புதன், 30 நவம்பர், 2016

மார்க் ட்வைன் - 1



நவம்பர் 30. மார்க் ட்வைனின் பிறந்தநாள்.

அவர் வாழ்க்கையில் இரு நிகழ்ச்சிகள்:
================ 
1. மற்றொருவர் ங்கே?


முல்லை பிஎல். முத்தையா

பிரபல நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன் ஒரு நாள் குதிரைப் பந்தயத்துக்குப் போயிருந்தார்.

அங்கே அவருடைய நண்பர் ஒருவரைச் சந்தித்தார். நண்பர் அவரைப் பார்த்ததும், பரபரப்போடு, “கையில் இருந்ததையெல்லாம் தோற்றுவிட்டேன். ஊருக்குத் திரும்பிப் போக ஒரு டிக்கெட் வாங்கித் தர இயலுமா?” என்று கேட்டார்.

"நான் கூடத்தான் இன்று எவ்வளவோ தோற்று விட்டேன். எனக்கும் உனக்குமாக இரண்டு டிக்கெட் வாங்க இயலாது. ஒன்று செய்யலாம். நான் உட்கார்ந்திருக்கும் இடத்துக்குக் கீழே நீ மறைந்து கொள்; என் காலால் உன்னை மறைத்துக் கொள்கிறேன். சம்மதமா?” என்றார் மார்க் ட்வைன்.

நண்பர் அதற்கு இணங்கினார். அவருக்குத் தெரியாமல் மார்க் ட்வைன் ரயில் நிலையத்துக்குப்போய், இரண்டு டிக்கெட் வாங்கிக் கொண்டார்.

 ரயில் வந்தது. நண்பர் மார்க் ட்வைன் இருக்கைக்குக் கீழே புகுந்து கொண்டார்.

 சிறிது நேரம் கழித்து, டிக்கெட் பரிசோதகர் வந்தார்.

மார்க் ட்வைன் அவரிடம் இரண்டு டிக்கெட்டுகளைக் காண்பித்தார்.

 'இன்னொருவர் எங்கே?" என்று கேட்டார் பரிசோதகர்.

மார்க் ட்வைன் தலையை அசைத்தவாறு, "இது என் நண்பருடைய டிக்கெட்! அவர் கொஞ்சம் ஒரு மாதிரி! இருக்கைக்கு அடியில் உட்கார்ந்து வருவதே அவர் வழக்கம்என்று கிண்டலாகக் கூறினார்


[ நன்றி: “ அயல் நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள் “, நூல் ] 

2. டை தானே வேண்டும்?

‘அங்கிள் டாம்ஸ் கேபின்’ என்ற நூலை எழுதிப் புகழ்பெற்றவர் ‘ஹேரியட் பீச்சர் ஸ்டோவ்’ என்ற எழுத்தாளர். இவரைப் பார்க்க ஒரு முறை மார்க் ட்வைன் சென்றார். நகைச்சுவையாகப் பேசுவதிலும் எழுதுவதிலும் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் மார்க் ட்வைன். ஆனால் எப்போதுமே உடை விஷயத்தில் அவ்வளவு அக்கறை காட்ட மாட்டார். வெளியில் செல்வதாக இருந்தால் கூட கையில் கிடைப்பதை எடுத்து மாட்டிக் கொண்டு கிளம்பி விடுவார். 

மார்க் ட்வைன், ஸ்டோவுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு விடைபெற்றபோது, திருமதி ஸ்டோவ், ‘‘என்ன இப்படி டை கூட அணியாமல் வெளியே கிளம்பி விடுகிறீர்கள்?’’ என்று கேட்டதும்தான் மார்க் ட்வைன் தன் கழுத்தைத் தொட்டுப் பார்த்தார்.

‘‘மறந்து விட்டது’’ என்று கூறி விட்டுச் சென்றார். சிறிது நேரத்தில் ஸ்டோவ் வீட்டுக் கதவை யாரோ தட்டினார்கள். திருமதி ஸ்டோவ் கதவைத் திறந்தபோது, வாசலில் ஒரு ஆள் கையில் ஒரு பொட்டலத்துடன் நின்று கொண்டிருந்தான். ‘‘மார்க் ட்வைன் இதைத் தங்களிடம் தரச் சொன்னார்’’ என்று சொல்லிக் கொடுத்தான்.

 திருமதி ஸ்டோவ் அதைப் பிரித்துப் பார்த்தார். உள்ளே ஒரு கறுப்பு டையும், ஒரு குறிப்பும் இருந்தன. குறிப்பில் எழுதப்பட்டு இருந்தது இதுதான்: ‘‘இதோ என் டை. இன்று உங்கள் வீட்டில் அரை மணி நேரம் நான் டையில்லாமல் இருந்தேன். 

எனவே, அரை மணி நேரம் என் டையைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, திருப்பி அனுப்பி விடுங்கள். தயவு செய்து தாமதிக்க வேண்டாம். ஏனென்றால், என்னிடம் இருப்பது ஒரே ஒரு ‘டை’தான். ‘இவரிடம் போய் வாயைக் கொடுத்தோமே’ என்று அவர் நொந்து போனார்.


[ நன்றி :http://www.kungumam.co.in/MArticalinnerdetail.aspx? id=4040&id1=30&id2=3&issue=20141208  ]

செவ்வாய், 29 நவம்பர், 2016

சின்ன அண்ணாமலை - 3

கலைவாணருடன் போட்டி 
சின்ன அண்ணாமலை


நவம்பர் 29. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பிறந்த நாள்.
===





 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

சின்ன அண்ணாமலை 

என்.எஸ். கிருஷ்ணன்

எஸ்.வி.சகஸ்ரநாமம் -1

எஸ்.வி.சகஸ்ரநாமம்
ரவி சுப்பிரமணியம்


நவம்பர் 29.  சகஸ்ரநாமம் அவர்களின் பிறந்த நாள்.
 ====

நாடக நிகழ்வென்பது கூட்டு உழைப்பாலும் ஒத்திசையும் கூட்டு உடல் மொழியாலும் நிகழ்த்தப்படுவது. ஒலி ஒளி வண்ணங்கள், ஒப்பனைப் பிரதி என பல்கலையின் கூட்டு உச்சரிப்பு அது. அந்தக் கூட்டு உச்சரிப்பின் தனித்துவம் வாய்ந்த குரல்களில் ஒன்று தமிழ் நாடகக்கலையின் தலைமை ஆசான் என்று இன்றும் எல்லோராலும் போற்றப்படும் தவத்திரு. சங்கரதாஸ் சுவாமிகள்.பொழுதுபோக்கோடு, புராணம், இலக்கியம், வரலாறு, சமயம், கற்பனை, மொழிபெயர்ப்பு என எழுதி, நடித்து, நிகழ்த்திக்காட்டி தமிழின் தொன்மங்களை பாமரனுக்கும் நாடக வழியில் கொண்டு சேர்த்தவர் சுவாமிகள். இரணியன், இராவணன், எமதர்மன், சனீஸ்வரன் போன்ற பல கதாபாத்திரங்களில் அவரது அசாத்திய நடிப்புத் திறன் வெளிப்பட்டுள்ளது.

ஒப்பனையைக் கலைக்காமல், சனீஸ்வரன் வேஷத்தில் விடியற்காலை குளக்கரைக்கு வந்த சங்கரதாஸ் சுவாமிகளின் தோற்றத்தைக் கண்டு பயந்து நடுங்கி, உயிரையே விடுகிறாள் குளக்கரைக்கு துணி வெளுக்க வந்த சலவைக்காரக் கர்ப்பிணிப் பெண். தன்னால் இப்படி நேர்ந்ததே என்று மனம் வெதும்பிய சுவாமிகள், அன்று முதல் வேஷங்கட்டுவதை விட்டு, பல நாடகக் குழுக்களுக்கு ஆசானாக மாறுகிறார்.

தனது 24ஆம் வயதிலிருந்து நாடகக்கலையில் ஈடுபட்டு வந்த சுவாமிகள், 1918இல் தத்துவ மீனலோசனி வித்வ பாலசபாஎன்ற பாலர் நாடக சபையைத் துவக்குகிறார். அந்த நாடக சபாவில் சேர்ந்து சுவாமிகளிடம் நேரடியாகப் பயிற்சி பெற்றவர்கள் டி.கே.எஸ். பிரதர்ஸ்.
சங்கரதாஸ் சுவாமிகளிடம் நான் நேரடியாகப் படிக்காவிட்டாலும் அந்தப் பரம்பரையில் வந்த, திருக்கூட்ட மரபினன் நான்என்று தன்னைப் பற்றிக் குறிப்பிடுகிறார் எஸ்.வி. சகஸ்ர நாமம்.

சுவாமிகள் மறைந்த பின், அவர் நினைவாக டி.கே.எஸ். சகோதரர்களால் ஆரம்பிக்கப்பட்ட, ‘மதுரை ஸ்ரீ பால ஷண்முகானந்தா சபாவில், ‘அபிமன்யூ சுந்தரிநாடகத்தில், டி.கே. ஷண்முகம் அற்புதமாக நடிப்பதையும் கைத்தட்டல் பெறுவதையும் கண்டு, தானும் அது போன்று நாடகத்தில் நடிக்க வேண்டுமென, தீராத மோகம் கொள்கிறார் சகஸ்ரநாமம்.

பொள்ளாச்சியில் பெரியப்பாவின் வீட்டில் தங்கிப் படித்துக்கொண்டிருந்த பதிமூன்றே வயதான அவர் தன் ஆங்கிலப் புத்தகங்களை எடைக்குப் போட்டுவிட்டு கோவைக்கு வந்திருக்கிற டி.கே.எஸ்.சகோதரர்கள் நாடகக்குழுவில் சேர முடி வெடுத்து ரயிலேறிவிடுகிறார்.

நாடகக்குழுவின் மேலாளர் காமேஸ்வர அய்யர், “போ, போய் உன் பெற்றோரை கூட்டிவா, அல்லது உன் அப்பாவிடம் இருந்து கடிதம் வாங்கிவாஎன்கிறார்; நாடகத்தின் மீதிருந்த அதீத ஆசையால் அப்பாவைப் போலவே கடிதம் எழுதி வந்து கொடுக்கிறார் சகஸ்ரநாமம். அனுப்புநர் முகவரியில் இருந்த முகவரியைப் பார்த்து, அவர் அப்பாவுக்கு அஞ்சல் அட்டைப் போடப்பட்ட, அவர் அங்கு வந்து சேர, அவரைக்கண்டு பயந்து, அருகில் உள்ள படிக்கட்டு உள்ள ஒரு கிணற்றில் இறங்கி ஒளிந்து கொள்கிறார் சகஸ்ரநாமம்.

அந்தக் காலத்தில் நாடகத்தில் நடிப்பது மிகவும் சிரமமான காரியம். ஒரு நாடகக்குழுவில் இருக்கிற ஒருவனுக்குக் குறைந்தது மூன்று கலைகளாவது தெரிந்திருக்க வேண்டும். உயர்வு தாழ்வு பாராது, எல்லா வேலைகளையும் முகம் சுளிக்காது செய்ய வேண்டும். சர்க்கஸ் டெண்ட் ஊருக்கு ஊர் மாறுவதுபோல, எல்லாவற்றையும் மூட்டை மூட்டையாய்க் கட்டிக்கொண்டு ஊருக்கு ஊர் பாணர்கள் போலப் பயணப்பட வேண்டும். இவற்றையெல்லாம் மீறி நிரந்தர வருமானமோ சமூக மதிப்போ கிடைக்காது. இந்த விஷயங்களை எல்லாம் உணர்ந்திருந்த அவரது தந்தை கடைசியில் என்ன படிப்பா, நடிப்பா?” எனக் கேட்க, “நடிப்பேஎன்று சகஸ்ரநாமம் சொல்ல, “உன் தலையெழுத்துப்படியே நடக்கட்டும்என ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டுப் போகிறார்.

கோவை மாவட்டம், சிங்காநல்லூரில் 29.11.1913ஆம் ஆண்டு இரண்டு தமையர்களோடும் இரண்டு தமக்கைகளோடும் ஒரு இளைய தங்கையோடும் குடும்பத்தில் ஐந்தாவதாய் பிறந்தவர் சகஸ்ரநாமம். அன்று முதல் அவர் தந்தையாராலேயே நாடகத்துக்குத் தத்துக் கொடுக்கப்பட்டுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

டி.கே. சங்கரன், டி.கே. முத்துசாமி, டி.கே. ஷண்முகம், டி.கே. பகவதி என்கிற நால்வரும் இவரைக் குகனோடு ஐவரானோம் என்பதுபோல் அணைத்துக் கொள்கின்றனர். நாடகக்கலையின் பல்வேறு நுணுக்கங்களை அவர் அங்கேதான் கற்கிறார். வீரபத்திரன் என்கிற பழைய நாடக நடிகரிடம் அடிவாங்கிப் பாடல் கற்கிறார். தன் நாடகப் பயிற்சியின் குருநாதர் என்று அவர் குறிப்பிடுவது, நடிகர் எம்.கே. ராதாவின் அப்பாவான எம். கந்தசாமி முதலியாரைத்தான். அவரிடம் பயின்ற மூன்றே மாதங்களில் அபிமன்யூ சுந்தரியில் சூரிய பகவானாக வேஷங்கட்டுகிறார். நடிப்பதில் மட்டுமன்றி சில கலைகளில் விற்பன்னராகவும் சில கலைகளில் பரிச்சயமுள்ளவராகவும் இருந்துள்ளார் எஸ்.வி. எஸ்.

சங்கீத மேதை டி.ஏ. சம்மந்த மூர்த்தி ஆச்சாரியாரிடம் ஆர்மோனியம் இசை கற்றுள்ளார். இலக்கிய வாசிப்பு அவருக்கு இயல்பில் கூடி வந்துள்ளது. மேடை அமைப்பில் மிகுந்த தேர்ச்சி பெற்றவராக விளங்கினார். அதனால்தான், பின்னாளில் சென்னையில் கட்டப்பட்ட ராஜா சர் அண்ணாமலை செட்டியார் மன்றம்’, ‘ராணி சீதை ஹால்’, ‘கலைவாணர் அரங்கம்’, ‘சங்கரதாஸ் சுவாமிகள் அரங்கம்ஆகியவை அவரது ஆலோசனையோடும் கட்டப்பட்டுள்ளன. ஆடை அணிகலன் உருவாக்கத்தில் பரிச்சயம் கொண்டவராக இருந்திருக்கிறார். வி.கே. ஆசாரி என்பவரிடம் பளுதூக்கும் பயிற்சி பெற்று, போட்டிகளில் பங்கெடுத்துள்ளார். கொல்லத்தில் குஸ்தி படித்திருக்கிறார். வாலிபால் போட்டியில் பங்கெடுத்துள்ளார். பேட்மின்டன் தெரியும். கோவை அப்பாவு பிள்ளையிடம் கார் மெக்கானிக் வேலை கற்றிருக்கிறார். கோவை சங்கமேஸ்வரன் செட்டியார் கம்பெனியில் சோப் சப்ளையராக வேலை பார்த்திருக்கிறார். சேலம் பஸ் கம்பெனி ஒன்றில் சிலகாலம் கண்டக்டராக வேலை பார்த்துள்ளார். கார் ஓட்டப் பயின்று, முறையாக லைசென்ஸ் எடுத்துள்ளார். அவரது சித்தப்பாவிடமே டிரைவர் வேலை பார்த்திருக்கிறார். சின்ன அண்ணனின் மாமனாரோடுச் சேர்ந்து, காப்பிக்கொட்டை மற்றும் பலசரக்கு வியாபாரம் செய்திருக்கிறார். பட்டியல் இன்னும் நீள்கிறது.

நாடகத்தால் கலையால் வாழ்பவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் நாடகத்திற்காகவே வாழ்ந்த சிலருள் சகஸ்ரநாமமும் ஒருவர். பாரதியின் பாடல்களில் பெரும் ஈர்ப்பு கொண்ட அவர் பாரதியின் வரியை இப்படி மாற்றிச் சொல்லிக் கொள்கிறார். எனக்குத் தொழில் நாடகம். நாட்டுக்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்.இதைச் சொல்லிவிட்டு அடுத்து சொல்கிறார்: நானும் மூல நட்சத்திரம். அவரும் மூல நட்சத்திரம். அவரும் கார்த்திகை மாசம் பொறந்தார். நானும் கார்த்திகை மாசம் பொறந்தேன். அவரும் என்னைப் போலத் தாயை இழந்தவர்”.

அதே பாரதியைப் போல் படைப்புக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாமல் வாழ்ந்தவர் எஸ்.வி.எஸ். என்பதற்குச் சில உதாரணங்களைச் சொல்ல முடியும்.

1959இல் நாலுவேலி நிலம்படம் எடுத்து நஷ்டம் அடைகிறார் எஸ்.வி.எஸ். சக நடிகர்களின் மேல் பிரியத்தோடு, அவர்களது எல்லா வசனங்களையும் மனப்பாடமாகப் பிராம்ட் செய்து உதவும் சகஸ்ரநாமம், சமயங்களில் தன் வசனத்தை தான் மறந்து நிற்கும் சோகம் போல, வியாபாரச் சூட்சுமம் தெரியாமல் படம் எடுத்து, அதனால் ஏற்பட்ட கடனுக்காக தன் வீட்டை அடமானம் வைக்கிறார். சில கடன்களை அடைக்கிறார். முழுவதும் அடைக்க முடியவில்லை. கடைசியில் கடனுக்காக வீட்டை ஏலம் விட தண்டோராப் போடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவரோ மாடியில் நாடக ஒத்திகையில் ஈடுபட்டுள்ளார். தண்டோராக்காரன் தாண்டவராயன் தெரு வீட்டில் நோட்டீஸ் ஒட்டி விட்டுப் போகிறான். பின்பு சிலோனில் இருந்து கொஞ்சம் பணம் வருகிறது. பணம் வந்ததும் கோமல் சாமிநாதனையும் நடிகர் சாமிக்கண்ணுவையும் அழைத்துக்கொண்டு, காரைக்குடி கண்டவராயன்பட்டிக்குச் செல்கிறார். அங்கு தனக்கு பணம் தந்த செட்டியாரிடம் வட்டி உள்பட முழுப்பணத்தையும் திரும்பக் கொடுக்கிறார். செட்டியார் நெகிழ்ந்து சினிமாவில் நான் யார் யாருக்கோ பணம் தந்தேன். பல பேர் ஏமாத்தியிருக்காங்க. ஆனால் இந்த நிலையிலும் நீங்கள் இப்படி நடந்து கொள்வது என்ன சொல்றதுன்னு தெரியலஎன்று சொல்லியிருக்கிறார்.

அடுத்து பண்டரிபாய்க்கும் மைனாவதிக்கும் உள்ள பாக்கிக்காக அவர்களது வீட்டுக்குச் செல்கிறார். அவர்கள் நீங்க எங்களுக்கு எவ்வளவோ செஞ்சுருக்கிங்க. வேண்டாம்என்று மறுக்கிறார்கள். மறுப்பது உங்க பெருந்தன்மையம்மா. ஆனா, ‘நாலு வேலி நிலம்கதையே சாகும் போதும் யாருக்கும் கடன் வைக்கக் கூடாதுங்கிறதுதானே. பணத்தை நீங்க வாங்கிக்கத்தான் வேணும்எனக் கட்டாயப்படுத்தித் தந்துவிட்டு வருகிறார்.

தான் நன்றாக வாழ்ந்த காலத்தில் அவர் சில கலைஞர்களுக்கு உதவியிருக்கிறார். ஜீவா தலைமறைவு வாழ்க்கையில் இருந்த போது அடைக்கலம் தந்துள்ளார். முகவை ராஜமாணிக்கத்திற்கு உதவியிருக்கிறார். தன் கலை வாழ்வின் ஆரம்ப காலங்களில் வசனகர்த்தா இளங்கோவனிடம் எஸ்.வி.எஸ் உதவியாளராக வேலை பார்த்துள்ளார். மணிப்பிரவாள நடையில் ஒலித்துக்கொண்டிருந்த திரை மொழியை, தனது அழகு தமிழால் எழுதி, தமிழின் ருசியை திரை உலகத்திற்கு உணர்த்தியவர் இளங்கோவன். தணிகாசலம் என்ற இயற்பெயர் கொண்ட இளங்கோவன் உண்மையான அர்த்தத்தில் தமிழ் திரைப்பட வசனத்தின் திருப்புமுனை. திருநீலகண்டர், சிவகவி, ஹரிதாஸ், அம்பிகாபதி அசோக்குமார், மகாமாயா, சுதர்ஸன் போன்ற படங்களில் வசனம் எழுதிய இளங்கோவனுக்கு, ஜுபிடர்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரித்த கண்ணகிதான் பெரும் பெயரை பெற்றுத் தந்தது. அதில் அவரோடு உதவியாளராகப் பணியாற்றிவர் சகஸ்ரநாமம். அந்த இளங்கோவனின் கடைசிக் காலகட்டத்தில் அவருக்கு உதவியிருக்கிறார். இதையெல்லாம் அவர் எங்கும் குறிப்பிடவில்லை. அவரது நண்பர்களின் அவரது நாடகக்குழு நடிகர்களின் வழியேதான் இதையெல்லாம் அறிய முடிகிறது.

அவர் குழுவில் நடித்த நடிகர் நடிகைகள் பட்டியல் வெகு நீண்டது. ஒரு சிலரை மட்டும் குறிப்பிடுகிறேன். சிவாஜி, முத்துராமன், குலதெய்வம் ராஜகோபால், வி. கோபாலகிருஷ்ணன், கள்ளப்பார்ட் நட்ராஜன், ஏ.கே. வீராச்சாமி, ஏ.வீரப்பன், கம்பர் ஜெயராமன், பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், இயக்குநர் கே. விஜயன், சத்யராஜ், பி.ஆர். துரை, மாஸ்டர் பிரபாகர், எஸ்.என்.லட்சுமி, எம்.என். ராஜம், பண்டரிபாய், மைனாவதி, தேவிகா, ஜி.சகுந்தலா, காந்திமதி என்று பட்டியல் நீள்கிறது.

கலைஞர்கள்பால் கொண்டிருந்த அதே அன்பைதான் அவர் எழுத்தாளர்களிடமும் கொண்டிருந்தார். வ. ரா. சகஸ்ரநாமத்தின் நடிப்பை, நாடக சேவையை பலமுறை புகழ்ந்துள்ளார். 1945-46களில், சென்னை ஒற்றைவாடைத் தியேட்டரில், விதவை திருமணத்தை வலியுறுத்திய இவரது பைத்தியக்காரன்நாடகத்தைப் பார்க்க உடல் நலிந்த நிலையிலும் அடிக்கடி வந்துள்ளார். நாடகம் முடிந்ததும் ஒருநாள் அவர், “சபாஷ் சகஸ்ரநாமம். சபாஷ். பத்து நாளா இந்த நாடகத்தைப் பாக்க வரேன். முதல் நாள் அனுபவிச்ச அந்த நெகிழ்ச்சி குறையவே இல்ல. ஒரு நாடகம் சமூகத்துக்கு இதைத்தான் செய்யணும்என்கிறார்.

இது போன்ற அறிஞர்களது தொடர்புதான் அவரை இலக்கியத்தை நோக்கி நகர்த்தி உள்ளது. தனக்குப் பெரும் வழிகாட்டியாக விளங்கிய நூல்களாக அவர் குறிப்பிடுவது, மாஜினி, காரல் மார்க்ஸ், கிரீஸ் வாழ்ந்த வரலாறு போன்ற வெ. சாமிநாதசர்மாவின் நூல்களை. அதனால் தான் தன் சகோதரி மகன் என்.வி.ராஜாமணியின் உதவியோடு, தாகூரின் கதையை கண்கள்என்ற தலைப்பில் நாடகமாகப் போடுகிறார். நார்வேஜிய எழுத்தாளர் இப்சன் நாடகங்களால் கவரப்பட்டு எனிமி ஆப் பீப்பிள்ஸ்என்கிற நாடகத்தை மக்கள் விரோதிஎன்று நாடகமாக எழுதித் தரும்படி, தன் நண்பரும் பொது உடமைத்தலைவருமான ஜீவாவிடம் கேட்கிறார். பி.எஸ். ராமய்யா, தி. ஜானகிராமன், கு. அழகிரிசாமி, ந. சிதம்பரசுப்ரமணியம் போன்ற மிகச்சிறந்த எழுத்தாளர்களை தன் அன்பின் வேண்டுகோளால் நாடகம் எழுத வைக்கிறார். உண்மையிலேயே இலக்கியவாதிகளைக் கொண்டாடி இருக்கிறார் எஸ்.வி.எஸ். தன் குழந்தைகள் தவிர எழுத்தாளர் பி.எஸ். ராமய்யா மகள் ரோஜா போன்ற நண்பர்களின் குழந்தைகளின் எட்டுப் பேருக்கு முழு செலவையும் ஏற்று கல்யாணம் செய்து வைத்துள்ளார்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எம்.வி.வி ஒரு முறை சொன்னார். சகஸ்ரநாமம் அப்போது பெரிய புகழ் பெற்ற நடிகர். ஜானகிராமன் அவர் அலுவலகத்தில் கிறுக்கல் கிறுக்கலாக ஒவ்வொரு பக்கமாக ஸ்கிரிப்ட் எழுத எழுத அவர் பக்கத்திலேயே இருந்து அதை ஆசையாசையாய் சகஸ்ரநாமம் உடனுக்குடன் எடுத்துப் படிப்பதை நான் கண்டேன்.

இலக்கியவாதிகளை உண்மையில் மதித்து, அவர்களது ஆக்கங்களை நாடகமாக்கும் சினிமாவாக்கும் முயற்சிகள் இன்றுவரை மிக மிகச் சொற்பமானவை. அதனால்தான் தமிழ் சினிமா இன்று வரை அதிக அளவில் இந்தியாவைத் தாண்டி பெயர் பெறவோ, பரிசு பெறவோ முடிவதில்லை. ஆனால் எஸ்.வி.எஸ், அந்தக் காலத்திலேயே இது போன்ற பிரக்ஞையோடு செயல்பட்டது ஆச்சர்யமளிக்கிறது.

அண்ணாதுரை, கருணாநிதி போன்றவர்களோடு மதிப்போடும் அன்போடும் அவர் பழகியிருந்தாலும் அவர்களது நாடகங்களை அவர் தன் சேவா ஸ்டேஜுக்கு எடுத்துக்கொள்ளவில்லை. திராவிட இயக்க நாடக மொழியிலிருந்து வேறுபட்ட ஒன்றாகவே தன் நாடக மொழியை வடிவமைத்திருக்கிறார் எஸ்.வி.எஸ்.

ஒரு வகையில் திராவிட இயக்க மேடை நாடகங்களுக்கான மௌனமான எதிர்ப்புக்குரலே எஸ்..வி.எஸின். நாடகப் பிரதிகள். அவரது நண்பர்களுடனான தனிப்பட்ட உரையாடல்களின் மூலம் இது உறுதிப்படுகிறது.

பல சமயங்களில் திராவிட இயக்க நாடக மேடைகளில் பயன்படுத்தப்படும் அதீத அலங்காரங் கொண்ட திகட்டும் மிகைத்தமிழ் சொல்லாடல்களையோ, வெற்று வார்த்தை ஜாலங்களையோ, ஆக்ரோஷ பிரச்சாரங்களையோ எஸ்.வி.எஸின். நாடகப் பிரதிகளில் காண முடியவில்லை.

எஸ்.வி.எஸ். தமிழின் காதலன். ராஜா சாண்டோ இயக்கத்தில் வந்த அவரது முதல் படத்தில் நடிக்க பம்பாய் செல்கிறார் எஸ்.வி.எஸ். அவர் இங்லீஷ் மோஸ்தரோடு இருப்பார். தமிழில் பேசமாட்டார் என்று நினைத்தேன். சரளமாகத் தமிழ் பேசினார். எழுதினார். அதைவிட ஆச்சர்யம் தமிழ் இலக்கண நூல்களான நன்னூல் போன்றவற்றை மனப்பாடமாகச் சொன்னார். அவர் தமிழ் இன உணர்வு உள்ளவர்என்று அவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

திருக்குறள், தேவாரம், திருவாசகம், திருமந்திரம், பாரதி கவிதைகள், கட்டுரைகள் போன்ற தான் விரும்பிய சில தமிழ் இலக்கியங்களை மனப்பாடம் செய்திருந்த எஸ்.வி.எஸ், என்.எஸ்.கே. மறைந்தபோது வானம் மேகமூட்டத்தோடு இருந்ததை இப்படிச் சொல்கிறார்.

கதிரவனைக் காணாது கமல மலர் வாடுமென கவிகள் சொல்லக் கேட்டதுண்டு. கமலத்தைக் காணாததால் அன்று கதிரவனே வாடியிருந்தான்.என்.எஸ்.கேயுடனான அவரது உறவு ரொம்பவும் விசேஷமானது. என்.எஸ்.கே. இவருக்கு பதினாறு வயதில் பழக்கமாகிறார். அவரோடு இளம் வயதில் நாடகத்தில் நடித்த ஒரு சம்பவத்தை இப்படி குறிப்பிடுகிறார்.

சிலோனில் ஒரு முறை நாங்கள் நாடகங்கள் நடத்தச்சென்றோம். அங்கு நடத்தப்பட்ட கிருஷ்ணலீலா நாடகத்தில் நரகாசுரனாக என்.எஸ்.கே. நடிக்கிறார். அவர் மகன் பாத்திரத்தில் நான் நடிக்கிறேன். நரகாசுரன் வீழ்கிறான். அவர் வீழ்ந்ததும் அப்பா, எனக்கு ஒரு வழியும் காட்டாமப் போறீங்களேஎன்று அவர் மேல் நான் விழுந்து அழும் காட்சி. நான் அப்படி சொல்லி அவர் மேல் விழுந்து அழும்போது என்.எஸ்.கே. சொல்கிறார். மகனே கலங்காதே. அப்படியே தனுஷ்கோடி வழியா போஎன்கிறார். அது நான் அழ வேண்டியக் காட்சி. எனக்கோ சிரிப்பு வந்துவிட்டது. நல்ல வேளை முகத்தை உடனே, அந்தப் பக்கம் முகம் திருப்பிக் கொண்டு, நான் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது, இந்தப் பக்கம் பார்ப்பவர்களுக்கு நான் அழுவது போல் தெரிந்தது.

என்.எஸ்.கேயைப்பற்றி லக்ஷ்மிகாந்தன் அவதூறாக எழுதியபோது, அவரது இந்துநேசன் அலுவலகத்துக்கேச் சென்று அச்சு இயந்திரங்களை சுத்தியலால் அடித்து உடைத்துள்ளார் எஸ்.வி.எஸ். இந்தச் சம்பவத்துக்குப் பின், அவரை சந்தித்த எம்.ஆர். ராதா வாய்யா, பிராமண ரௌடிஎன்று செல்லமாக அழைத்தாராம். என்.எஸ்.கே. சிறையில் இருந்தபோது, வழக்குச் செலவுகளுக்குப் பணம் திரட்ட அவரது நாடகக்குழுவை எடுத்து நடத்தி, அவர் சிறையில் இருந்து திரும்பியதும் அதனை அவரிடமே ஒப்படைத்துள்ளார் எஸ்.வி.எஸ்.

நாடகப் பிரதிகளை அவர் புதுவிதமாய் மாற்றி அமைக்க இன்னொரு காரணம் காங்கிரஸ் அபிமானமும் தேசபக்தியும். தக்கர் பாபா ஆஸ்ரமப் பொன் விழாவில் காந்தியையும் 1936இல் விருதுநகரில் நேருவையும் பார்த்து பரவசம் கொள்கிறார். 1935லேயே கோவையில் காங்கிரசில் உறுப்பினர்களைச் சேர்க்கப் பாடுபடுகிறார். யுத்த நிதிக்காக ஐயாயிரத்து ஒரு ரூபாயை காமராஜரிடம் கொடுத்தது மட்டுமில்லாமல் அதுவரை தான் பெற்ற தங்கப்பதக்கங்கள், வெள்ளி குத்துவிளக்கு, சந்தனப்பேலா போன்ற பல பொருட்களைக் கொடுத்துவிட்டு வருகிறார்.

முழுநேரத் தொழில் முறை நாடகக் கலைஞனாக அவர் இருந்ததும் புதுமைகளை ஏற்கும் மனோபாவமும் தேர்ந்த இலக்கியவாதிகளின் உறவும் ஸேவா ஸ்டேஜ் நாடகக் கல்வி நிலையம் அமைத்து நாடக மாணவர்களை உருவாக்கும்படி செய்தது. ஏராளமான அறிஞர்களின் ஆலோசனைகளும் அவர் தன் நாடகங்களில் மேலும் மேலும் புதுமை செய்யும் பாதையை அவருக்குத் தந்துள்ளது. டி.கே. ஷண்முகத்தின் ஆலோசனையோடு அவர் போட்ட பாரதியின் பாஞ்சாலி சபதம்என்ற கவிதை நாடகம் மிகப்பெரும் வெற்றிபெறுகிறது. அதையும் தாண்டி பரிக்ஷார்த்த நாடகங்களுக்குச் செல்கிறார்.

பாரதியின் குயில் பாட்டை நாடகமாக்கியபோது பார்த்த ஒரு பார்வையாளர் ஏற்கனவே ஜனங்களுக்கு நாடகம் போட்டேள். இப்போ வெறும் புலவர்களுக்காக மட்டும் போடுறேள் போலேருக்குஎன்றாராம்.

சமகாலத்தின் இந்தக் கேள்விதான் ஒரு கலைஞன் தன் கலை எல்லைகளைக் கடக்கிறான் என்பதை புரியவைக்கும் சாட்சி. இப்படி தனது நாடகப் பிரதிகளின் உருவாக்கத்தின் மூலம் அவர் சூழலுக்கு எதிர்வினை புரிந்துகொண்டே இருந்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் தன் சக நாடகக் குழுக்களிடம் தன் செயல்பாடுகள் மூலமாக சதா ஒரு உரையாடலை உருவாக்கவே முயன்றுள்ளார். கேட்டும் கேளாத செவிகளுக்கும் பார்த்தும் பாராத விழிகளுக்கும் புதியதாய் ஒன்றைக் காட்டவே எஸ்.வி.எஸ் அர்ப்பணிப்பாய் இயங்கி உள்ளார்.

தனது 18ஆம் வயதில் 13 வயதான மாமன் மகள் ஜெயலக்ஷ்மியை மணந்து கௌரி, லலிதா, சாந்தி என்ற மூன்று பெண் குழந்தைகளையும் குமார் என்ற மகனையும் பெற்றவர் சகஸ்ரநாமம். தன் கடைசி நாடகமான நந்தா விளக்குக்கு, வாரத்தின் துவக்கத்தில் எல்லோருக்கும் தொலைபேசியில் பேசி, ஞாயிற்றுக் கிழமை ஒத்திகைக்கு வரச்சொல்லிவிட்டு வெள்ளிக் கிழமையே அவர் மறைந்தார். அது அவர் நமக்குக் காட்டிய கடைசிக் காட்சி.

அந்த ஞாயிற்றுக் கிழமையில் அவர் நிகழ்த்தாமல் நிகழ்த்திய ஒத்திகை வழியேயும் சொல்லாமல் சொன்ன பாடங்களின் வழியேயும் தேர்ந்தெடுத்த கதைகள் வழியேயும் இன்றும் நம் நாடகக்காரர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார்.

(11.2.2013 அன்று சென்னை மயிலாப்பூர் கோகலே சாஸ்திரிஹாலில் நடைபெற்ற சகஸ்ரநாமம் நூற்றாண்டு விழாவில் வாசித்த கட்டுரை.)


[ நன்றி : http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=15592&ncat=21

தொடர்புள்ள பதிவுகள்:
நட்சத்திரங்கள்

திங்கள், 28 நவம்பர், 2016

எஸ்.வி.வி. -2

பால் கணக்கு
எஸ்.வி.வி          

           


"இந்த மாதம் பால் கணக்கு எவ்வளவு?" என்றேன். பால்காரன் பணத்துக்கு வருவதற்கு முன் எங்களுக்குள் கணக்கைச் சரிப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டுமென்று என் எண்ணம்.

"என்ன கணக்கு! பார்த்துக் கொள்ளுங்களேன். பதின்மூன்றாந் தேதி வரைக்கும் காலையில் மூன்றாழாக்குப் பசும்பால், மூன்றாழாக்கு எருமைப் பால், சாயந்தரம் ஒன்றரை ஆழாக்குப் பசும் பால், இரண்டரை ஆழாக்கு எருமைப் பால், இதில் ஒரு நாள், மாடு உதைத்து விட்டதென்று ஒரு கால்படி போட்டுவிட்டுப் போய் விட்டான்.

"பசும் பால், ஒரு நாள் சினிமாவிற்குப் போனோமே, அன்றையதினம் வந்து பார்த்து விட்டுப் போய் விட்டான், அன்றைக்குப் பால் வாங்கவில்லை. இது போக போன மாசம் அவன் நமக்கு ஏழு ஆழாக்குக் கொடுக்க வேண்டும். கணக்கென்ன, இதுதான் கணக்கு! பதின்மூன்றாந்தேதி வரைக்கும் இந்தக் கணக்கு..."


"ஒவ்வொரு மாதமும் நான் சொல்லுகிறேனோ இல்லையோ? அன்றன்றைக்கு வாங்கினதை ஒரு நோட்டுப் புஸ்தகத்தில் வரிசையாய் எழுதி வை என்று? எழுதி வைத்திருந்தால் சட்டென்று கூட்டிக் கணக்குப் போட்டு விடலாமோ இல்லையோ?"

"எழுதி வைக்கிறதென்ன; நித்தியம் இவ்வளவென்று கணக்காய்த் தானே வாங்குகிறோம்?"

"என்ன கணக்காய் வாங்குகிறாய்? ஒரு நாளைக்கு இரண்டாழாக்குக் குறைச்சல் என்கிறாய்; மற்றொரு நாள் மூன்றாழாக்கு அதிகம் என்கிறாய். உன் கணக்கை, இறந்த போனாரே ராமானுஜம், அவர் திரும்பி வந்தால் கூடப் போட முடியாதே. சரி, என்ன ஆச்சு இப்போ, பதின்மூன்றாந் தேதி வரைக்கும்?"

"அதுதான் சொன்னேனே. காலையில் மூன்றாழாக்குப் பசும் பால், மூன்றாழாக்கு எருமைப்பால். பதின்மூன்று நாளைக்குப் பார்த்துக் கொள்ளுங்களேன். பதின் மூன்று அரை என்ன ஆச்சு? ஆறரை."

"பசும் பாலா, எருமைப் பாலா?"

"பசும் பாலைத் தனியாவும், எருமைப் பாலைத் தனியாயும் சொல்லேன். பசும் பால் ரூபாய்க்கு இரண்டரைப்படி; எருமைப்பால் இரண்டே முக்கால்படி, இரண்டையும் வெவ்வேறாய்க் கணக்குப் போட வேண்டாமா?"

"அப்படித்தான் போடுங்களேன்."

"சரி. பசும் பாலை முன்னாடி சொல், காலையில் எவ்வளவு? சாயந்தரம் எவ்வளவு?"

"அதுதான் சொன்னேனே. காலையில் மூன்றாழாக்கு. சாயந்தரம் ஒன்றரை ஆழாக்கு. மொத்தம் நாலரை ஆழாக்கு, பதின்மூன்று நாளைக்கு இதில் சினிமா போன தினத்துக்கு ஒன்றரை ஆழாக்குக் கழித்து விடுங்கள். போன மாதத்தில் ஏழு ஆழாக்கு அவன் நமக்குக் கொடுக்க வேண்டும்..."

"கழிக்கிறதையும் கூட்டுகிறதையும், அப்புறம் பார்க்கலாமே! முன்னே இந்தக் கணக்கு அற்றுப்படியாகட்டுமே, பதின்மூன்று நாலரை யாழாக்கா? பதின்மூன்று நான்கு எழுபத்திரண்டு..."

"பதின்மூன்று நான்கு எழுபத்திரண்டா? கணக்கில் ரொம்பக் கெட்டிக்காரர்! ஐம்பத்திரண்டு."

"ஆமாம். ஆமாம். ஐம்பத்திரண்டு. உன் கணக்குப் போடுவதற்குள் மூளை சிதறிப் போய் விடுகிறது. பதின் மூன்று நான்கு ஐம்பத்திரண்டு...."

"பதின்மூன்று அரை ஆறு."

"ஆறரை."

"ஆமாம். ஆறரை. முன்னே எவ்வளவு கணக்குப் போட்டோம்
ஐம்பத்திரண்டா? ஐம்பத்திரண்டும் ஆறரையும் ஐம்பத்தெட்டரை. ஐம்பத்தெட்டரைக்கு என்ன ஆச்சு?"

"ஐம்பத்தெட்டரையில், சினிமாப் போனோமே. அந்த ஒன்றரை ஆழாக்கைக் கழிக்க வேண்டாமா?"

"ஐம்பத்தெட்டரையில் ஒன்றரை போனால் ஐம்பத்தேழு."

"போன மாசம் ஏழு ஆழாக்கு அவன் நமக்குக் கொடுக்க வேண்டுமே, அதையும் கழித்துவிடுங்கள்;"

"சரி, அதையும் கழித்தால் பதின்மூன்றாம் தேதி வரைக்கும் பசும்பால் ஐம்பது ஆழாக்கு என்று வைத்துக் கொள்ளலாம். இரண்டரைப்படி வீதம் ஐம்பதாழாக்கு என்ன ஆச்சு?"


"ஐம்பதாழாக்கைப் படி ஆக்குங்கள். எண்ணைந்து நாற்பது இல்லை. எண்ணாறு நாற்பத்தெட்டு. எட்டுப் படியும் இரண்டாழாக்கும் ஆகிறது."

"எட்டுப் படியா! ஆறுபடி என்று சொல்லு. படிக்கு எட்டாழாக்கோ இல்லையோ?"

"ஆமாம் ஆறு படி இரண்டாழாக்கு; ஆறே கால்படி என்ன ரூபாயாச்சு? ஐந்து படிக்கு இரண்டு ரூபாய் போச்சு. அப்புறம் ஒன்றே கால் படி இருக்கிறது. அதற்கு அரை ரூபாய். மொத்தம் இரண்டரை ரூபாய்."

"அது அப்படி இருக்கட்டும். எருமைப்பால் கணக்கு சொல்லு."

"எருமைப் பால் கணக்கென்ன, தெரிந்து தானே இருக்கிறது? காலையில் மூன்றாழாக்கு. ராத்திரி இரண்டரை ஆழாக்கு, இதில் இரண்டு நாள் பால் ஒரே தண்ணீராயிருந்தது. நான் அதைக் கணக்கில் வைத்துக் கொள்ள மாட்டேன், அதற்குப் பணம கிடையாது என்று அப்பொழுதே அவன் கிட்டச் சொல்லியிருக்கிறேன்; அதைக் கழித்துவிட வேண்டும்."

"அது கிடக்கட்டும். கணக்கைச் சொல். எருமைப்பால் எவ்வளவு என்றாய்?"

"காலையில் மூன்றாழாக்கு, ராத்திரியில் இரண்டாழாக்கு; இல்லை, இரண்டரை."

"இரண்டையும் சேர்த்துச் சொல்லித் தொலையேன், நித்தியம் எவ்வளவென்று."

"சேர்த்துத்தான் பாருங்களேன், மூன்றும் இரண்டரையும் ஐந்தரை."

"பதின்மூன்று நாளைக்கு என்ன ஆச்சு! பதின் மூன்றைந்து அறுபத்தைந்தும்; பதின்மூன்றரை ஆறரை. அறுபத்தைந்தும் ஆறரையும் எழுபத்தொன்றரை."

"அதில் இரண்டு நாள் தண்ணிப் பாலுக்குக் கழித்து விடுங்கள்."

"நீ கழித்துவிடச் சொன்னால் அவன் ஒத்துக் கொள்ளுவான் போல் இருக்கிறது?"

"ஒத்துக் கொள்ளாமல் என்ன பண்ணுகிறது? அன்றைக்கேதான் அந்தப் பாலுக்குக் காசு கொடுக்க மாட்டேன் என்று கண்டிப்பாய்ச் சொல்லி இருக்கிறேன்."

"இருக்கட்டும்; மேலே சொல்."

"இருக்கட்டுமாவது! அந்தப் பாலுக்குக் கண்டிப்பாய்க் காசு கொடுக்கக் கூடாது. நீங்கள் இப்படிக் கொடுத்துக் கொடுத்துத்தான் அவன் வசம் கண்டிருக்கிறான். இன்றைக்குக் கொடுத்து விட்டீர்களானால் நாளை முதல் அடத்துக்கே தண்ணீர்ப் பால்தான் கொண்டு வந்து கொடுப்பான்."

"சரி.. சரி... ஆகட்டும்; அதைக் கடைசியில் கழித்துக் கொள்ளலாம். மொத்தம் எத்தனை படி எருமைப் பாலென்றோம்? எழுபத்து நாலைரை ஆழாக்கா?"

"எழுபத்து நாலரையாவது? எழுபத்து ஒன்றரை என்று சொல்லவில்லை?"

"எப்படி எழுபத்தொன்றரை?"

"பதின்மூன்று நாளைக்கு ஐந்தரை ஆழாக்கு வீதம் கணக்குப் போட்டீர்களே?"

"ஆமாம். எழுபத்தொன்றரை, எத்தனை ரூபாய் ஆச்சு? ரூபாய்க்கு இரண்டே முக்கால் படி. எழுபத் தொண்ணரைக்கு..."

"ஆழாக்கையெல்லாம் முன்னே படி ஆக்குங்கள். எண்ணொம்பது எழுபத்திரண்டு அரையாழாக்குக் குறைய ஒன்பது படி."

"அரையாழாக்கு இருக்கட்டும். ஒன்பது படிக்குக் கணக்குப் பார்ப்போம். மூவிரண்டாறு, மும்முக்கால் இரண்டே கால், எட்டேகால் படி போனால் முக்கால்படி மிச்சம்."

"அதில் அந்த அரை ஆழாக்கைக் கழிக்க வேண்டாமா? முக்கால் படிக்கு ஆறு ஆழாக்கு. அரை ஆழாக்குப் போனால் ஐந்தரை ஆழாக்கு. மூன்று ரூபாயும் ஐந்தரை ஆழாக்கும். பசும் பால் எவ்வளவு கணக்குப் போட்டோம்? இரண்டு ரூபாயா? இரண்டரையா?"

"இரண்டரை. மூன்றும் இரண்டரையும் ஐந்தரை ரூபாய். மேலே ஐந்தரையாழாக்கு இருக்கிறது. ஒன்று விட்டு விட்டோமே! மாடு உதைத்த அன்று கால்படிதானே கொடுத்தான்? அன்றைய கணக்குக் கழிக்க வேண்டாமா?"

"மேலே ஐந்தரை ஆழாக்கு இருக்கிறதே, அதில் கழித்துக் கொண்டால் போச்சு."

"அதில் என்னமாய்க் கழிக்கிறது? அது பசும்பால், இது எருமைப்பால்."

"நன்றாய்ப் பால் வாங்கினாய்! பால் வாங்கினாளாம் பால்!"

"உங்களுக்கென்னத்துக்கு அவ்வளவு கோபம் வருகிறது? பால் வாங்க வேண்டாமென்றால் நிறுத்தி விடுகிறேன். எனக்காகத்தான் இப்போ பால் வாங்குகிறேனா என்ன?"

"யார் பால் வாங்க வேண்டாம் என்றார்கள்? பால் வாங்கினால் கணக்கெழுதி வைக்கக் கூடாதோ?"

"கணக்கு எழுதினால் என்ன, வாயால் சொன்னால் என்ன? எல்லாம் கணக்குத்தானே? கணக்கு எங்கேயாவது ஓடியா போய் விடும்?"

"எங்கேயும் ஓடாது. பதினாலாம் தேதி பிடித்து என்ன கணக்கு?"

"செல்லம்மாளும் அவள் புருஷனும் இங்கே ஐந்து தினங்கள் இருந்தார்களா, ஆறு தினங்கள் இருந்தார்களா? அவர்களிருந்த வரைக்கும் காலையில் கால்படி எருமைப் பால் அதிகம், ராத்திரி ஒன்றரை ஆழாக்குப் பசும் பால் அதிகம்."

"எத்தனை நாளைக்கு?"

"அவர்கள் எத்தனை தினங்கள் இருந்தார்களோ, பார்த்துக் கொள்ளுங்களேன்."

"நான் பார்த்துப் பாழாய்ப் போனேன்."

"அப்புறம் குஞ்சு ஜுரமாய்ப் படுத்துக் கொண்டிருக்கும் பொழுது கஞ்சிக்கு என்றும், காடிக்கு என்றும் நித்தியம் ஆழாக்குப் பால் அதிகமாய் வாங்கிக் கொண்டிருந்தேன். அவன் நாலு நாள் ஜுரமாய்ப் படுத்துக் கொண்டிருக்கவில்லையா? அது போனால் நாம் மூன்று நாட்கள் ஊருக்குப் போயிருந்தோமே, அப்பொழுது பால் வாங்கவில்லை. மூன்றாம் நாள் சாயங்காலந்தானே வந்தோம்? அதற்கு முன்னமேயே மங்களத்தினிடம் சொல்லிவிட்டுப் போயிருந்தேன். 'நாங்கள் சாயந்திரமே வந்து விடுவோம். பால் வாங்கி வை' என்று. அவள் முக்கால்படி பால் வாங்கி வைத்திருந்தாள். எல்லாம் என்ன கணக்காச்சு, பாருங்களேன்?"

"பார்த்துக் குட்டிச் சுவராய்ப் போனேன். பால்காரன் கணக்கெழுதி வைத்திருப்பானோ இல்லையோ?"

"எழுதித்தான் வைத்திருப்பான். அவன் எழுதி வைத்திருந்தால் நாம் கணக்குப் பார்க்க வேண்டியதில்லையா, என்ன? அவன் சொன்னபடியே கொடுத்து விடுகிறதா?"

"இல்லை. இல்லை. நம்ம கணக்குப் படியே கொடுக்கலாம். முன்னே நம்ம கணக்கு அற்றுபடியாகட்டும்."

"அற்றுப்படிக்கு என்ன இருக்கிறது? நான் சொன்ன கணக்குத்தான்."

"நீ சொன்ன கணக்குத்தான். இப்போ எனக்கு ஒழிவில்லை. சாயந்தரம் வரும்பொழுது என் ஆபீசில் ஒரு அகெளண்டன்ட் இருக்கிறான். கணக்கில் நல்ல கெட்டிக்காரன். அவனை அழைத்துக் கொண்டு வருகிறேன். கணக்கையெல்லாம் பார்த்துவிடலாம்" என்று ஆபீசுக்குப் போய் விட்டேன்.


[ நன்றி : appusami.com ] 

தொடர்புள்ள பதிவுகள்:


எஸ்.வி.வி.