புதன், 10 மே, 2017

720. கார்த்திகேசு சிவத்தம்பி -1

இலங்கை தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி 10
ராஜலட்சுமி சிவலிங்கம்


மே 10. கா.சிவத்தம்பி அவர்களின் பிறந்த தினம்.
=====

தமிழ் இலக்கிய விமர்சகரும், சமூக சிந்தனையாளருமான கார்த்திகேசு சிவத்தம்பி (Karthigesu Sivathamby) பிறந்த தினம் இன்று (மே 10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து :

* இலங்கை, யாழ்ப்பாணம் அருகே உள்ள கரவெட்டி என்னும் ஊரில் பிறந்தவர் (1932). தந்தை பண்டிதராகவும் சைவப் புலவராகவும் விளங்கினார். கரவெட்டி விக்னேஸ்வரா வித்யாலயாவில் பள்ளிக் கல்வி முடித்தவுடன் கொழும்பு சாகிராக் கல்லூரியில் பயின்றார்.

* இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத் தில் 1956-ல் இளங்கலைப்பட்டமும் 1963-ல் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1970-ல் பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் முனைவர் (பண்டைய தமிழ் சமூகத்தில் நாடகக் கலை) பட்டம் பெற்றார். 1978 முதல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 17 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார்.

* பின்னர் இரண்டு ஆண்டுகள் மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆழமான புலமை பெற்றிருந்தார். விமர்சனத் துறையின் முன்னோடியாகவும் இவர் கருதப்படுகிறார். தமிழ் நாடகத்தின் தோற்றம் பற்றி விரிவாக ஆராயும் இவரது ஆராய்ச்சி கட்டுரையில் கிரேக்க நாடகங்களின் தோற்றம், வளர்ச்சி, அதன் தன்மைகளும் விளக்கப்பட்டுள்ளன.

* தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்கள், கல்வெட்டுகள், நாணயங்கள் குறித்தும் ஆய்வுகளையும் மேற்கொண்டார். இவரது ஆய்வு வெறும் ஒன்றிரண்டு அம்சங்களில் மட்டும் இல்லாமல், தரவு தொகுப்பு, வகைப்படுத்துதல், ஆய்வு செய்தல், ஆங்கிலத்தில் எழுதுதல் ஆகிய பல கட்டங்களை கடந்துள்ளது.

* ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட ஆய்வேட்டை பத்தாண்டுகளுக்குப் பிறகு திருத்தங்களுடனும் கூடுதல் செய்திகளுடனும் 1980-ல் புது நூற்றாண்டு புத்தக நிறுவனம் வெளியிட்டது. இந்த நூல் தமிழக அரசின் பரிசை வென்றது. இவரது ஆய்வேடு வெளிவந்த பிறகு நாடகத் துறை பற்றிய விழிப்புணர்வு இலங்கையில் ஏற்பட்டது.

* பாடத்திட்டங்களில் நாடகமும் முதன்மையான இடம் பெற்றது. பல மாணவர்கள் நடிக்கவும் ஆராய்ச்சிக்காகவும் இத்துறைக்கு வந்தனர். தமிழ் இலக்கியம், சமய நூல்கள், சமூகவியல், மானிட வியல், அரசியல், வரலாறு, கவின்கலைகளில் ஆங்கிலத்திலும் தமிழிலும் நல்ல புலமை பெற்றிருந்தார்.

* இலங்கைத் தமிழர் யார், எவர்?, இலக்கணமும் சமூக உறவுகளும், தமிழ்ச் சிறுகதைகள் தோற்றமும் வளர்ச்சியும் ஆகிய நூல்கள் மிகவும் பிரபலமானவை. இவர் 70-க்கும் மேற்பட்ட நூல்களையும், 200 ஆய்வுக் கட்டுரைகளையும் சர்வதேச கருத்தரங்குகள், பத்திரிகைகளிலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளார்.

* சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திலும் இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளின் கல்வி நிறுவனங்களிலும் வருகை தரு பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இவர் மிகச் சிறந்த நடிகர், நாடக எழுத்தாளர் என்பதோடு பல நாடகங்களை எழுதி, இயக்கியும் உள்ளார்.

* கூத்துகள் உள்ளிட்ட பிற கலைகளை வளர்க்க மாநாடுகள், கருத்தரங்குகளை நண்பர்களின் உதவியுடன் ஏற்பாடு செய்தார். தமிழுக்கு இவர் ஆற்றிய பணிகளை சிறப்பிக்கும் விதமாக தமிழக அரசு திரு.வி.க. விருது வழங்கியது. மேலும் பல அமைப்புகள் இவருக்கு பரிசுகளும் விருதுகளும் வழங்கியுள்ளன.

* பழகுவதற்கு இனிமையானவர், எளிமையானவர். அனைவரிடமும் ஒரே மாதிரியான அன்போடும், கனிவோடும் பேசுபவர். தீர்க்கமான சிந்தனை, ஆழ்ந்த அறிவு, சமூகம் சார்ந்த உண்மையான அக்கறையோடு வாழ்ந்த தமிழறிஞர் என்று போற்றப்படும் இவர் 2011-ம் ஆண்டில் தனது 79-ம் வயதில் காலமானார்.

[ நன்றி: http://tamil.thehindu.com  ]

தொடர்புள்ள பதிவு;
கார்த்திகேசு சிவத்தம்பி

கருத்துகள் இல்லை: