செவ்வாய், 18 ஜூலை, 2017

775. காந்தி - 9

2. ஜன்ம பூமி
‘கல்கி’


‘கல்கி’ யின் ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( தொகுதி -2) என்ற நூலில் வந்த இரண்டாம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]

காந்தி மகாத்மாவுக்கு இங்கிலாந்தில் பாரிச வாயு நோய் கண்டிருந்தபடியால் அவர் சைனிய சேவைக்குப் போக முடியாமற் போயிற்றல்லவா? டாக்டர் ஜீவராஜ் மேத்தா காந்திஜிக்கு மேற்படி நோய் நீங்கச் சிகிச்சை செய்தார். ஆனால் டாக்டர் குறிப்பிட்ட உணவு வகைகளை மகாத்மா உட்கொள்ள முடியவில்லை. நிலக்கடலை, வாழைப்பழம், எலுமிச்சப்பழம், தக்காளிப்பழம், திராட்சைப்பழம் - இவையே அப்போது மகாத்மாவின் முக்கிய உணவாக இருந்தன. பருப்பு வகைகளையும் தானியங்களையும் உட்கொள்ளுவதை அடியோடு விட்டிருந்தார். பாலும் சாப்பிடுவதில்லை.

நிலைமை இப்படியிருந்த பொது ஸ்ரீ கோகலே பாரிஸிலிருந்து வந்து சேர்ந்தார். காந்திஜி நோய்வாய்ப்பட்டிருந்தது ஸ்ரீ கோகலேயுக்குக் கவலை அளித்தது. உணவு சம்பந்தமாக டாக்டருக்கும் காந்திஜிக்கும் ஏற்பட்டிருந்த தகராறையும் கோகலே அறிந்தார். பழ உணவே சிறந்த உணவு என்னும் மகாத்மாவின் கொள்கையில் கோகலேயுக்கு நம்பிக்கை இல்லை. டாக்டர் சொல்லுகிறபடி காந்திஜி உணவு உட்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். நெடுநேரம் இந்த உபதேசத்தைச் செய்தார். கடைசியில் மகாத்மா யோசிப்பாதற்கு இருபத்திநாலு மணி நேரம் அவகாசம் கேட்டுப் பெற்றார்.

அன்றிரவெல்லாம் காந்திஜி தமது உணவுப் பரிசோதனையைப் பற்றியும் கோகலேயின் போதனையைப் பற்றியும் ஆலோசித்துக் கடைசியாக ஒரு சமரச முடிவுக்கு வந்தார். அந்த முடிவு வருமாறு; - தேக சுகத்தை மட்டும் முன்னிட்டுத் தாம் கைக்கொண்டிருந்த விரதங்களை டாக்டரின் யோசனைப்படி தளர்த்தி விடலாம். ஆனால் ஆத்ம சாதனத்தை முன்னிட்டு அனுசரித்த உணவுக்கட்டுபாடுகளைக் கைவிடக்கூடாது.

ஸ்ரீ கோகலேயிடம் மகாத்மா தமது முடிவைத் தெரிவித்தார். தானியங்களும் பருப்பு வகைகளும் உட்கொள்ளுவதாகவும் ஆனால் பாலும் மாமிசமும் சாப்பிடுவது அசாத்தியம் என்றும் சொன்னார். "பிரதிக்ஞையை மீறிப் பாலும் மாமிசமும் உட்கொள்ளுவதைக் காட்டிலும் மரணமே மேல் என்று கருதுகிறேன். தயவு செய்து என்னை மன்னிக்க வேண்டும்" என்று மகாத்மா கோகலேயிடம் கேட்டுக் கொண்டார்.

மகாத்மாவின் இந்த முடிவு ஸ்ரீ கோகலேயுக்குப் பிடிக்கவில்லை. ஆயினும் அவருடைய ஆத்ம சாதன நோக்கத்தையும் பிரதிக்ஞையில் உறுதியையும் கருதி டாக்டர் ஜீவராஜ் மேத்தாவிடம்"காந்தி ஒப்புக்கொண்ட வரையில் சரி. மேலும் அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம்" என்றார்.

டாக்டர் கூறியபடி காந்திஜி ஓரளவு உணவை மாற்றிக் கொண்டார். மேலுக்கு மருந்து தடவி டாக்டர் மேத்தா மகாத்மாவுக்கு சிகிச்சை செய்து வந்தார். ஆயினும் பலன் ஒன்றும் தெரியவில்லை.

டாக்டர் அல்லின்சன் என்னும் இயற்கை வைத்தியரின் யோசனைப்படி காந்திஜி பச்சைக் கறிகாய்களைச் சாப்பிடத் தொடங்கினார். அதை முழுதும் கையாண்டு பார்க்க உடல் நோய் இடங்கொடுக்கவில்லை.

டாக்ட‌ல் ஜீவ‌ராஜ் மேத்தாவோ தாம் சொல்லுகிற‌ப‌டி ம‌காத்மா முழுதும் கேட்டுக் க‌டைபிடித்தால் தான் நோயைக் குண‌ப்ப‌டுத்த‌ முடியும் என்று கூறினார்.

இந்த நிலையில் ஒரு நாள் மிஸ்டர் ராபர்ட்ஸ் மகாத்மாவைப் பார்க்க வந்தார். அவருடைய நோய் கடுமையாகியிருப்பதைக் கவனித்தார். "நீங்கள் சைன்ய சேவைக்காக நெட்லிக்குப் போகும் எண்ணத்தை விட்டுவிட வேண்டியது தான். இன்னும் கடுமையான குளிர்காலம் வரப்போகிறது. அதை உங்க‌ளால் தாங்க‌ முடியாது. நீங்க‌ள் இந்தியா தேச‌த்துக்கு உட‌னே திரும்பி விடுவ‌துதான் ந‌ல்ல‌து. அங்கே தான் உங்க‌ளுக்கு உட‌ம்பு ந‌ன்றாக‌க் குண‌ம‌டையும். அப்போதும் இந்த‌ யுத்த‌ம் ந‌ட‌ந்துகொண்டிருந்தால் நீங்க‌ள் உத‌வி செய்வ‌த‌ற்கு எத்த‌னையோ ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ள் கிடைக்கும்" என்று மிஸ்டர் ராபர்ட்ஸ் கூறியது சரியான யோசனையாக மகாத்மாவுக்குத் தோன்றியது.
---
+ஜன்ம தேசம் செல்வதற்காக மகாத்மா தம்முடைய தர்மபத்தினியுடன் கப்பல் ஏறினார். மிஸ்டர் காலன்பாக் ஜெர்மானியராகையால் அவர் இநதியா தேசம் போவதற்கு அநுமதிச் சீட்டு கிடைக்கவில்லை. எவ்வளவு முயன்றும் பயனில்லை.

காந்திஜி கப்பல் ஏறிப் பிரயாணம் செய்து சூயஸ் கால்வாயை அடைந்ததும் அவருக்கு உடம்பு பூரண சௌக்யம் அடைந்துவிட்டது. கடற்பிரயாணத்தின் தூய்மையான காற்றே தாம் குணமடைந்ததற்குக் காரணம் என்று மகாத்மா கருதினார்.

பத்து வருஷம் பிரிந்திருந்த பிறகு காந்திஜி ஜன்ம பூமியான இநதியாவுக்கு வந்து சேர்ந்தார். பம்பாய்த் துறைமுகத்தை அடைந்து கப்பலிலிருந்து இறங்கினார்.
---- ------- -----
போனிக்ஸ் ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் காந்திஜிக்கு முன்னாலேயே இந்தியா வந்து சேர்ந்திருந்தார்கள். தாம் இந்தியாவுக்கு வரும் வரையில் அவர்கள் ஸ்ரீ ஆண்ட்ரூஸின் யோசனைப்படி நடக்க வேண்டும் என்று மகாத்மா சொல்லியிருந்தார். அவர்களை ஸ்ரீ ஆண்ட்ரூஸ் முதலில் காங்ரி குருகுலத்துக்கு அழைத்துப் போனார். இந்தக் குருகுலம் புகழ்பெற்ற சுவாமி சிரத்தானந்தரால் ஸ்தாபிக்கப்பட்டு அவருடைய தலைமையின்கீழ் நடந்து வந்தது.

போனிக்ஸ் கோஷ்டியார் சிலகாலம் காங்ரியில் வசித்த பிறகு மகாகவி ரவீந்திரநாத தாகூரின் சாந்தி நிகேதனத்துக்குச் சென்றார்கள். இரண்டு இடங்களிலும் அவர்கள் மிக்க அன்புடன் நடத்தப்பட்டார்கள்.
---- --------- -----

மகாத்மா பம்பாயில் இறங்கியபோது போனிக்ஸ் ஆசிரமத்தார் சாந்திநிகேதனத்தில் இருந்தார்கள். அவர்களிடம் போய்ச் சேரவேண்டும் என்று மகாத்மா மிக்க ஆர்வம் கொண்டிருந்தார். ஆயினும் உடனே புறப்பட முடியாமல் அவருக்குப் பம்பாயில் சில அலுவல்கள் ஏற்பட்டன.

தென்னாப்பிரிக்காவில் மகாத்மா நடத்திய சத்தியாக்கிரஹப் போரைப் பற்றிய விவரங்கள் இந்தியாவில் பரவி யிருந்தன. ஆகையால் மகாத்மாவுக்கு பல வரவேற்புகளும் உபசாரங்களும் நடந்தன.

ஸ்ரீ ஜெகாங்கீர் பெடிட் என்பவர் பம்பாயில் அப்போது வசித்த பார்ஸி கோடீசுவ‌ரர்க‌ளில் ஒருவ‌ர். அவருடைய ஜாஜ்வல்யமான அரண்மனையை யொத்த இல்லத்தில் ஒரு விருந்து நடந்தது. இந்த விருந்துக்கு பம்பாயின் பிரபல செல்வர்கலும் பிரமுகர்களும் வந்திருந்தார்கள்.எல்லாரும் நவநாகரிக உடை தரித்து வந்திருந்தார்கள். ஆனால் மகாத்மாவோ பழைய கர்நாடக கத்தியவார் பாணியில் இடுப்பில் வேஷ்டியும் உடம்பில் நீண்ட அங்கியும் தலைப்பாகையும் அணிந்திருந்தார். அவ்வளவு நாகரிக மனிதர்களுக்கு மத்தியில் காந்திஜி பேசிப் பழகுவதற்குத் திணறிப்போனார். பெடிட் மாளிகையின் பெருமிதமும் பிரகாசமும் அவரைத் திக்குமுக்காடச் செய்துவிட்டன. ஆயினும் ஸர் பிரோஸிஷா மேத்தாவின் அன்பும் ஆதரவும் காந்திஜி ஒருவாறு சமாளித்துக் கொள்ள உதவி செய்தன.

பிறகு, குஜராத்திகள் மகாத்மா காந்தியைத் தங்கள் மாகாணத்தவர் என்று உரிமை பாராட்டி உபசார விருந்து நடத்தினார்கள். குஜராத் மாகாணத்தவராகிய ஜனாப் ஜின்னாவும் இந்த விருந்துக்கு வந்திருந்தார். காந்திஜியை வரவேற்றுப் பாராட்டி ஆங்கிலத்தில் இனிய சொற்பொழிவு ஒன்றும் செய்தார். விருந்துக்கு வந்திருந்த இன்னும் பலரும் ஆங்கிலத்திலேயே பேசினார்கள்.

ஆனால் மகாத்மா காந்தி உபசாரத்துக்குப் பதில் சொல்ல வேண்டிய சமயம் வந்தபோது "இங்கே எல்லாருக்கும் குஜராத்தி தெரியுமாதலால் குஜராத்தியிலேயே பேச விரும்புகிறேன்! நம் தாய்மொழி இருக்கும் போது அதைப் புறக்கணித்து விட்டு இங்கிலீஷில் ஏன் பேச வேண்டும்?" என்று ஆரம்பித்தார். காந்திஜியின் தாய்மொழிப்பற்றை அனைவரும் பாராட்டினார்கள். இங்கிலீஷில் பேசுவதே கௌரவம் என்று கருதப்பட்டுவந்த காலத்தில் மகாத்மா துணிந்து குஜராத்தியில் பேசியதை மெச்சினார்கள். இந்த அநுப‌வ‌த்தினால் ம‌காத்மாவுக்கு இந்தியாவில் தம்முடைய கொள்கைகளைப் பிரச்சாரம் செய்யலாம் என்னும் தைரியம் உண்டாயிற்று.

பம்பாயிலிருந்து மகாத்மா ஸ்ரீ கோகலேயைச் சந்திபதற்காக பூனாவிற்குப் புறப்பட எண்ணினார். பூனாவுக்கு புறப்படுவதற்கு முன்னால் பம்பாய் கவர்னரைப் பார்க்கும்படி கோகலேயிடமிருந்து தந்தி வந்தது. அப்போது பம்பாயின் கவர்னராயிருந்தவர் லார்ட் வில்லிங்டன். (பின்னால் இவர் சென்னை மாகாணத்தின் கவர்னராகவும் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகவும் பதவி வகித்தார்.)

லார்ட் வில்லிங்டன் வழக்கமான யோகஷேம விசாரணைகுப்பிறகு, "உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். இங்கே நீங்கள் அரசாங்க சம்பந்தமான நடவடிக்கை எதுவும் தொடங்குவதாயிருந்தால், முதலில் என்னை வந்து பார்த்துப் பேசி விட்டுத் தொடங்க வேண்டும்!" என்று கூறினார்.

அதற்குக் காந்திஜி, " நான் அனுசரிக்கும் சத்தியாக்கிரஹ முறையில், எந்தக் காரியமானாலும் எதிராளியின் மனதை அறிந்து ஒத்துப்போக முயற்சி செய்வதே முதல் விதியாகும். ஆகையால் கண்டிப்பாகத் தங்களுடைய யோசனையைக் கடைப் பிடிப்பேன்" என்றார்.

"உங்களுக்கு எப்போது விருப்பமோ அப்போதெல்லாம் நீங்கள் என்னை வந்து பார்க்கலாம். என்னுடைய அரசாங்கம் வேண்டுமென்று அநீதி எதுவும் செய்யாது என்பதைக் காண்பீர்கள்" என்றார் லார்ட் வில்லிங்டன் துரை.

இதே லார்ட் வில்லிங்டன் 1932 -ஆம் வருஷத்தில் இந்தியாவின் இராஜப் பிரதிநிதியாக வந்திருந்தபோது மகாத்மா அவரைப் பேட்டி காண அநுமதி கேட்டார். லண்டன் வட்டமேஜை மகாநாட்டினால் பயன் விளையாமல் மகாத்மா திரும்பி இந்தியாவிற்கு வந்ததும் மறுபடியும் சத்தியாக்கிரஹப் போர் தொடங்குவதற்கு முன்னால் தம்முடைய கட்சியை எடுத்துச் சொல்லி, சமரசத்துக்கு வழி உண்டா என்று பார்க்க விரும்பினார். இதற்காகவே மகாத்மா லார்ட் வில்லிங்டனின் பேட்டி கோரினார். ஆனால் வில்லிங்டனோ மகாத்மாவைப் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் விரோதியாகக் கருதி, பேட்டி கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார்!

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் நன்மைக்குப் பாதகம் ஏற்படாத வரையில் பிரிட்டிஷார் நாகரிகமாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்வது வழக்கம். சாம்ராஜ்யத்துக்கு ஆபத்து என்று ஏற்பட்டால் பிரிட்டிஷாரின் தயை, தாட்சண்யம், நாகரிகம், மரியாதை எல்லாம் பறந்து போய் விடும்!



-----------------------------------------------------------

கருத்துகள் இல்லை: