வெள்ளி, 9 டிசம்பர், 2016

ராஜாஜி - 5

வானொலி உரை : நான்தான் ராஜாஜி


[ நன்றி: சுதேசமித்திரன் ] 


டிசம்பர் 10. ராஜாஜியின் பிறந்தநாள்.
===


முதலில், 
சென்னையில் அகில இந்திய ரேடியோ ஸ்தாபனத்தை 16-6-38-ல் திறந்து வைக்கும்போது பிரதம மந்திரி ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியார் செய்த பிரசங்கத்திலிருந்து ஒரு பகுதி:

யவுசெய்து கேளுங்கள்!
வெகு தூரத்திலிருந்து பேசுகிறேன். என்னவானாலும் யந்திரம் யந்திரம்தான். ஆகையால், குரலிலிருந்து பேசுகிறவன் யார் என்று சொல்லுவது உங்களுக்குக் கஷ்டம். நான்தான் 'ராஜாஜி'. முந்தியே டைரக்டர்வாள் சொன்னார்களல்லவா?

'சர்வ இந்திய ரேடியோ வீச்சு' ஸ்தாபனத்தில் சென்னை ஆகாசவாணி மண்டபத்திலிருந்து பேசுகிறேன். இந்த ஸ்தாபனத்தின் சென்னைக் கிளையைத் திறந்து வைக்கும் கௌரவத்தை எனக்குத் தந்திருக்கிறார்கள்.

நான் பழைய தினுசு மனிதன். வைதீக மனப்பான்மை. புது நாகரிகங்கள் அவ்வளவாகப் பிடிக்காது. அநாகரிகங்களுக்குள் பழையனவே தேவலை என்று எண்ணுகிறவன். ஜனங்களுக்குப் பேசும் படங்களாலும், யந்திரப் பாட்டாலும் உபதேசங்கள் அவ்வளவாக ஏறாது என்பது என் எண்ணம். ஆயினும், சரியான முறையில் உபயோகித்தால் எதுவும் ஓரளவு பயன்படும் என்பது ஒருபுறமிருந்துகொண்டிருக்கிறது. ஆகையால், இந்த ரேடியோவுக்கு என்னுடைய பூரண ஆசி தருகிறேன்.
====

இரண்டாவதாக,
சோ.சிவபாதசுந்தரத்தின் “ ஒலிபரப்புக் கலை” என்று நூலுக்கு ராஜாஜி எழுதிய முன்னுரை . ( அவர் நூலிலிருந்து ஒரு கட்டுரையை நான் இங்கே இட்டுள்ளேன்.அதில்  மேற்காணும் ராஜாஜியின் “வானொலி” உரையைப் பற்றி  அந்தக் கட்டுரையில் எழுதியுள்ளார் ஆசிரியர்.)

ராஜாஜியின் ஆசிகள் 
ஆசிரியர் தம் புஸ்தகத்தின் ‘ஒத்திகை’ அச்சுப் பிரதி ஒன்று எனக்கு அனுப்பித் தம் நூலுக்கு நான் ஒரு முன்னுரை எழுதி உதவவேண்டுமென்று கடிதத்தில் கேட்டிருந்தார். சிலகாலமாக நான் ஒருவர் கஷ்டப்பட்டு எழுதிய நூலுக்கு மற்றொருவர் விஷயம் ஒன்றும் தெரியாமல், யாதொரு தகுதியுமில்லாமல், ஏதோ காரணங்களால் ‘முன்னுக்கு’ வந்து விட்டவர், எல்லாம் தெரிந்தவரைப் போல் முன்னுரை எழுதிவரும் வழக்கம் தவறு என்கிற முடிவுக்கு வந்தேன். இதனால் பல நூலாசிரியர்களுக்கு இல்லை, இல்லை, முடியாது என்று சொல்லி வந்தேன். சிலர் இந்த ஏமாற்றத்தால் என் பேரில் கோபமும் கொண்டதுண்டு! திரு. சிவபாத சுந்தரத்துக்கும் இப்படியே இல்லையென்று எழுதிவிட வேண்டும் என்பதாக நிச்சயித்துக் கொண்டே, புஸ்தகத்தைப் பார்க்கலாம் எப்படியிருக்கிறதோ என்று ஏடுகளைத் திருப்பினேன்.

முதலில் நிறையப் படங்கள் இருந்ததைப் பார்த்தேன். அது எனக்குப்பிடிக்கவில்லை. அநாவசியமான, பொருளற்ற, சாம்பிரதாயிகப் படங்கள். நூலின் ஏடுகளைப் புரட்டினேன்.

ஒர் இடத்தில் படித்தபோது, “இதுவென்ன? என்னுடைய எழுத்துப் போலிருக்கிறதே!” என்று சரியாகத் திரும்பப் படித்தேன். மேலும் கீழும் எழுதியிருப்பதையும் படித்தேன். நான் பதினாறு வருஷங்களுக்கு முன் பேசிய ஒரு பேச்சை எடுத்து ஆசிரியர் கையாண்டிருப்பதாகத் தெரிந்து கொண்டேன். 1938-ஆம் வருஷத்தில் நான் பேசிய பேச்சில் சொன்ன அபிப்பிராயம் இப்போதும் என் அபிப்பிராயமாகவே இருப்பதை நினைத்து என்னைப் பற்றி நானே மனத்தில் சிரித்துக் கொண்டேன். நான் ஒரு பிடிவாதக்காரன் என்று ஜனங்கள் எண்ணுவதற்குக் காரணமிருக்கிறது என்று எனக்குள் சொல்லிக் கொண்டு மேலும் படித்துக்கொண்டே போனேன். நூலின் தமிழும் அழகும் என்னைக் கவர்ந்தது. படித்துக்கொண்டே போனேன். எல்லாவற்றுக்கும் மேலே ஆசிரியரின் நுட்பமான அறிவு காந்தம்போல் என்னை இழுத்துக் கொண்டே சென்றது.

கடைசியில் “அநுபந்தம்” என்கிற தலைப்பில் ஒரு நாடகமும் கண்டேன். எனக்குத் தமிழில் எழுதிய நாடகம் என்றால் பயம். நான் கண்ட அச்சிட்ட தமிழ் நாடகங்களில், எங்கும் நான் பார்த்திராத ஆண்களும் பெண்களும் பாத்திரங்களாக வந்து, எங்கும் நான் கேட்டிராத பேச்சுப் பேசுகிறார்கள். வாழ்க்கையில் நமக்கு ஏற்படாத சந்தர்ப்பங்களை வைத்துக் கதைகள் ஓடுகின்றன. நம்முடைய தற்காலக் கலைப்பொருள் எல்லாம் நம் நாட்டில் காணப்படாத ஒரு மன்மத மயமாக விருக்கிறது. காதலே சுகமே, காதலே கஷ்டம். வேறொரு சக்தியும் சங்கதியும் வாழ்க்கையில் இல்லை. இரண்டு ஆண், ஒரு பெண், இவர்கள் தரும சங்கடத்தில் சிக்கியலைவது, ஒன்று கூடி மெய்ம்மறந்து, மகிழ்ச்சியடைவது, பிரிந்து நரகவேதனை யடைவது, அதிசயோத்திமய சம்பாஷணைகள் நடத்துவது, என்றும் நடவாத நிகழ்ச்சிகள் நடைபெறுவது - இவற்றைப் பார்த்துத் தமிழ் நாடக நூல் என்றால் எனக்கு பயம். நாடகத்தை என்னத்துக்கு நூலில் சேர்த்தார் என்று மனத்தில் ஒரு குறையோடு பாத்திரங்கள் அட்டவணையை முதலில் பார்த்தேன். ‘ஒகோ! கொஞ்சம் ரஸமிருக்கும்” என்று எண்ணி நாடகத்தையும் படித்தேன். கொஞ்சதூரம் போனதே சிறந்ததொரு சிரிப்பு நாடகம் என்பதைக் கண்டேன். நூலைவிட அநுபந்தமே முக்கியமாகவும் தோன்றிற்று! இந்தச் சுய சரிதத்தை நிறுத்தி விட்டு விஷயத்துக்கு வருகிறேன்.

மிக நல்ல புஸ்தகம். புதியதொரு கலை. புதியதொரு தொழில், புதியதோர் உலகம் இந்த வானொலி. இதில் புகுந்து பாடுபடும் தமிழர்களுக்குச் சொல்ல வேண்டியதை யெல்லாம் மிக நன்றாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர், இந்தப் புஸ்தகத்தில். ஆனால் ஒன்று: ஏடுகள் படித்து விட்டா சாமர்த்தியம் வரப்போகிறது? இல்லை. சிலர் இந்தக் கலைக்கு வேண்டிய சாமர்த்தியத்தை எப்படியோ அடைந்திருக்கிறார்கள்;;. பிறப்புடன் வந்த சம்பத்து என்று சொல்வதற்கில்லை. உலக அநுபவமும் தகுந்தபடி வாய்ந்து, பிறப்புடன் வந்த சக்தியை மலரச் செய்து அந்த நிலை அடைந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். அத்தகையவர்களைச் சரியாகக் கண்டுபிடித்து அவர்களை அன்புடன் காத்துவரும் தகைமை வானொலி நிருவாகஸ்தர்களுக்கு இருக்க வேண்டும்.

ரேடியோவில் சேர்ந்து உழைப்பவர்களுக்கு அந்த வேலை செய்வதில் உள்ளத்தில் மகிழ்ச்சி ஊறவேண்டும். எடுத்த காரியத்தைத் திறமையாகச் செய்து முடிக்கும் போது உள்ளத்தில் திருப்தி பொங்க வேண்டும் என்று ஆசிரியர் சரியாகச் சொல்லியிருக்கிறார். அத்தகையவர்கள் தங்கள் வாழ்க்கையை இந்தப் புதுத் தெய்வத்துக்காக அர்ப்பணம் செய்யலாம். நிலையத்து உத்தியோகஸ்தர்கள், பேச்சாளர், சங்கீதக்காரர், ஆசிரியர்கள், நடிகர்கள் எல்லோருக்குமே நூல் மிகப் பயன்படும். இந்த நூலுக்குப் பெயர் “ரேடியோ வாத்தியார்” என்றே வைத்திருக்கலாம்.

சென்னை,
13-11-54
[ நன்றி:   ” ஒலிபரப்புக் கலை” நூல் ,    http://noolaham.net/project/04/340/340.htm ; விகடன் ] 

தொடர்புள்ள பதிவுகள்
ராஜாஜி

சோ.சிவபாதசுந்தரம்

10 facts about history of Indian Radio!

2 கருத்துகள்:

UK Sharma சொன்னது…

ஒலிபரப்புக் கலை நூலில் படித்தது தான். என்றாலும் மீண்டும் ஒரு தடவை இங்கு படிக்க முடிந்தது மகிழ்ச்சியே.

Pas S. Pasupathy சொன்னது…

@UK Sharma நன்றி!