திங்கள், 3 ஏப்ரல், 2017

682. ஔவை துரைசாமி - 1

உரைவேந்தர் ஔவை துரைசாமி
பி.தயாளன்


 ஏப்ரல் 3. தமிழறிஞர் ஔவை துரைசாமிப் பிள்ளை அவர்களின் நினைவு தினம்.
===
இலக்கிய ஆராய்ச்சித் துறையில் வித்தகராக விளங்கியவர்; ஏடு பார்த்து எழுதுதல், கல்வெட்டுகளைப் படியெடுத்தல், செப்பேடுகளைத் தேடிக் கண்டெடுத்தல் இதுபோன்ற செயல்களால் பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சிப் பேராசிரியராகத் திகழ்ந்தவர்; செந்தமிழில் சீரிய புலமை பெற்று விளங்கியவர்; தமிழ் உணர்வுள்ள நூற்றுக் கணக்கான மாணவர்களை உருவாக்கியவர்; தமிழ் இலக்கிய வரலாறு, பண்டைக் காலத் தமிழ் மன்னர் வரலாறு போன்ற அரிய நூல்களை ஆக்கியவர்; பல்வேறு நூல்களுக்கு "உரைநயம்' கண்டவர்; ஊர்களின் உண்மைப் பெயர்களைத் தக்க சான்றுகளுடன் நிறுவியவர்; நா நலம் மிக்கவர்; ஆங்கிலத்திலும் வடமொழியிலும் புலமை பெற்றவர்; தாம் வாழ்ந்த காலத்திலேயே "சித்தாந்த கலாநிதி', "உரைவேந்தர்', "தமிழ்ச் செம்மல்' எனும் தகைசால் பட்டங்களைப் பெற்றவர். அவர்தான் அருந்தமிழ் வித்தகர் ஔவை சு.துரைசாமி.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஔவையார் குப்பம் என்னும் சிற்றூரில், சுந்தரம்பிள்ளை - சந்திரமதி தம்பதிக்கு மகனாக 1902-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி பிறந்தார். உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர் திண்டிவனத்திலிருந்த அமெரிக்க ஆர்க்காடு நற்பணி உயர்நிலைப் பள்ளியில், பள்ளியிறுதி வகுப்புவரை பயின்று சிறப்பாகத் தேறினார். பின்பு, வேலூர் ஊரீசு கல்லூரியில் இடைநிலை வகுப்பில் சேர்ந்து பயின்றார். ஆனால் குடும்ப வறுமையினால் கல்வியைத் தொடர வாய்ப்பில்லாமல் போயிற்று. குடும்பத்திற்கு உதவ "உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளர்' பணியில் சேர்ந்தார். அப்பணியில் தொடர மனம் இல்லாமல் ஆறே மாதத்தில் அப்பணியிலிருந்து விலகினார். பின்பு தமிழை முறையாகப் பயில வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டார்.

கரந்தைத் தமிழ்ச்சங்கப் பள்ளியில், தமிழ்வேள் உமாமகேசுவரனால் ஆசிரியராகப் பணியமர்த்தப்பட்டார். ஆசிரியப்பணி புரிந்துகொண்டே, தமிழ்ப்பாடம் பயின்று 1930-ம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழக "வித்துவான்' தேர்வில் வெற்றி பெற்றார்.

பின்னர் உலோகாம்பாள் என்பவரை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார்.

""மாணவர் உள்ளத்தில் தனி மதிப்பும் மரியாதையும் தாமகவே தோன்றச் செய்யும் சான்றோராக இருத்தல், தன்னம்பிக்கை, பெருமிதமான தோற்றப் பொலிவு, நகை தவழும் மலர்ந்த முகம், எடுப்பான இனிய குரல், சொல் வளம் ஆகிய பண்புகள் கொண்டவரே நல்லாசிரியர்'' என்பர் நற்றமிழ்ச் சான்றோர். அந்த அடிப்படையில் ஆசிரியராக விளங்கியவர் ஔவை சு.துரைசாமி.

கரந்தையை விட்டு வெளியேறிய பின்னர், 1929-ம் ஆண்டு முதல் 1941-ம் ஆண்டு வரை வட ஆர்க்காடு மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். தமிழ்ப்பொழில், செந்தமிழ்ச்செல்வி, செந்தமிழ் முதலிய இதழ்களில் தமிழ் இலக்கிய, இலக்கண ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினார்.

திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரியில் 1942-ம் ஆண்டு ஆராய்ச்சியாளராகப் பணியில் சேர்ந்தார். பின்னர், 1943-ம் ஆண்டு முதல் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறையில், விரிவுரையாளரானார். எட்டு ஆண்டுகள் தொடர்ந்து அங்கு பணிபுரிந்தார். மதுரை தியாகராசர் கல்லூரியில் 1951-ம் ஆண்டு பேராசிரியராக விளங்கினார்.

மணிமேகலைக் காப்பியத்திற்குப் புத்துரை எழுதும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திடீரென்று இயற்கை எய்திவிட்டார். அதன் பின்னர், "கரந்தை கவியரசு' வேங்கடாசலம் பிள்ளையின் விருப்பத்திற்கிணங்க, மணிமேகலைக் காப்பியத்தின் இறுதி நான்கு காதைகளுக்கும் விளக்கவுரை எழுதிக் கொடுத்தார் ஔவை சு.துரைசாமி.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும்போது, சைவ சமய இலக்கிய வரலாறு, ஞானாமிர்தம் போன்ற அரிய நூல்களை எழுதினார். அந்நூல்கள் பல்கலைக்கழகத்தின் வெளியீடுகளாக வெளியிடப்பட்டன.

""வருங்காலத் திருநாட்டை ஒளிரச் செய்யும் மாணவ நன்மணிகளை உருவாக்கும் பொறுப்பும், கடமையும் ஆசிரியர் பால் உள்ளது'' என்பதை உணர்ந்து ஆசிரியப் பணியை மேற்கொண்டவர் ஔவை சு.துரைசாமி.

தம்மிடம் கல்வி பயிலும் மாணவர்கள் தம்மைப் போலவே கல்வியறிவில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டவராகவும், தாம் அரிதில் கற்றுத் தேர்ந்த தமிழ்ச் செல்வத்தை மாணவர்கட்கு வாரி வழங்கும் கொடையாளராகவும் திகழ்ந்தார்.

புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, திருவருட்பா, சூளாமணி ஆகிய நூல்களுக்கு உரை எழுதியதுடன், ஞானசம்பந்தர் வழங்கிய ஞானவுரை, திருமால் போற்றும் திருப்பதிகவுரை, திருவோத்தூர் தேவாரத் திருப்பதிகவுரை, சிவஞான முனிவர் அருளிச் செய்த சிற்றுரை, யசோத காவியம் மூலமும் உரையும் முதலிய முப்பத்து நான்கு உரை நூல்களைப் படைத்துள்ளார். மேலும், பண்டை நாளையச் சேர மன்னர் வரலாறு, தமிழ் நாவலர் சரிதை, மதுரைக் குமரனார், வரலாற்றுக் காட்சிகள், தெய்வப் புலவர் திருவள்ளுவர், புது நெறித்தமிழ் இலக்கணம், பெருந்தகைப் பெண்டிர், ஊழ்வினை, ஔவைத் தமிழ், தமிழ்த் தாமரை, ஆர்க்காடு முதலிய நூல்களையும் தமிழுக்கு அளித்துள்ளார்.

உரைவேந்தர், தமிழுக்கு சிறப்பாகத் தொண்டு ஆற்றியதற்காக 1964-ம் ஆண்டு மதுரைத் திருவள்ளுவர் கழகம் "பல்துறை முற்றிய புலவர்' என்ற பாராட்டுப் பத்திரம் வாசித்தளித்துச் சிறப்பித்தது. அதே ஆண்டு ஔவை சு.துரைசாமிக்கு மணிவிழா நடத்தப்பட்டது. இராதா தியாகராசனார் தம் ஆசிரியப் பெருந்தகையின் உயர் பண்புகளைப் பாராட்டி "உரைவேந்தர்' எனும் பட்டம் வழங்கி தங்கப் பதக்கம் அளித்தார். 1980-ம் ஆண்டு அன்றைய ஆளுநர் பிரபுதாசு பி.பட்வாரி உரைவேந்தருக்குத் "தமிழ்ப் பேரவைச் செம்மல்' எனும் பட்டம் வழங்கி சிறப்பித்தார்.

தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில், "தமிழ்த்தொண்டு செய்த பெரியார்' எனும் பட்டமும், கேடயமும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

உரைவேந்தரின் மூத்த மகனார் ஒளவை து.நடராஜன் தம் தந்தையைப் போன்று மிகச்சிறந்த சொல்லேருழவர்.

அன்னைத் தமிழுக்காக தமக்கு நினைவு தோன்றிய நாள் முதல் வாழ்நாளின் இறுதி வரையிலும் பாடுபட்ட தமிழ்ச் சான்றோரான, "உரைவேந்தர்' தமது எழுபத்தொன்பதாவது வயதில் 1981-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி இயற்கை எய்தினார். உரைவேந்தரின் தமிழ்த்தொண்டு, உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்.

[ நன்றி : தினமணி ]

தொடர்புள்ள பதிவு:

ஔவை துரைசாமி : விக்கிப்பீடியாக் கட்டுரை

கருத்துகள் இல்லை: