புதன், 1 பிப்ரவரி, 2017

மீனாட்சிசுந்தரம் பிள்ளை - 2

முதற் காட்சி
உ.வே.சாமிநாதையர்

பிப்ரவரி 1. மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் நினைவு தினம்.


உ.வே.சா அவருடைய ஆசிரியரை முதன் முதலில் சந்தித்த போது நடந்ததை விவரிக்கிறார்.
====

அப்புலவர் பெருமான் வரும்போதே அவருடைய தோற்றம் என்
கண்ணைக் கவர்ந்தது. ஒரு யானை மெல்ல அசைந்து நடந்து வருவதைப்போல் அவர் வந்தார். நல்ல வளர்ச்சி யடைந்த தோற்றமும், இளந் தொந்தியும், முழங்கால் வரையில் நீண்ட கைகளும், பரந்த நெற்றியும், பின் புறத்துள்ள சிறிய குடுமியும், இடையில் உடுத்திருந்த தூய வெள்ளை ஆடையும் அவரை ஒரு பரம்பரைச் செல்வரென்று தோற்றச் செய்தன. ஆயினும் அவர் முகத்திலே செல்வர்களுக்குள்ள பூரிப்பு இல்லை; ஆழ்ந்து பரந்த சமுத்திரம் அலையடங்கி நிற்பது போன்ற அமைதியே தோற்றியது. கண்களில் எதையும் ஊடுருவிப் பார்க்கும் பார்வை இல்லை; அலக்ஷியமான பார்வை இல்லை; தம் முன்னே உள்ள பொருள்களில் மெல்லமெல்லக் குளிர்ச்சியோடு செல்லும் பார்வைதான் இருந்தது.

அவருடைய நடையில் ஓர் அமைதியும், வாழ்க்கையில் புண்பட்டுப்
பண்பட்ட தளர்ச்சியும் இருந்தன. அவருடைய தோற்றத்தில் உத்ஸாகம் இல்லை; சோம்பலும் இல்லை. படபடப்பில்லை; சோர்வும் இல்லை. அவர் மார்பிலே ருத்திராட்ச கண்டி விளங்கியது.

பல காலமாகத் தவம் புரிந்து ஒரு தெய்வ தரிசனத்திற்குக் காத்திருக்கும்
உபாஸகனைப்போல நான் இருந்தேன்; அவனுக்குக் காட்சியளிக்கும் அத்
தெய்வம்போல அவர் வந்தார். என் கண்கள் அவரிடத்தே சென்றன. என்
மனத்தில் உத்ஸாகம் பொங்கி அலை எறிந்தது. அதன் விளைவாக ஆனந்தக் கண்ணீர் துளித்தது அத்துளி இடையிடையே அப்புலவர் பிரானுடைய தோற்றத்தை மறைத்தது. சுற்றிலுமுள்ள எல்லாவற்றையும் விலக்கி விட்டு அவரது திருமேனியில் உலவிய என் கண்கள் அவர் முகத்திலே பதிந்து விட்டன.

வந்த காரியம் என்ன?

அவர் வந்தவுடன் நின்று கொண்டிருந்த எங்களை உட்காரும்படி
சொன்னார். அந்தத் தொனியிலும் அமைதியைத்தான் நான் உணர்ந்தேன்.
எல்லாம் சாந்தமயமாக இருந்தன. அவரும் அமர்ந்தார்; என் தகப்பனாரைப்
பார்த்து, “நீங்கள் யார்? வந்த காரியம் என்ன?” என்று விசாரித்தனர்;
அவ்வார்த்தைகள் அன்புடன் கலந்து வெளிவந்தன.

“நாங்கள் பாபநாசத்துக்குப் பக்கத்திலுள்ள உத்தமதான புரத்திலிருந்து
வருகிறோம். தங்களைப் பார்க்கத்தான் வந்தோம். இவன் என் குமாரன். தமிழ் படித்து வருகிறான். சிலபேரிடம் பாடம் கேட்டிருக்கிறான். சங்கீதமும் அப்பியாசம் செய்திருக்கிறான். தங்களிடம் பாடம் கேட்க வேண்டுமென்று
மிகுந்த ஆவல் கொண்டிருக்கிறான். தமிழைத் தவிர வேறு ஒன்றிலும் இவன் புத்தி செல்லவில்லை. எப்போதும் தங்கள் ஸ்மரணையாகவே இருக்கிறான். ஆகையால் தங்களிடம் இவனை அடைக்கலமாக ஒப்பித்து விட்டுப் போக வந்தேன்.”

“உங்கள் பெயர் என்ன?”

“என் பெயர் வேங்கடஸுப்பன் என்பர். இவன் பெயர் வேங்கடராமன்”
என்றார் என் தந்தையார்.

“வேங்கடஸுப்பனென்பது நல்ல பெயர். வேங்கட ஸுப்ர
மணியனென்பதன் மரூஉ அது. திருவேங்கட மலையில் முருகக் கடவுள்
கோயில் கொண்டிருக்கிறாரென்பதற்கு இந்த வழக்கு ஓர் ஆதாரம்.”

அவர் பேச்சிலே ஒரு தனி இனிமையை நான் உணர்ந்தேன்.
“சாதாரணமாகப் பேசும்போதே அருமையான விஷயம் வெளி வருகின்றதே!” என்று நான் ஆச்சரியம் அடைந்தேன்.

பிறகு பிள்ளையவர்கள் என்னைப் பார்த்து, “நீர் யார் யாரிடம் என்ன
என்ன நூல்களைப் பாடம் கேட்டிருக்கிறீர்?” என்று வினவினர். நான் மெல்ல என் வரலாற்றைச் சொன்னேன்; சடகோபையங்காரிடம் படித்தது முதல் செங்கணம் விருத்தாசல ரெட்டியாரிடம் காரிகைப் பாடம் கேட்டது வரையில் விரிவாக எடுத்துரைத்தேன்.

“இவருக்கு இசையில் எந்த மட்டும் பயிற்சி உண்டு?” என்று என்
தந்தையாரை நோக்கி அவர் கேட்டார். சங்கீதத்தை இசை யென்று அவர்
சொல்லியதை நான் கவனித்தேன். தாம் எனக்குச் சங்கீதத்தை முறையாகக்
கற்பித்து வந்ததை என் தந்தையார் தெரிவித்தார். அப்பால் தாம் கனம் கிருஷ்ணையரிடம் குருகுலவாசம் செய்து சங்கீதம் கற்றதையும் சொன்னார்.

“இந்த ஊரிலுள்ள கோபாலகிருஷ்ண பாரதியாரைத் தெரியுமோ?” என்று
பிள்ளையவர்கள் கேட்டனர்.

“நன்றாகத் தெரியும். அவரும் கனம் கிருஷ்ணையரிடம் சில காலம்
அப்பியாசம் செய்ததுண்டு.”

பரீட்சை

இவ்வாறு எங்கள் வரலாற்றை அறிந்துகொண்ட பின்பு அக் கவிஞர்
பெருமான் என்னைப் பார்த்து, “நைடதத்தில் ஏதாவது ஒரு பாடலைச்
சொல்லும்” என்றார். அந்த மகா வித்துவானுக்கு முன், காட்டுப்
பிராந்தியங்களிலே தமிழறிவைச் சேகரித்துக் கொண்ட நான் எவ்வளவு
சிறியவன்! எனக்குப் பாடல் சொல்லத் தைரியம் உண்டாகவில்லை. மனம்
நடுங்கியது. உடல் பதறியது; வேர்வை உண்டாயிற்று. நாக்கு உள்ளே இழுத்தது.

இரண்டு மூன்று நிமிஷங்கள் இவ்வாறு நான் தடுமாறினேன். அப்பால் ஒருவாறு நைடதத்திலுள்ள, “தழைவிரி கடுக்கை மாலை” என்னும் காப்புச் செய்யுளைக் கல்யாணி ராகத்தில் மெல்லச் சொன்னேன்; முதலடியை,

தழைவிரி கடுக்கை மாலைத் தனிமுதற் சடையிற் சூடும் #

என்று நான் சொன்னேன். பிள்ளையவர்கள் இடைமறித்து, “தனி முதல்
சடையிற்சூடும்” என்று சொல்லித் திருத்தினார். பல காலமாகப் பிழைபட்ட
பாடத்தை உருவேற்றி இருந்த எனக்கு அந்தப் பாடமே முன் வந்தது. என்
நடுக்கம் அதிகமாயிற்று. ஆனாலும் பாடல் முழுவதையும் சொல்லி முடித்தேன்.

நான் அதைச் சொல்லும்போதே அவர் முகத்தையும் கவனித்தேன். “நான்
சொல்வதில் அவருக்கு வெறுப்பு உண்டாகுமோ” என்று பயந்தேன். நல்ல
வேளையாக அவர் முகத்தில் அத்தகைய குறிப்பு ஒன்றும் தோற்றவில்லை.
எனக்கும் சிறிது ஊக்கம் உண்டாயிற்று.

“இன்னும் ஒரு பாடல் சொல்லும்” என்றார் அவர். நான் நைடதத்தின்
சிறப்புப் பாயிரமாகிய, “நிலவு பொழி தனிக்கவிகை% என்னும் பாடலைச்
சாவேரி ராகத்தில் சொன்னேன். அந்த இரண்டு செய்யுட்களையும் மீட்டும்
சொல்லிப் பொருள் கூறும்படி கூறினார். நான் பாடல்களைச் சொல்லிப்
பொருள் கூறத் தொடங்குகையில் நாக்குத் தழுதழுத்தது.
“தைரியமாகச் சொல்லும்” என்று அக்கவிஞர்பிரான் கூறினார். நான்
இரண்டு செய்யுட்களுக்கும் பொருள் கூறி முடித்தேன்.

“நிகண்டு பாடம் உண்டோ?” என்று அவர் கேட்டார். நான்
“பன்னிரண்டு தொகுதியும் பாடம் உண்டு” என்று கூறவே சில சில
பாடங்களைச் சொல்லச் சொல்லிக் கேட்டு விட்டு, “நிகண்டை மனனம்
செய்வது நல்லதே. இக்காலத்தில் அதை நெட்டுருப் பண்ணும் வழக்கமே போய் விட்டது. சொன்னால் யாரும் கேட்பதில்லை” என்றார்.

சந்தேகப் பேச்சு

அப்போது என் தந்தையார், “இவனைத் தங்களிடம் ஒப்பித்து
விட்டேன். எப்போது இவன் பாடம் கேட்க வரலாம்?” என்று கேட்டார்.

அப்புலவர் பெருமான் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். அவர்
எதையோ யோசிக்கிறார் என்று எண்ணினேன்; “ஒரு கால் நம்மை
ஏற்றுக்கொள்ள மாட்டாரோ?” என்று அஞ்சினேன். அவர் மெல்லப் பேசத்
தொடங்கினார்.

“இங்கே படிப்பதற்கு அடிக்கடி யாரேனும் வந்த வண்ணமாக
இருக்கிறார்கள். வரும்போது பணிவாக நடந்து கொள்ளுகிறார்கள். சில காலம் படித்தும் வருகிறார்கள். படித்துத் தமிழில் நல்ல உணர்ச்சி உண்டாகும் சமயத்திலே போய் விடுகிறார்கள். சிலர் சொல்லாமலே பிரிந்து விடுகிறார்கள். சிலர் ‘ஊர் போய்ச் சில தினங்களில் வருகிறோம்’ என்று சொல்லிப் போய்த் திரும்புவதே இல்லை. சில காலம் இருந்து படிப்பதாகப் பாவனை செய்து விட்டுப் பிரிந்து சென்று என்னிடம் படித்ததாகச் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். இப்படி அரை குறையாகப் படிப்பதால் அவர்களுக்கு ஒரு பயனும் உண்டாவதில்லை; நமக்கும் திருப்தி ஏற்படுவதில்லை. இத்தகையவர்கள் இயல்பைக் கண்டு கண்டு மனம் சலித்துவிட்டது. யாராவது பாடம் கேட்பதாக வந்தால் யோசனை செய்துதான் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது.”

அவர் பேச்சிலே அன்பும் மென்மையும் இருந்தன. ஆனால் அவர்
கருத்து இன்னதென்று தெளிவாக விளங்கவில்லை. என் உள்ளத்திலே
அப்பேச்சு மிகுந்த சந்தேகத்தை உண்டாக்கி விட்டது. அவர் தம்மிடம் வந்து
சில காலம் இருந்து பிரிந்து போன மாணாக்கர்கள் சிலர் வரலாற்றையும்
சொன்னார். “இந்த விஷயங்களை யெல்லாம் சொல்வதன் கருத்து என்ன?
நம்மை ஏற்றுக் கொள்ள விருப்பமில்லை என் பதைக் குறிப்பாகத் தெரிவிக்கிறார்களோ?  அப்படி யிருந்தால் இவ்வளவு பிரியமாகப் பேசிக் கொண்டிருக்க மாட்டார்களே” என்று நான் மயங்கினேன்.

தவம் பலித்தது

என் தந்தையார் தைரியத்தை இழவாமல், “இவன் அவ்வாறெல்லாம்
இருக்க மாட்டான். இவனுக்குப் படிப்பதைத் தவிர வேறு வேலை இல்லை.
தங்களிடம் எவ்வளவு காலம் இருக்க வேண்டுமானாலும் இருப்பான்.
தங்களுடைய உத்தரவு இல்லாமல் இவன் எங்கும் செல்லமாட்டான். இதை நான் உறுதியாகச் சொல்லுகிறேன், இதற்கு முன் இவனுக்குப் பாடம்
சொன்னவர்களெல்லாம் இவனைத் தங்களிடமே கொண்டு வந்து சேர்க்கும்படி வற்புறுத்தினார்கள். பல காலமாக யோசித்து அதிக ஆவலுடன் தங்களிடம் அடைக்கலம் புக இவன் வந்திருக்கிறான். இவனுடைய ஏக்கத்தைக் கண்டு நான் தாமதம் செய்யாமல் இங்கே அழைத்து வந்தேன். தங்களிடம் ஒப்பித்து விட்டேன். இனிமேல் இவன் விஷயத்தில் எனக்கு யாதோர் உரிமையும் இல்லை” என்று கூறினார். அப்படிக் கூறும்போது அவர் உணர்ச்சி மேலே பேசவொட்டாமல் தொண்டையை அடைத்தது. நானும் ஏதேதோ அப்போது
சொன்னேன்; வேண்டிக் கொண்டேன்; என் வாய் குழறியது; கண் கலங்கியது; முகம் ஒளி யிழந்தது.

அங்கிருந்தவர்கள் என் தந்தையார் வேண்டுகோளையும் எனது
பரிவையும் உணர்ந்து இரங்கி, “இந்தப் பிள்ளை இருந்து நன்றாகப்
படிப்பாரென்றே தெரிகிறது. தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று
கூறினார்கள்.

அக் கவிஞர் பிரானது முகம் மலர்ந்தது. ஒருவிதமான உறுதிக்கு அவர்
வந்துவிட்டாரென்பதையும், அத்தீர்மானம் எனக்கு அனுகூலமாகத்தான்
இருக்குமென்பதையும் அந்த முகமலர்ச்சி விளக்கியது. பிள்ளையவர்கள்: “திருவாவடுதுறையிலும் பட்டீச்சுரத்திலும் நான் தங்கும் காலங்களில் இவருடைய ஆகார விஷயத்தில் ஒரு குறையும் நேராமல்
பார்த்துக் கொள்ளலாம். சைவராக இருந்தால் ஒரு கவலையும் இராது; என்
வீட்டிலே சாப்பிடலாம். இந்த ஊரில் இவர் ஆகார விஷயத்தில் ஒன்றும்
செய்ய இயலாத நிலையில் இருக்கிறேன்; அது பற்றி வருந்துகிறேன்.”

எந்தையார்: “அப்படியானால் இவ்வூரில் இருக்கும் வரையில் இவன்
ஆகாரச் செலவிற்கு வேண்டிய பணத்தை எப்படியாவது முயன்று அனுப்பி
விடுகிறேன். இவனைத் தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.”

பிள்ளையவர்கள்: “சரி. ஒரு நல்ல தினம் பார்த்துப் பாடம் கேட்க
ஆரம்பிக்கலாம்.”

என் தவம் பலித்ததென்று நான் குதூகலித்தேன்.
===

பின் குறிப்பு:

#


அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்.

தழைவிரி கடுக்கை மாலைத் 
  தனிமுதல் சடையிற் சூடுங்
குழவிவெண் டிங்க ளிற்ற 
  கோட்டது குறையென் றெண்ணிப்
புழைநெடுங் கரத்தாற் பற்றிப் 
  பொற்புற விணைத்து நோக்கு,
மழைமதக் களிற்றின் செய்ய 
   மலரடி சென்னி வைப்பாம்.

இதன் பொருள். 
தழை - செழித்த, விரி - மலர்ந்த, கடுக்கை – கொன்றை மலர்களாலாகிய, மாலை - மாலையையுடைய, தனி - ஒப்பில்லாத, முதல் - பரமசிவனால், சடையில் - சடையின்கண், சூடும்  -சூடப்பட்டிருக்கிற, குழவி - குழந்தையாகிய, வெள் - வெள்ளிய, திங்கள் - சந்திரனை, இற்ற - ஒடிந்த, கோட்டது - (தன்) கொம்பினது, குறையென்று - மீதியென்று, எண்ணி - நினைத்து, புழை - தொளையையுடைய, நெடு - நெடிய, கரத்தால் - துதிக்கையினாலே, பற்றி - பிடித்து, பொற்பு - அழகானது, உற - பொருந்த, இணைத்து - (அதில்) பொருத்தி, நோக்கும் - பார்க்கின்ற, மழை - மழை போல்கின்ற, மதம் - மதத்தையுடைய, களிற்றின்-யானைமுகக் கடவுளுடைய, செய்ய மலர் - செந்தாமரை மலர்போலும், அடி - திரு வடிகளை, சென்னி - தலைமேல், வைப்பாம் . (நாம்) சூடிக்கொள்வாம்

கருத்து. சிவன் முடியிலிருக்கும் பிறையைத் தனது ஒடிந்த கொம்புக்கு  இணைபார்க்கும் விநாயகரை நாம் வணங்குவோம்.

%
அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்.

நிலவுபொழி தனிக்கவிகை நிடதர்கோன் புகழ்ச்சரித
  நெடுநீர் வைப்பிற்
புலவர்களி யமுதொழுகு புதுமொழிகூட் டுணத்தமிழாற் 
  புனைதல் செய்தான்,
வலனுயர்த்த வண்ணலஞ்சேல் வான்றொடுபொற் கோட்டிமய 
  வரையிற் றீட்டி,
லர்தலைமா நிலம்புரக்கு மதிவீர ராமனிக 
  லரச லேறே.

 பொருள்:
. இகல் - பகைத்த, அரசர் - மன்னராகிய (யானைகளுக்கு), ஏறு – ஆண்சிங்கம் போல்பவனாகிய, வலன்-வெற்றியினால், உயர்த்த - உயர்த்தப்பட்ட, அண்ணல் - பெருமை பொருந்திய, அம் - அழகிய, சேல் - மீனக்கொடியை, வான் - ஆகாசத்தை, தொடு - தீண்டுகிற, பொன் - பொன்னையுடைய, கோட்டு-சிகரத்தையுடைய, இமயவரையில் - இமயமலையினிடத்தே, தீட்டி - (தனக்குரிய ல்லைக்கல்லாக) எழுதி, அலர் - பரந்த, தலை - இடத்தையுடைய, மா - பெரிய, நிலம் - பூமியை, புரக்கும் - காக்கின்ற, அதிவீரராமன்-அதி வீரராமனென்கிற இயற்பெயரையுடைய (பாண்டியராஜனானவன்), நிலவு - சந்திரிகையை, பொழி - பொழிகின்ற, தனி - ஒப்பற்ற, கவிகை - (முத்துக்)குடையையுடைய, நிடதர்கோன் - ளமஹாராஜனது, புகழ் - புகழையுடைய, சரிதம் - சரித்திரமாகிய, களி - களிப்பைத் தருகின்ற, அமுது - அமிர்தத்தை, நெடுநீர் - கடலாற் சூழப் பட்ட, வைப்பில் - பூமியிலுள்ள, புலவர் - புலவரானவர், கூட்டுண. கொள்ளை கொள்ளும்படியாக, ஒழுகு-(அவ்வமிர்தம்) பெருகுகின்ற, புது மொழி - புதுக்காப்பியத்தை, தமிழால் - தமிழ் மொழியினாலே, புனைதல் செய்தான் - அலங்கரித்துப் பாடினான்.


கருத்து:
 அதிவீரராமபாண்டிய ராஜனானவன் நள மகாராஜனது சரித்திரத்தைத் தமிழில் பாடினான் என்பதாம். 
== 

தொடர்புள்ள பதிவுகள்: 

மீனாட்சிசுந்தரம் பிள்ளை

கருத்துகள் இல்லை: