரஜனி தேர்ந்த கதாசிரியரின் திறமையைக் காட்டி விட்டார். சாவு தன்னைத் தொட வருகிறது என்ற பயத்தில் பிறந்ததா, அல்லது தன்னை மற்றவர்கள் அலட்சியம் செய்து விட்டார்கள் என்ற ஆத்திரத்திலும் கசப்பிலும் பிறந்ததா மீனாவின் வெறி என்பதைப் படிப்பவர்களே யூகித்துக் கொள்ளும்படி விட்டு விட்டார். மீனாவின் அந்த மனோ நிலையைப் புலி உதாரணத்தில் தொட்டுக் காட்டுவது ஒரு அபூர்வமான அழகுப் படைப்பு.

மற்றொரு மொழி பெயர்ப்புக் கதை முதலில் ஸிந்தி மொழியில் எழுதப்பட்டது. அதன் இங்கிலீஷ் மொழி பெயர்ப்பி லிருந்து தமிழாக்கப்பட்டிருக்கிறது. அப்துல் ரஹ்மான் பாயி என்ற பாத்திரம் அபூர்வமான ஒரு சிருஷ்டி.

 ''ஸ்ரீ லா.ச. ராமாமிருதம் அபூர்வமாகத்தான் எழுதுகிறார். ஆனால் ரொம்ப அருமையாக எழுதுகிறார்' என்று என்னிடம் ஒரு பத்திரிகைப் பிரசுரகர்த்தர் அடிக்கடி சொல்லுவதுண்டு. 'கண்ணிலே விழுந்த தூசியை நீ இங்கே நெஞ்சகத்துக்குள் ஊதி விட்டாய்!: என்று கதாநாயகன் சொல்லும் அழகு அருமையானதுதானே அவன் அந்தத் தூசியை வெளியேற்றி மீளும் சம்பவ அமைப்பு அதைவிட அருமையாக இருக்கிறது.

'இதுதான் வாழ்க்கை' என்ற கதை ஒரு சொல் சித்திரம். கணவன் மனைவி இருவர் உள்ளங்களும் பரஸ்பரம் அன்பில் பிணைபட்டு, சர்வ தியாகங்களுக்கும் சித்தமாக இருக்கும் நிலை யிலும், வாழ்க்கை முறையை அறியாமல், அந்த அன்பையெல்லாம் வீணாக்கிப் பாழ்படுத்தும் பரிதாபத்தை நாம் தினசரி எத்தனை குடும்பங்களில் பார்க்கிறோம்!

ஸ்ரீ நாகராஜன் தமது 'மனமும் மருந்தும்' என்ற கதைக்கு, சமீபத்தில் டாக்டர் ராஜன் பேசியதாகப் பத்திரிகையில் வந்த ஒரு வரிதான் தூண்டு கோல் என்கிறார். வியாதியஸ்தரின் மனோ நிலையை ஆராய்ந்து, அங்குள்ள வியாதிக்கு மாற்றுக் கண்டால் உடல் வியாதியைச் சுலபமாகக் குணப்படுத்தி விடலாம் என்ற கருத்தை வைத்துத் திறமையுடன் ஒரு துப்பறியும் கதையையே படைத்து விட்டார்.

மூன்றாவது இதழில் வெளியான படங்களைப் பற்றிப் பலர் பாராட்டியிருக்கிறார்கள். 'சாகரின் படங்களே கதைகளுக்கு ஒரு தனியழகைக் கொடுக்கின்றன என்று ஒருவர் சொன்னார். அவருடைய கண் திருஷ்டி தானோ என்னவோ இந்த இதழில் வரும் கதைகளுக்குச் சரியான படங்கள் எழுதி வாங்கிச் சேர்க்கக் கூட அவகாசமில்லாமல் போய் விட்டது!

பிரதி மாதமும் இதழ் முதல் தேதியில் வர ஏற்பாடு செய்து விட்டதே பெரிய சாதனை என்று எனக்குப் படுகிறது. மற்ற அம்சங்களையும் அதே மாதிரிச் சாதித்து விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

– 1950

[ நன்றி: மணிக்கொடி இதழ்தொகுப்பு

பி.கு

“ இரண்டாவது முறை தொடங்கியபோது ‘மணிக்கொடி’க்கு முந்திய கௌரவம், மதிப்பு, கனம் எதுவுமே கிட்டவில்லை. அதற்கு வேண்டிய சூழ்நிலையே ஏற்படவில்லை. ஆனால் புது மணிக்கொடியின் வழியாக எனக்கு லா.ச.ராமாமிருதம், தி.ஜானகிராமன் ஆகிய இரண்டு மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களின் அறிமுகம் கிடைத்தது “
                        பி.எஸ்.ராமையா, “மணிக்கொடிக் காலம்”, தீபம், அக்டோபர் 1971.

தொடர்புள்ள பதிவுகள்:

மணிக்கொடி சிற்றிதழ்

மணிக்கொடி: விக்கிப்பீடியா கட்டுரை

பி.எஸ்.ராமையா

புதன், 18 மே, 2016

பி.எஸ்.ராமையா -1

மணிக்கொடியை உயர்த்திய பி.எஸ்.ராமையா
கலைமாமணி விக்கிரமன்


மே 18. பி.எஸ்.ராமையாவின் நினைவு தினம்.

அவர் நினைவில் விக்கிரமன் அவர்கள் தினமணியில் 2010 -இல் எழுதிய கட்டுரையை இங்கிடுகிறேன்.
===========


வத்தலகுண்டு' தமிழ்நாட்டில் உள்ள சிறு கிராமம். அந்த மண்ணுக்குத் தனி மகிமை உண்டு. படைப்பிலக்கிய எழுத்தாளர்களால்தான் இலக்கியத்தில் அந்தப் பெயர் பதிக்கப்பட்டது.

வத்தலகுண்டு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணிய ஐயர் - மீனாட்சியம்மாள்  தம்பதிக்கு கடைக்குட்டிமகனாக, 1905-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆம் தேதி பி.எஸ்.ராமையா பிறந்தார்.

படிக்க வசதியில்லை. ஆனால், படிப்பில் ஆர்வம் கொண்ட ராமையா, வாரச் சாப்பாடு சாப்பிட்டும், உபகாரச் சம்பளம் பெற்றும் நான்காவது படிவம் வரையில் படித்தார். வேலை தேடி சென்னைக்குப் புறப்பட்டார். படித்த படிப்பு நாலாவது பாரத்துக்கு (ஒன்பதாம் வகுப்பு) மதிப்பு இருந்தாலும், அவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. ஊருக்குத் திரும்பலாம் என்று நினைத்தபோது, திருச்சியில் ஒரு ஜவுளிக்கடையில் வேலை கிடைத்தது. ஆனால் அது சரிப்பட்டு வரவில்லை. பிறகு கடலூரில் சிறு சிறு பணிகள் செய்தார். அதுவும் ஒத்துவரவில்லை.

மீண்டும் சென்னைக்குத் திரும்பி பற்பல இடங்களில் பணியாற்றி, ஆர்யபவன் உணவுச்சாலையில் சர்வர் வேலையில் சேர்ந்தார். 18 வயது வாலிபரான ராமையா, செய்யாத தொழிலில்லை. பார்க்காத வேலையில்லை.

முன்பே நெஞ்சில் கனலை வளர்த்துக்கொண்டிருந்த தேசிய இயக்கம், ராமையாவைச் சிலிர்த்து எழச் செய்தது. காந்தி தொடங்கிய உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டதால், கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை பெற்றார். அப்போதுதான் அவரது வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது.

சிறையில், வ.ரா., ஏ.என்.சிவராமன், சங்கு சுப்பிரமணியம் முதலியவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைத்தது. சிறைத் தண்டனை முடிந்தவுடன் கதர் விற்பனை நிலையத்தில் வேலை கிடைத்தது. கதர் ஆடைகளைத் தோளில் சுமந்தபடி விற்பனை செய்தார். மனதில் புதுத் தெம்பு ஏற்பட்டது.

காந்திஜியின் நிர்மாணத் திட்டங்களில் ஈடுபாடு ஏற்பட்டது. தொண்டர் படை முகாமிலிருந்து தொண்டாற்றினார். ஓரணா விலையுள்ள சுதந்திர இயக்கப் புத்தகங்களை விற்பனை செய்தார். தூத்துக்குடி, ராஜபாளையம், திருநெல்வேலி, மதுரை, ஈரோடு முதலிய ஊர்களுக்குச் சென்று தொண்டர் படை முகாம்கள் அமைத்தார்.

1932-இல் மீண்டும் சென்னைக்கு வந்த ராமையாவுக்கு அடுத்து என்ன செய்வதென்ற  குழப்பம் ஏற்பட்டது. காங்கிரஸ் இயக்கத்து ஈடுபாட்டைக் குறைத்துக்கொண்டார்.

முன்பே ஜே.ஆர்.ரங்கராஜு நாவல்கள், ராஜம் ஐயர், கமலாம்பாள் சரித்திரம் முதலியவற்றைப் படித்திருந்ததால், படைப்பிலக்கிய ஆர்வமும் சேர்ந்திருந்தது.

"ஆனந்த விகடன்' சிறுகதைப் போட்டி அறிவிப்பைப் பார்த்தார். அதற்குக் கதை எழுதத் தூண்டியவர் சங்கு சுப்பிரமணியம்தான். அவர் தீவிர தேசிய இயக்கக் கொள்கை உடையவர். பாரதி பக்தர். ஆனந்த விகடன் சிறுகதைப் போட்டிக்குக் கதை அனுப்பினார் ராமையா. முதலிடம் பெற்ற கதைக்கு நூறு ரூபாய் பரிசு கிடைத்தது. ராமையா எழுதிய "மலரும் மணமும்' கதைக்கு ஆனந்த விகடனின் ஊக்கப்பரிசாக பத்து ரூபாய் சன்மானம் கிடைத்தது.

கதையை அனுப்பிய அவசரத்தில் எழுதியவர் பெயரை எழுத மறந்துவிட்டார் ராமையா. கதையை வெளியிட்டு, எழுதியவர் பெயரைத் தெரிவிக்கவும் என்று பத்திரிகையில் எழுதிய பிறகே, எழுதியது தான்தான் என்று தெரிவித்து அந்தப் பத்து ரூபாயைப் பெற்றார்.


அதன்பிறகு, பத்திரிகை உலகப் பணி அவரைக் கவர்ந்தது. "ஜயபாரதி' இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். எழுத்தாளர்களின் லட்சியத்தை வெளியிடும் ஜயபாரதி, சுதந்திரச் சங்கு, காந்தி ஆகிய இதழ்களைப் பற்றி இந்தத் தலைமுறையினர் அவசியம் அறிந்து கொள்ளவேண்டும்.

1933-ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டதுதான் மணிக்கொடி. ஸ்டாலின் சீனிவாசனின் ஆர்வமும், லட்சியமும்தான் மணிக்கொடி பிறக்கக் காரணம். "மணிக்கொடி' இதழ் பி.எஸ்.ராமையாவை மிகவும் கவர்ந்தது. "மணிக்கொடி'க்குத் தொடர்ந்து எழுதினார். மணிக்கொடிக்கு விளம்பரம் சேகரித்துக் கொடுக்கும் பணியிலும் இறங்கினார்.

""மணிக்கொடி காலத்துக்குப் பின் தமிழ்நடையில் படிப்பவர், கேட்பவர் உள்ளங்களில் கனல் மூட்டும் விசையும் வேகமும் திராவிட முன்னேற்றக் கழக எழுத்தாளர் சிலரிடம் இருக்கின்றன. இந்த வகையில், அறிஞர் அண்ணாதுரை மற்றவர்களுக்கு ஒருபடி மேலே நிற்கிறார். ப.ஜீவானந்தத்துக்கு எழுத்திலும் பேச்சிலும் விசையும் வேகமும் கொண்ட தமிழ்நடை கூடியிருக்கிறது; கனல் இருக்கிறது'' என்ற தம் தூய கணிப்பை தாம் எழுதிய "மணிக்கொடி காலம்' என்ற தொடரில் எழுதி, தமிழுக்குப் பெரும் தொண்டு செய்திருக்கிறார் பி.எஸ்.ராமையா.

"மலரும் மணமும்' வெளிவந்தபோது அவருக்குச் சிறுகதை எழுதும் நுணுக்கங்கள் தெரியாது. "மலரும் மணமும்' பிரசுரமான பிறகு அவருக்குப் புதிய உற்சாகம் ஏற்பட்டது. "மணிக்கொடி'யின் வளர்ச்சியில் நகமும் சதையுமாக இருந்த ராமையா, பல சிறுகதைகள் எழுதிக் குவித்தார்.

ராஜாஜியிடமிருந்து கட்டுரை வாங்கி "மணிக்கொடி'யில் வெளியிட்டார் ராமையா. பலருக்கு அதில் அதிருப்தி. "கல்கி'யைத் தவிர வேறு இதழ்களில் தொடர்ந்து எழுதாத ராஜாஜி, "மணிக்கொடி'யில் தொடர்ந்து எழுதுவதாக வாக்களித்தார். ஆனால், அதை வெளியிடும் பேறு "மணிக்கொடி'க்கு இல்லை.

சிறுகதை இலக்கியத்தைப் பற்றி பி.எஸ்.ராமையா அழுத்தமான கொள்கை உடையவர். "இலக்கியம் என்ற ஆலமரத்தின் ஒரு கிளையாக சிறுகதையைச் சொல்லலாம்' என்றார்.

சி.சு.செல்லப்பா, பி.எஸ்.ராமையாவின் பண்பு, எழுத்து, வாழ்க்கை மூன்றையும் அறிந்தவர். தன் புதினம் வெளிவருவதற்கு முன்பே தன் சொந்தச் செலவில், "ராமையாவின் சிறுகதைப் பாணி' என்ற நூலை வெளியிட்டார். சிறுகதை இலக்கியத்தைப் பெரிதும் விரும்புபவர்கள் அந்த நூலைக் கட்டாயம் படிக்க வேண்டும். ராமையாவின் வாழ்க்கைச் சரிதத்தை விவரமாக அறிய, சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற "மணிக்கொடி காலம்' என்ற நூலைப் படிக்க வேண்டும்.

அவர் வளர்த்த, தியாகம் செய்த, சிறிது காலத்துக்குக் (மணி) கொடியைத் தாங்கிப்பிடித்த "மணிக்கொடி' என்று வாசகர்களும் எழுத்தாளர்களும் விமர்சகர்களும் மார்தட்டிக் கொள்பவர்களும் பேசும்படியாகச் செய்த "மணிக்கொடி'யிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

பின்னர், ராமையா தன் புது வாழ்க்கையை முடிவு செய்துவிட்டார். திரைப்படத் துறையில் கவனம் செலுத்தினார்; நாடகம் எழுதினார்; திரைப்படத் தயாரிப்புக்கு உதவினார். ஆனால், அவர் வாழ்க்கையை நடத்தியது, சிறுகதைக் கலைக்குத் தொண்டு செய்வதன் மூலமாக ஆனந்த விகடன், தினமணி கதிர் (முதல் ஜன்மம்), குமுதம் பத்திரிகைகளில் வாராவாரம் கதைகள் எழுதி, சன்மானத் தொகையைப் பெற்றார். சி.சு.செல்லப்பாவின் பட்டியல்படி அவர் 304 சிறுகதைகள், மூன்று நாவல்கள், ஆறு நாடகங்கள் எழுதியுள்ளார்.

1957-இல் "பிரசிடென்ட் பஞ்சாட்சரம்' என்ற நாடகம் எழுதியுள்ளார். அந்த நாடகம், திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு பெரும் வெற்றிகண்டது. "போலீஸ்காரன் மகள்' என்ற நாடகம், மேடையில் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இந்த நாடகமும் திரைப்படமாக எடுக்கப்பட்டது.

பி.எஸ். ராமையா, வெற்றிலை, சீவலுடன் புகையிலை போடும் பழக்கத்தால், அவரது தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டு, உடல்நலம் பாதிக்கப்பட்டது.

பி.எஸ்.ராமையா, 1983-ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதி (78வது வயதில்) காலமானார் என்ற செய்தியைக் கேட்டு எழுத்துலகமும், வாசகர் உலகமும் கண்ணீர் விட்டது.

சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபட்டதையும் மணிக்கொடிக்காக அவர் செய்த தியாகத்தையும் எழுத்தில் அடக்கிவிட முடியாது.

[ நன்றி: தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:

பி.எஸ்.ராமையா